Wednesday, December 9, 2009

Baba's Darshan To Tatya Saheb Noolkar.

தத்யா சாஹெப்பிற்கு பாபா தந்த தரிசனம்

தத்யா சாஹெப்பிற்கு பாபா எப்படி தரிசனம் தந்தார் என்பதை விளக்கும் நிகழ்ச்சி இது . லஷ்மண் கிருஷ்ணாஜி நூல்கர் என்பவர் பற்றி நாம் சாயி சரித்திரத்தில் படித்திருப்போம். அவர் பற்றி நமக்கு அவருடைய பேரனான ஸ்ரீ. ரகுநாத் விஸ்வநாத் நூலகர் என்பவர் மூலமே தெரிந்தது. அவர் சாமா என்பவர் தம் கைப்பட எழுதிய கடிதத்தையும், நானா சாஹேப் சாந்தோர்கர் என்பவருக்கு தத்யா சாஹெப் நூல்கர் எழுதிய கடிதத்தையும் காட்டினார். அந்த செய்திகளையும்பிற செய்திகளையும் ஒன்றிணைத்தே இது எழுதப்பட்டு உள்ளது.

தத்யா சாஹெப் உடல் நிலை மிகவும் மோசமாகிக்கொண்டே இருந்தாலும் அவர் அமைதியாகவே இருந்தார். அவர் தமக்கு மருத்துவ உதவி தருவதை விரும்பவில்லை. அவர் பாபாவிடமும் தான் பூரண நலம் அடைய பிரார்த்தனை புரிந்ததாகத் தெரியவில்லை. மிகவும் மோசமாகிக்கொண்டே போன உடல் நிலையிலும், கடுமையான உபாதையிலும் அவர் கலங்கவில்லை. அனைத்து உபாதைகளையும் பொறுமையாக, அமைதியாக சகித்துக் கொண்டார்.

அவரால் திரும்பிக்கூட படுக்க முடியாத நிலை. மற்றவருடைய துணை அதற்கு வேண்டி இருந்தது. அவர் பாபா பற்றிய செய்தியைத் தவிர வேறு எதையுமே கேட்க விரும்பவில்லை. சாயி நாமத்தை கூறிக்கொண்டே இருந்தாலும், மசூதியில் என்ன நடந்தது, பாபா என்ன கூறினார் என்பதையே கேட்டு அறிந்து கொண்டார். ஜல்கோன் என்ற இடத்தில் இருந்த அவருடைய தாயாரும், சகோதரர்களும் தம்மை அவர் எப்போது அழைத்தாலும் வந்து பார்க்கத் தயார் எனக் கூறினாலும் அவர் ''நான் எவரையும் பார்க்க விரும்பவில்லை'' என்று கூறிவிட்டார்.

சத்தே வாடா என்ற இடத்தில் படுக்கையில் கிடந்தவருக்கு அற்புதமான கனவு தோன்றியது. ஒரு நாளைக்கு இரண்டு முறை மட்டும் பாபா மசூதியில் இருந்து லெண்டிபாக் என்ற இடத்துக்கு நடந்து செல்வார். அது வாடாவின் பின்புற வழியாக செல்லும் பாதை. அப்போது பலரும் அந்த வழியாகச் சென்று பாபாவை தரிசிப்பார்கள். ஆனால் தத்யா சாஹெப்பிற்கு உடல் நிலை சரியாக இல்லாததினால் அது முடியாமல் போயிற்று. அவரால் பாபாவைப் பார்க்காமல் இருக்க முடியவில்லை. பாபாவைப் பார்த்து பல நாட்கள் ஆகிவிட்டனவே என எண்ணியவர், பொறுக்க முடியாமல் தன்னுடைய மகன் வாமனராவிடம் தனக்கு பாபாவைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலை அவரிடம் சென்று கூறுமாறு சொல்லி அனுப்பினார். அதைக் கேட்ட பாபா' அவன் என்னைப் பார்க்க விரும்புகிறானா? அல்லா அவனுக்கு அருள் புரிவார்' என்றார்.

வாமனராவ் மசூதிக்கு சென்றபோது அங்கு இரண்டு சிறுவர்கள் விளயாடிக் கொண்டு இருந்ததைக் கண்டார். சில நேரங்களில் பாபா சிறுவர்களுடன் விளையாடுவார், அவர்களைக் கொஞ்சி முத்தமிடுவார். சிரிக்கப் பேசி அனைவருக்கும் சிரிப்பு மூடுவார். அன்றும் அவர் அதே மூடில் இருந்தார். அப்போது அந்த கிராமத்தின் ஜோதிடரான லஷ்மண் மாமாஜி என்பவருடைய மகன் அப்பாஜி என்பவன் அங்கிருந்தான். அந்த நேரத்தில் ஒரு வியாபாரி துணிகளை விற்றபடி சென்று கொண்டு இருந்தபோது அவனை அழைத்த கிராமத்தினர் பேரம் பேசிக்கொண்டு இருந்தனர். பாபாவும் அவனிடம் சென்று தன தலைக்கு கட்டிக்கொள்ள ஒரு துணியை வாங்கிக்கொண்டார்.

அவர் திரும்பி வந்ததும் அப்பாஜி பாபாவிடம் தான் அந்த துணியை கட்டிக்கொள்ளலாமா எனக் கேட்க பாபா சிரித்தபடி அதை அவனுக்கு தந்தார். அவனும் அதை தலையில் கட்டிகொண்டபின் பாபாவை நமஸ்கரித்துவிட்டு எழுந்தான். பிறகு அந்த துணியை அவிழ்த்து பாபாவின் தலையில் வைக்க இருவரும் சிரித்து மகிழ்ந்தனர். அப்போது பாபா செல்லமாக அவன் கன்னத்தில் தட்டினார். அதன் பின் பாபா சும்மா இருக்காமல் அதை மீண்டும் அப்பாஜியின் தலையில் வைக்க , அப்பாஜி தன் தலையில் இருந்து அவர் தலையில் வைக்க மாறி மாறி இருவரும் விளையாடினர். அதன் பின் வாமனராவ் திரும்பி சென்று விட்டார். திரும்பி வந்த வாமனராவிடம் மசூதியில் என்ன நடந்தது என தத்யா சாஹெப் கேட்க ஒன்றும் விசேஷமாக இல்லை, அனைத்தும் என்றும் போலத்தான் இருந்தது என அவர் கூற தத்யா சாஹெப் விடவில்லை, வேறு என்ன நடந்தது என மீண்டும் மீண்டும் கேட்க, அப்பாஜி மற்றும் பாபாவிற்கு இடையே நடந்த விளையாட்டி பற்றி வாமனராவ் கூற தத்யா சாஹெப் கண்களில் இருந்து கண்ணீர் பொலபொலவென வடிந்தது. சற்று நேரம் அவர் பேசவே இல்லை. அதன் பின் அவனிடம் கூறினார், ''பாபாவிடம் சென்று எனக்கு அவர் தரிசனம் கிடைத்து விட்டதுஎன்பதைக் கூறு'' .

எதற்காக அப்படிக் கூறுகின்றீர்கள் என வாமனராவ் தத்யா சாஹெப்பிடம் கேட்டபோது அவர் தான் அதே காட்சியை அங்கு இருந்தபடியே கண்டதாகக் கூறினார். அந்த சிறுவன் துணியை அல்ல, ஜாஸ்வந்தி மலரை பாபாவின் தலையில் வைக்க அந்த மலரை பாபா அவன் தலையில் வைத்ததையும், செல்லமாக அவன் கன்னத்தில் தட்டியதையும் பார்த்ததாகக் கூறினார். இப்படியாக படுத்த படுக்கையில் இருந்த பாபா தத்யா சாஹெப் ஆசையை கனவு போலக் காட்டி நிறைவேற்றினார்.
(Translated into Tamil by Santhipriya )

Image and video hosting by TinyPic© Shirdi Sai Baba Stories In Tamil.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.