Wednesday, January 18, 2012

Sai Baba Saved Me and My 30 Week Old Premature Baby -Experience By Reena.

பாபா என்னையும் எனது 30 வாரமே

சாய் ராம் !
அனைவருக்கும் சாய் தின நல்வாழ்த்துக்கள்.
சகோதரி ரீனா அவர்கள் என்னுடன்  பகிர்ந்து கொண்ட  நெகிழ்ச்சியான சாய் அனுபவத்தை அனைவரிடமும் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். இதனால் பாபாவின் மீது பக்தர்கள் கொண்டுள்ள நம்பிக்கை அதிகமாகி நம் பாபா எத்தனை கருணையானவர்  என அவர்களை மேலும் நினைக்கத் தூண்டும்.  இதற்கு பாபா மீது பக்தர்கள் கொண்டுள்ள நம்பிக்கை மட்டுமில்லாது, அவர்களுக்கு பாபா மீது கொண்டுள்ள அளவு கடந்த அன்பும், பாசமும் ஒரு காரணம். பாபா சரித்திரம் கூறுவதாவது "எவன் ஒருவன் என் மீது மாறாத பக்தியும்,உண்மையான நம்பிக்கையையும் கொண்டு தினந்தோறும் என்னை தியானிக்கிறானோ அவன் எல்லாவித துன்பங்களிலிருந்தும் முழுமையாக விடுபடுவான்" . இதுவே சத்தியம் என்பது போல கடவுள் நம் பக்தியை பரீட்சித்து, உரிய நேரத்தில் நமக்கு துணை புரிவார் என்பதற்கு சான்றாக  உள்ளது ரீனா வாழ்வில் பாபா, அவரையும் அவர் குழந்தையையும் ஆசிர்வதித்த சம்பவங்கள் .
சகோதரி ரீனா அவர்களின் முந்தைய குழந்தை அனுபவம் படித்த ஒருவரின் நம்பிக்கை பாபா மீது அதிகம் ஆகி, அவர் பொறுமையும், பக்தி மாறாமலும் இருந்த காரணத்தால் அவருக்கும் பாபா அருள் புரிந்ததாக மின்னஞ்சல் மூலம் எனக்கு செய்தி அனுப்பி இருந்தார்.
இதை படித்து அனைவரும் கருத்து தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டு கொள்கிறேன். ஜெய் சாய் ராம்.
மனிஷா
----------------------------------------------------------
சகோதரி மனிஷா
மீண்டும் ஒருமுறை எனக்கு ஏற்பட்ட சாய் அனுபவத்தை நான் சாய் பக்தர்களிடம் பகிர்ந்துக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் செய்து வரும்  இந்த மகத்தான  சேவைக்கு வெறும் வார்த்தைகளால் நன்றியை கூற முடியாது.  இந்த அனுபவம் எவ்வாறு சாய் பகவான் எனது 30 வாரம் மட்டுமே ஆன  குழந்தையையும் ( எனக்கு 30 வாரத்திலேயே குழந்தை பிறந்துவிட்டது ) , என்னையும் காப்பாற்றினார் என்பது பற்றி ஆகும்.
பாபாவின் அருளால் எனக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்து அவனுக்கு 18 மாதமும் ஆகிவிட்டது (சாய் பகவான் அருளால் அவன் பிறந்த அனுபவத்தையும் முன்னரே பகிர்ந்திருக்கிறேன் ).நாங்கள் அமெரிக்காவிலேயே தங்க முடிவு செய்து இருந்ததினால்  வேலை தேட ஆரம்பித்தேன்.ஆனால் என்னுடன்  இங்கே இருந்த  பெற்றோர்களுக்கு பெரிய குழப்பமே நான் வேலைக்கு செல்வதா இல்லை வீட்டிலேயே தங்கி குழந்தையை கவனிப்பதா என்பதே .
முதல் குழந்தை பிறக்கும் முன் தொடர்ந்து வேலை செய்த நான், குழந்தை பிறந்து பின் வேலையை விட்டு குழந்தை பராமரிப்பில் முழு கவனம் செலுத்தி வந்தேன்.  குழந்தைக்கு ஒரு  வயதுக்கு மேல் ஆகிவிட்டதினால் என் கணவரின் பளுவை குறைக்க எண்ணிய நான் மீண்டும் வேலை தேட ஆரம்பித்தேன். ஆனால் அந்த முடிவையும் பாபாவிடமே விட்டிருந்தேன்.
பாபா விரும்பினால் எனக்கு வேலை கிடைக்கட்டும் என எண்ணியிருந்தேன். சிறிது நாட்களுக்குப் பின்  பாபாவின் அருளால் சுலபமாக எனக்கு வேலை கிடைத்தது. ஆனால் நான் நியூ ஜெர்சியில் இருந்து நியூயார்க் வரை அதிக தூரம் வேலை நிமிர்த்தமாக பயணம் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன். வேலை சேர்ந்த ஒரு மாதத்திலேயே  நான் மீண்டும் கர்பமாக இருப்பதை உணர்ந்தேன் . இரண்டாவது குழந்தை பற்றி நாங்கள் யோசித்து கொண்டிருந்த தருமனத்தில் இத்தனை விரைவாக அது நடக்கும்  என நாங்கள் எதிர்பார்க்கவில்லை. எனக்கு மகிழ்ச்சியால்  குதிப்பதா இல்லை அதிர்ச்சி அடைவதா என்பது  தெரியவில்லை. எப்படி இந்த 3 மணி நேர பயணத்தில் என்னால் வேலையையும் செய்து கொண்டு  மற்றும் தாய்மையையும்  சரிவர கவனிக்க முடியும் என்ற குழப்பம் அதிகமாக வாட்டியது.
இரண்டு விஷயங்களையும் ஒரே நேரத்தில் கவனிப்பது என்பது கண்டிப்பாக எனக்கு ஒரு சவாலாகவே அமையும் என தெரியும். மற்றவர் ஆதரவில் வாழும் (Dependent)  விசாவில் வேலை வாங்கிய எனக்கு வேலையை விடுவது  அத்தனை சுலபமான ஒன்றாய் இருக்காது. எத்தனையோ பெண்கள் கர்பமாக இருந்தாலும்  தன்னுடைய அலுவலக வேலையும் தொடர்ந்து கொண்டு இருக்கும்போது என்னால் மட்டும் ஏன் அந்த இரண்டையும்  ஒரு சேர ஏற்றுக் கொண்டு வேலையை தொடர்ந்து கொண்டு இருக்க  முடியாது என்ற எண்ணம் தோன்றியது. எல்லாமே பாபாவின் செயல். நான் வேலையில் சேர்ந்த உடனேயே  உடனேயே கர்பம் அடைய வேண்டும் என்பது பாபாவின் விருப்பம்.எனவே எல்லாம் அவர் செயல் என நினைத்து எனது வேலையை தொடர்ந்தேன். நம்பிக்கைதானே வாழ்கை.

முதல் முன்று மாதம் கர்பத்தினால் ஏற்பட்ட உடல் கோளாறான மசக்கையின் காரணமாக வேலைக்கு செல்வது மிகவும் கடினமாகவே இருந்தது. விமானத்திலும் சரி, அலுவலகத்திலும் சரி நினைத்த எதிர்பாராத  நேரங்களில் வாந்தி,  குமட்டல் என பிரச்சனைகள் தொடர்ந்து கொண்டு இருந்தன.  மனம் சோர்வடைய  வேலையை விட்டு விடலாமா என்று தோன்றியது.  
இதன் நடுவில் எனக்கு அல்ட்ரா ஸ்கேன் செய்யப்பட்டது. அதில் என்  கர்ப நிலைமை சிக்கலாக உள்ளதாக தெரிய வந்தது.  என் கர்பப் பையில் பைபராய்ட் எனும்  (Fibroid) கட்டி போன்று உள்ளதாக  மருத்துவர் கூறினார்.  என் கணவரிடம் வேலையை விட்டு  விடுகிறேன் என கூறிக் கொண்டே இருந்தேன். ஆனால் அவர் சேர்ந்து இரண்டு மாதத்திலேயே வேலையை விடுவது அத்தனை சுலபம் இல்லை என எனக்கு அறிவுரை கூறினார். இதற்கு மேலும் இதை பற்றிய சிந்தனையை தொடர்ந்தால் அனைவருக்கும் சங்கடம் என நினைத்தேன்.  மேலும் எதிர்காலத்தில் இந்த விசா கிடைப்பது கடினம் என்பதாலும், எல்லா பெண்களினாலும் ஏற்றுக் கொள்ள முடிந்த இப்படிப்பட்ட பிரச்சனையில் நான் மட்டும்  பின் வாங்குவது புத்திசாலித்தனம் இல்லை என்பதை எடுத்துரைத்த என் கணவரின் கருத்து சரியாகவே பட்டது. நாம் நினைத்த பொழுது வேலையில் சேருவதும்  நினைத்த மாத்திரத்தில் வேலையை விடுவதும் மற்ற நாடுகளின் சட்ட முறைபடி சில சமயத்தில் எளியதாக இருக்காது.
ஒவ்வொரு  நாளையும் கழிப்பது எனக்கு மிக கடினமாகவே இருந்தது. நலமாக இருக்கும்போது வேலைக்கு செல்வதும் , உடல் ஒத்துழைக்காத  நேரத்தில்  வேலைக்குச் செல்லாமல் வீட்டில் இருக்கவும் ஆரம்பித்தேன். ஆனாலும் பாபா மீதான என் நம்பிக்கை சிறிதும் குறையவில்லை. தினமும் எப்போதும் போலவே அவரை வழிபட்டேன். வீட்டின் அருகிலேயே வேலை கிடைக்க வேண்டும் என அவரை வேண்டிக் கொண்டேன்.
தொலை தூர பயணம், வேலை, கர்பம், கருப்பையில் சிக்கல் என அனைத்தையும் ஏன் பாபா ஒரே நேரத்தில் எனக்கு கொடுத்தார் என எனக்குள் நானே கேட்டுக் கொண்டே இருந்தேன். ஆனாலும்  "என்னிடம் சரணாகதி அடைந்தவர்களை நான் கவனித்துக் கொள்வேன்.  நான் இருக்க பயம் ஏன்" என்ற பாபாவின் வார்த்தைகள் எப்போதுமே என் மனதில் நீங்காமல் இருந்தது.   நான் வேலையை விட்டு விட வேண்டும் என பாபா நினைத்தால், அலுவலகத்திலேயே  யாராவது ஒருவர் மூலம்  என்னை வேலையில் இருந்து நேக்க ஏற்பாடு செய்யட்டும்,  இல்லை என்றால் மருத்துவர் வேலையை விடுமாறு சொல்லட்டும். அதுவரை வேலையை விடப்  போவதில்லை என மனதில் தீர்மானித்தேன். பாபாவின் சரித்திரத்தில் வரும்  ''ஒரு இலைக் கூட நான் இன்றி அசையாது" என்ற வரியை நான் எப்போதும் நினைத்து கொள்வேன்.
நாட்கள் கடந்தது. எனது உடல் நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது.  வீட்டில் இருந்தவாறு சிறிது நேரம் மட்டுமே செய்து வந்த  வேலைக்கே மேலதிகாரியிடம் இருந்து பாராட்டு பெற்றேன். புதுப் புது வேலைகள் எனக்கு கொடுக்கப்பட்டன. அதை முழு ஆர்வத்துடன் செய்தேன். எனது உடல் நல மாற்றத்திற்காக பாபாவிற்கு நன்றி கூறினேன்.பாபாவின் தெய்வீக அலையை உணர்ந்தேன். எனது கருப்பை கட்டியும் கணிசமாக வளர்ந்துக் கொண்டிருந்தது. ஆனால் வலி எதுவும் இல்லாமல் இருக்கும்வரை அதற்க்கு வேறு வைத்தியம் செய்ய வேண்டாம் என மருத்துவர் கூறி விட்டார்.

ஏழாவது  மாதம் என் இடது காலின் மேற்புறம் வலி ஏற்பட்டது .நான் இது எதோ சதை பிடிப்பு என சாதாரணமாக இருந்து விட்டேன். பாபாவின் அருளை பாருங்கள். நான் மருத்துவரை பார்க்க வேண்டிய நாள் வெள்ளிக் கிழமை  இருந்தது. ஆனால் அன்று எனக்கு எதோ வேலை இருந்தது என நானே அதை அடுத்த செவ்வாய் கிழமைக்கு தள்ளிப் போட்டுக் கொண்டேன் . ஞாயிறு அன்று தொடங்கியா வலி  திங்கள் செவ்வாய் என  தொடர்ந்தது. கர்பிணி பெண்கள் வலிக்காக சாப்பிடும்  மாத்திரைகலை சாப்பிட்டும்  வலி குறையவில்லை. செவ்வாய் அன்று மருத்துவரை சந்தித்த போது எதேச்சையாக கால் வலி பற்றி கூறினேன். மருத்துவர் உன்னிப்பாக கவனித்து வலி வந்த உடனேயே மருத்தவமனை வராமல் இருந்ததற்காக  கடிந்து கொண்டு எனக்கு சில பரிசோதனைகள்  செய்தார்.  அவற்றில் எந்தக் கோளாறும் இல்லை என்பதினால்  வீட்டிற்கு அனுப்பினார். கர்ப்ப காலத்தில் வரும் கால் வலி பிரசவ வலி சம்மந்தப்பட்டதாக இருக்கும் எனக் கூறினார்.
எனக்கு எந்த பிரச்சனையும்  இல்லை என்றாலும், குழந்தை நலமாக இருக்கிறது என உறுதி செய்ய பேட்டல் மானிடரிங் (Fetel Monitoring) என்ற பரிசோதனை செய்ய வேண்டும் எனக் கூறினார். மற்ற பணியாளர்கள் என் கால் வலி பற்றிக் கூறாததால் என் மேல் கோபம் அடைந்து டெஸ்ட் செய்வதில் ஆர்வம் காட்டவில்லை எனினும் மருத்துவரே எல்லா சோதனைகளையும் செய்தார். மீண்டும் அதிர்ச்சி தகவல், அதாவது எனக்கு ஏற்பட்டது கால் வலி இல்லை பிரசவ வலி. நான் பிரசவ வலியில் இரண்டு நாள் வீட்டில் இருந்து உள்ளேன் . முதலில் கூறியபடி நான் வெள்ளிக் கிழமையே மருத்துவரை வந்து பார்த்திருந்தால் அடுத்த இரண்டு நாட்களில் வந்த பிரசவ வழியை உணராமல் கால் வலி என  நான் மாத்திரையை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு இருந்திருப்பேன். பாபாவின் மகிமையை எண்ணி சிலிர்த்தேன்.  பக்தர்களுக்கு உரிய நேரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை கவனித்து  சரியான நேரத்தில் பாபா அருள் புரிவார்.
ஏழாவது   மாதத்தில் குழந்தை பிறந்தால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படக் கூடாது என நினைத்த மருத்துவர் சில மருந்துகளை கொடுத்து வீட்டிற்கு அனுப்பினார். அடுத்த நாளே மீண்டும் வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டேன். இந்த முறை அட்மிட் ஆனது பிரசவத்திற்காக. மருத்துவமனைக்கு புறப்படும் போது  பாபாவின் உடியை  கையில் எடுத்துக் கொண்டு பிரசவ அறை செல்லும் வரை வைத்திருந்தேன்.  பின் அவசர சிகிச்சை மூலம் எனக்கு பிரசவம் பார்க்கப்பட்டு பாபாவின் அருளால் பெண் குழந்தையை பெற்றேடுத்தேன்.
பிறந்தக் குழந்தை 30 நாட்களுக்கு முன்பே பிறந்திருந்தாலும் எந்தவிதமான மூச்சு திணறல் பிரச்சனையும் அதற்க்கு ஏற்படவில்லை. எந்த பிரச்சனையையும் ஏற்படுத்தாததால் , கர்பப்பையை எடுக்க தேவையில்லை என மருத்துவர்  மகிழ்ச்சியுடன் கூறினார்.  உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கு  இந்த பிரச்சனை இருந்ததாகவும்  கூறினார். ஆனால் எல்லாமே பாபாவின் அருளால் நன்மையில் முடிந்தது.
பின் குழந்தை இரண்டு  மாதம் விஷேச சிகிச்சை பிரிவில் ( Neonatal intensive care unit-NICU) வைக்கப்பட்டு வந்தாள்.  கொஞ்சம் கொஞ்சமாக எடை அதிகமாக  டிசம்பர் 30 ம் தேதி வீட்டிற்கு எடுத்து வந்தோம். சில காரணங்களினால் எங்களுடன் என் அம்மாவோ , அத்தையோ யாருமே தங்க முடியாத சூழ்நிலை இருந்தது என்றாலும்  நான் வீடு திரும்பும்வரை எனது மகனை பேணி வளர்த்து  வந்த பெண்மணியும் என் மகனை அன்புடன் கவனித்துக் கொண்டு இருந்தார்.  அது மட்டும் அல்லாமல் அவர் என் நலனிலும் அக்கறைக் காட்டி  பார்த்துக் கொண்டார். சமையல் மட்டும் இன்றி  என் உடல் நலத்திலும் அக்கறைக் காட்டி என்னை நல்ல முறையில்  கவனித்துக்  கொண்டார்.
எங்களுக்கு நெருக்கமான குருஜி ஒருவர் இந்தியாவில்  இருக்கிறார். அவர் என்னிடம் ஒருமுறை 'பிரசவத்திற்கு பின் உனது குழந்தையை யார் பார்த்துக் கொள்வார்கள்?'  எனக் கேட்டார். நான் சிறிதும் யோசிக்காமல் 'பாபா' என்றேன். அந்த பதிலையே தான் எதிர்பார்த்ததாக என்னிடம் அவர் புன்முறுவலுடன் கூறினார்.
உண்மையாக பாபா என்ற ஒருவர் இருக்கும் போது  வேறு யாரும் நமக்கு தேவையில்லை. பக்தர்களை அவர் ஒரு போதும் கை விடுவதில்லை. எந்த நேரத்தில் எது செய்ய வேண்டும் என்பது அவருக்கு தெரியும்.
என் வாழ்ஜ்கையில் நடைபெற்ற அனைத்து  சம்பவங்களுமே  எனக்கு அதிர்ச்சி தருபவையாக அமைந்தவைதான்.  என்றும்  கூட அவற்றை நினைத்தால்  எனக்கு சரியாக தூக்கம் வராது. என்றாலும் பாபாவிற்கு நன்றி கூறிக் கொண்டே இருப்பேன்.மருத்துவர் கட்டி வளர்ச்சியை பற்றி கூறியது என்வென்றால், ஒரு குழந்தையின் தலையின் அளவில் கட்டி இருந்து இருக்கிறது. அதாவது கருப்பையில் மூன்றில்   ஒரு பங்கு கட்டி வளர்ந்து, குழந்தைக்கு தேவையான இடத்தை கொடுக்காமல் இருந்து இருக்கிறது.
சில சமயங்களில் ஏன் பாபா கஷ்டங்களை கொடுக்கிறார் பிறகு தக்க சமயத்தில் வந்து உதவுகிறார் என எண்ணி பார்ப்பதுண்டு. அதற்கெல்லாம் விடை, நம் பாவங்களுக்கான கர்ம வினைகளை நாம் அனுபவித்தே தீர வேண்டும்.
அது முன்ஜென்ம பாவமோ இல்லை இந்த ஜென்மத்தில் செய்யும் பாவத்தின் தண்டனையோ . சாய் சரித்திரத்தின் 26 ஆம்  பகுதியில் பாபாவின் பக்தரான பூனா ஸ்ரீ கோபால் நாராயண்  அம்பேத்கர் என்பவர் கதையில் "கனிகளை நீ சுவைக்க வேண்டும், அது புளிப்போ இனிப்போ, அந்த வேலை முடியவில்லை எனில் அதை முடிக்க மறு ஜென்மம் எடுக்க வேண்டும்" என்று  வருகின்றது . மேலும் இன்னொரு பாபா பக்தரான மருத்துவர் பிள்ளை என்பவர் சிலந்தி நோயால் அவதிப்பட்ட  போது, இந்த நோயால் இறப்பதா இல்லை இதை அனுபவிக்காமல் இறந்து பாபா தரும் பத்து ஜென்மத்திற்கு இந்த நோயை அனுபவிப்பதா எனக் கேட்பார்.  அதற்கு பாபா 10 நாட்களில் முடிய வேண்டிய கர்மவினையை மருத்துவரான பிள்ளை ஏன் பத்து ஜென்மங்களுக்கு தள்ளி போடுகிறான் எனக் கூறுவார். அதாவது கர்ம வினை பலன்களை நாம் மறுக்க முடியாது. ஆனால் முழுவதும் பாபாவிடம் சரண் அடைந்தால் அவர் குழந்தைகளை அவர் பாதுகாத்துக்  கொள்வார். எனது இரு குழந்தைகளும் பாபாவின் ஆசிர்வாதத்தால் கிடைத்தவர்கள் . ஒவ்வொரு முறையும் அவர்களை காணும் போது, அவர்கள் பாபாவை நினைவுபடுத்துகிறார்கள்.
என்னுடைய இந்த ஜென்மத்தில் பாபா எனக்கு நிறைய நன்மைகளை செய்திருக்கிறார்.15 வருடங்களுக்கு முன் இருந்த தற்கொலை முயற்சிக்கான எண்ணங்களை, சரியான வாழ்க்கை துணையை அறிமுகப்படுத்தியதன் மூலம் அகற்றினார். என் கணவரின் விசா பிரச்சனையை விலக்கி நல்ல வேலை, அழகான பிள்ளைகளுடன் முழுமையான வாழ்க்கையை அளித்துள்ளார்.
பாபாவை நான் முழுமையாக சரணடைய பாபாதான் கற்றுக் கொடுத்தார். எந்தவித சுக துக்களிலும் அவரை மனதார நினைத்து தியானிக்க செய்தார். வாழ்க்கையின் உண்மை நிலையை எடுத்துரைத்தார். என் மனதை பக்குவபடுத்தினார். தீய எண்ணங்களை வெளியே அகற்றினார்.
எத்தனை நன்றிகளை உனக்கு நான் கூறினாலும் அவை போதாது  பாபா . உனக்கு மிக்க நன்றி பாபா .
- ரீனா
(Original text condensed and Translated into Tamil by :-Ramya aymar and
Edited and published by Santhipriya )

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.