Tuesday, January 31, 2012

Shirdi Padayathra Experience- Sachin Nath

ஷீரடி பாதயாத்திரை அனுபவம் 


சாய் ராம் !
அனைவருக்கும் சாய் தின நல்வாழ்த்துக்கள்
பாபாவின் பக்தரான சச்சின் அவர்களின் ஷீரடி பாதயாத்திரை அனுபவம் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.இது ஷீரடிக்கு பாதயாத்திரையாக செல்ல விரும்பும் பக்தர்களுக்கு உதவியாகவும்,ஒரு வழிகாட்டுதலாகவும் இருக்கும்.மேலும் இங்கு அவர் அனுபவத்தின் படங்கள் மற்றும் படக் காட்சிகள் இணைக்கப்பட்டுள்ளன.
மனிஷா 

சாய்ராம்
நான் ஹைதராபாத்திலிருந்து சச்சின் எழுதுகிறேன்.மும்பையிலிருந்து ஷீரடிக்கு பாதயாத்திரையாக சென்ற அனுபவத்தை இங்கே அளித்திருக்கிறேன்.மேலும் இது, பாதயாத்திரையாக செல்ல நினைக்கும் பக்தர்களுக்கு எது செய்ய வேண்டும் எது எல்லாம் செய்யக் கூடாது என தெரிந்துக் கொள்ள ஒரு வாய்ப்பாக அமையும் என நம்புகிறேன்.இதில் பாதயாத்திரையின் போது எடுக்கப்பட்ட படங்களையும் ,படக்காட்சிகளையும் கொடுத்துள்ளேன்.நான் கொடுத்துள்ள படங்களையும் இந்த தளத்தில் இணைத்தால் படிக்கும் பக்தர்களுக்கு ஆர்வமாக இருக்கும் என நிர்வாகத்தைக் கேட்டுக் கொள்கிறேன்.
எனது கைபேசி எண்ணையும்,மின்னஞ்சல் முகவரியும் கொடுப்பதால் எனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை என தெரிவித்துக் கொள்கிறேன். இதனால் பக்தர்கள் மேலும் பல தவல்களை என்னிடம் நேரிடையாக பெற்றுக் கொள்ளலாம்.எனது கைபேசி எண் 09666682162
விரைவில் எனது அனுபவத்தை படங்களுடன் இந்த தளத்தில் காண்பேன் என நம்புகிறேன்.
 சச்சின்
  

ஷீரடி பாதயாத்திரை - 2012
2010 ம் வருடம் நான் ஷீரடிக்கு சென்றிருந்த போது நாசிக்கிலிருந்து ஷீரடிக்கு சுமார் 100 கிமீ தூரம் பாதயாத்திரையாக பயணம் செய்து வந்த பக்தர்களின் கூட்டத்தை கண்டேன். அதன் பின் மும்பையில் இருந்து ஷீரடிக்கு பாதயாத்திரையாக செல்லும் பக்தர்களை பற்றி இணையதளம் ஒன்றில் பார்த்தேன்.அதில் நானும் பங்குக் கொள்ள விரும்பினேன்.ஆனால் நான் ஹைதராபாத்தில் இருப்பதால் மும்பை பாதயாத்திரை குழுவினருடன் தொடர்பு கொள்ள மிகவும் கடினமாக இருந்தது. மேலும் அதை பற்றி போதிய அளவு தகவல்கள் எந்த இணையதளத்திலும் இடம்பெறவில்லை.
அதனால் நான் Fropper,indiadivine.org , shirdisaibabkrip.org போன்ற பல இணையதளங்களை பயன்படுத்த ஆரம்பித்தேன். அதை பார்த்து யாரவது எனக்கு தகவலை கொடுத்து உதவ முன் வருவார்கள் அல்லது என்னுடன் பாதயாத்திரைக்கு கலந்துக் கொள்ள நினைப்பார்கள் என நம்பி இருந்தேன்.ஆனால் ஜூலை 2011 வரை எந்த தகவலும் இல்லை. பின் நிவாஸ் என்ற ஒரு முகம் தெரியாத நண்பர் என்னை தொலைபேசியில் அழைத்து இன்னும் இரண்டு நாட்களில் ஒரு குழுவினர் பாதயாத்திரை செல்லவிருக்கிறார்கள் என்ற தகவலை அளித்தார். ஆனால் மிக குறுகிய காலத்தில் திட்டமிடுவது மிகவும் சிரமமாக இருந்தது. பணியில் இருந்து இரண்டு நாட்களுக்குள் இரண்டு வாரம் விடுமுறை கேட்பது சுலபாக இருக்காததால் அவரே இன்னொரு குழு டிசம்பர் மாதத்தில் செல்லும் என்ற தகவலையும் கூறினார்.
பின் நிவாஸ் அவர்களை நான் நவம்பர் மாத இறுதியில் அழைத்து பாதயாத்திரை பற்றி கேட்ட போது டிசம்பர் 1ம் தேதி பாதயாத்திரை பயணம் ஆரம்பமாகும் என்று கூறினார். இந்த சமயமும் குறுகிய கால இடைவெளி இருந்ததால் நான் பாதயாத்திரைக்கு என்னை தயார் செய்து கொள்ள ஆரம்பித்தேன். என் பாதயாத்திரை விருப்பத்தை பற்றி ஏற்கனவே அறிந்திருந்த எனது உறவினர் ஒருவர் கிரண் பட்டேல் என்ற ஒருவரை பற்றியும், அவர் வருடாவருடம் ஷீரடிக்கு பாதயாத்திரையாக செல்வதை வழக்கமாக வைத்திருப்பதை பற்றியும் கூறினார்.அந்த பாதயாத்திரை குழுவினரில் பெரும்பாலானோர் L & T நிறுவனத்தை சேர்ந்தவர்கள்.மேலும் அதில் 250 முதல் 300 பேர்கள் பாதயாத்திரையாக 6 நாட்களில் பயணத்தை முடிக்கிறார்கள் எனவும் தெரியவந்தது.ஒரே கம்பெனியிலிருந்து அத்தனை பேர்களும் ஒரே சமயத்தில் அதிக நாட்கள் விடுமுறை எடுக்க இயலாது என்பதால் அவர்கள் 6 நாட்களுக்கு திட்டமிட்டிருந்தது எனது அலுவலக பணிக்கும் பொருத்தமாக இருந்தது.அவர்கள் ஜனவரி 2012 ம் வருடம் அடுத்த பாதயாத்திரை செல்ல இருந்தார்கள்.மேலும் வேறு இரண்டு காரணங்களுக்காக நான் ஜனவரியில் செல்ல திட்டமிட்டேன்.ஏனெனில் எனது முதுகு சம்மந்தப்பட்ட வலிக்கு (PIVD - Prolapsed Inter vertebral Disc) நான் சிகிச்சை எடுத்துக் கொண்டு இருந்தேன்.எனவே எனது உடலை பாதயாத்திரைக்கு தயார் செய்ய சிறிது காலமும் தேவைப்பட்டது.
பாதயாத்திரைக்கு என்னை தயார்படுத்தும் முதல் வேலையாக எனது மருத்துவரை அணுகி ஒரு மாதத்திற்கு தேவையான மருந்துகளையும், அவர் வலியுறுத்திய சில உடற்பயிற்சிகளையும் தவறாது எடுத்துக் கொண்டு வந்தேன்.
எனது காலை நேர நடைபயிற்சியை சரிவர செய்யாத நான், இருந்த ஒரு மாதகால இடைவெளியில் தவறாது தினமும் நடைபயிற்சி செய்ய ஆரம்பித்தேன்.4 கிமீ தொலைவை 30 லிருந்து 40 நிமிடம் நடந்த நான் 8 கிமீ, 10 கிமீ , சில நாட்களில் 14 -15 கிமீகளை 2 மணி நேரத்தில் அதாவது மாலை 5 லிருந்து 7 மணிக்குள் நடக்க பழக்கிக் கொண்டேன்.
டிசம்பர் கடைசி வாரத்தில் கிரண் பட்டேல், பாதயாத்திரைக்கு எடுத்துக் கொண்டு வர வேண்டிய பொருட்களின் பட்டியலை மின்நகளில் (Fax) அனுப்பினார்.மேலும்
அவர் என்னை எந்தவித பிராண்ட் ஷுக்களை வாங்க வேண்டாம் எனக் கூறினார். மேலும் வாங்கும் புது ஷுவை அணிந்து நடந்து பழக்கமாக்கிக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.இல்லையெனில் அது காலை கடிப்பது, கொப்பளங்களை உருவாக்குவது என பயணத்தை பாதிக்கும் வாய்ப்புள்ளதாக கூறி இருந்தார். எனவே நான் புது ஷு ஒன்றை வாங்கி அதை பயன்படுத்தி சுமார் 150 கிமீகள் நடந்திருந்தேன். ..
பின் அந்த மகத்தான நாள் வந்தது. அது ஜனவரி 1ம் தேதி.கிரண் அவர்கள் என்னை குழு தலைவர் விநோத் ஜாதவ் அவர்களிடம் அறிமிகப்படுத்தினார்.அவருடன் காரில் நான் மும்பையின் நேருல் நாவி, தானேவின் வார்டக் நகர் சாய் பாபா கோவிலுக்கு காலை 7-7.30 மணிக்கு வந்து சேர்ந்தேன்..பயணத்தின் போது, வினோத் அவர்களுக்கு அது 26 வது ஷீரடி பாதயாத்திரை என தெரியவந்தது.பாதயாத்திரையின் போது வினோத், அவரின் நண்பர்களுடன் சேர்ந்து மிக வேகமாக நடக்கக் கூடியவர் என்றும், அவருடன் நடந்து செல்வது மிகவும் கடினம் என்றும் வினோத்தின் மகன் கூறினார். 



 மேலே உள்ள மூன்று படங்களும் யாத்திரை 
துவங்கிய இடத்தில் எடுக்கபட்டது  

வார்டக் நகர் சாய் பாபா கோவிலை அடைந்த போது, வார்டக் நகரில் இருக்கும் இன்னொரு 1000 பேர்களை கொண்ட குழு, பாதயாத்திரையை தொடங்கும் முன் செய்ய வேண்டிய பூஜைகளை செய்து முடித்து பாதயாத்திரையை பட்டாசுகள்,வானவேடிக்கை,மேள தா ளங்களுடன் காலை 9 மணிக்கு தொடங்கி இருந்தார்கள். எங்களின் பூஜைகளை முடித்து எங்கள் குழுவின் பாதயாத்திரையை சற்று தாமதத்துடன் 10.15 மணிக்கு தொடங்கினோம்.
இங்கே இணைக்கப்பட்டுள்ள இந்த முன்று படங்களும் பாதயாத்திரையை நாங்கள் தொடங்கிய இடமாகும்.பின் பல நாட்களாக தொலைபேசியில் மட்டுமே தொடர்பு கொண்டிருந்த கிரண் பட்டேல் அவர்களை நேரில் சந்தித்தேன்.அவர், அவர்களின் குழு நபர்களான அசோக் தரேக்கர்,விலாஸ் பரப்,ஷேக்கர் மஹாதிக் , வினோத் ஜாதவ் மற்றும் கிசான் டன்க்லஸ் அனைவரையும் அறிமுகப்படுத்தினார். எனது பயணத்தை பாதயாத்திரையில் பல அனுபவமுள்ளவர்களுடன் தொடங்கினேன். கிரண் அவர்களுக்கு இது 26 வது பாதயாத்திரை ஆகும். 

என்  குழுவினர் : அசோக் தாரேகர், கிரண் பாட்டில், விலாஸ் பரப், 
சேகர் மகாதிக், வினோத் ஜாதவ் மற்றும் கிசன் டுக்லஸ் 
இந்த படத்தில் இருக்கும் என் குழுவினர்கள் இடமிருந்து வலமாக அசோக் தரேக்கர்,கிரண் பட்டேல்,விலாஸ் பரப்,ஷேக்கர் மஹாதிக்,வினோத் ஜாதவ் மற்றும் கிசான் டன்க்லஸ்.
வார்டக் நகரில் எங்களுக்கு காலை உணவாக சமோசாவும் தேநீரும் கொடுக்கப்பட்டது.மேலும் வழியில் யாரோ ஒருவர் பாதயாத்திரை செல்பவர்களுக்கு இட்லியும் வடையும் விநியோகித்து கொண்டு இருந்தார்.நாங்கள் அனைவரும் படு வேகமாகவும் , முழு மூச்சாகவும் நடந்து சென்றோம். நன்றாக வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. 2 மணி நேரம் கழித்து மதிய உணவுக்கான ஒரு அறிகுறியும் தெரியவில்லை. நான் கிரண் அவர்களிடம் மதிய உணவு இடைவேளை பற்றி கேட்டுக் கொண்டே இருந்தேன். அவர் இப்போது அடைந்துவிடுவோம் எனக் கூறினார். ஆனால் அவர் அதுக் கூறி 30 நிமிடம் ஆகி இருந்தது. மேலும் நான் சொல்ல வேண்டியது, அந்த வெயிலிலும் பலர் காலணி அணியாமலும், இன்னும் பலர் சாதாரண செருப்புகளை மட்டுமே அணிந்து நடந்துக் கொண்டிருந்ததை பார்க்கவே அதிசியமாக இருந்தது. எப்படி அவர்களால் கொளுத்தும் வெயிலிலும், கரடு முரடான பாதையிலும் அவ்வாறு நடக்க முடிகிறது ? அந்த படம் கிழே இணைக்கப்பட்டுள்ளது. 
காலணி இல்லாமல் நடந்தோம் 

இந்த படத்தில் இருப்பவர் கிரண் பட்டேல்
பின் கடைசியாக 12.45 மணியளவில் அவளியின் மசிந்த்ரா மகராஜ் எழுப்பிய நவனித் கோவிலை அடைந்தோம்.மற்ற குழுவினரை விட முன்னதாக கோவிலை அடைந்ததால் ஆளுக்கொரு இடத்தை பிடித்து அனைவரும் காலை சுவரின் துணையுடன் தூக்கி நிறுத்தி படுத்துக் கொண்டனர். அது எனக்கு புதிதாக இருந்தாலும் கிரண் அவர்கள் செய்ததை போல நானும் செய்தேன். அவ்வாறு படுத்தது கால்களுக்கு நல்ல ஓய்வாக இருந்தது. ஒரு மணி நேரத்திற்கு பின் அனைவருக்கும் மதிய உணவாக சப்பாத்தி, ஒரு காய் வகை,சாதம்,பருப்பு கடைசல்,மற்றும் ஒரு இனிப்பு வழங்கப்பட்டது.பின் 2.15 மணியளவில் அங்கிருந்து புறப்பட்டோம். அதே போல மீண்டும் வெயிலில் 2 மணி நேரம் நடந்தும் மாலை நேரத்தில் தங்கி ஒய்வெடுக்கும் இடம் பற்றி ஒன்றும் தெரியவில்லை.கால்கள் மிகவும் வலியுடன் சோர்ந்து போய் இருந்தன.இருந்தும் தொடர்ந்து நடந்துக் கொண்டே இருந்தோம். பின் மாலை 5.30 மணியளவில் சர்தார் தாரா சிங் ஹாலான பத்ஹாவை அடைந்தோம்.அது தானேவில் இருந்து 40 கிமீ ம் நவனித் கோவிலில் இருந்து 23 கிமீ ம் ஆகும்.
இம்முறையும் மிக முன்னதாகவே நாங்கள் வந்தடைந்ததால் தேவையான அளவு தூங்க இடமும், குளிக்க போதிய அளவு சௌகரியமும் கிடைத்தது.இந்த பாத யாத்திரைக்கு முன் நான் மனதளவில் மிகவும் நம்பிக்கை உள்ள மனிதன். ஆனால் இந்த முதல் நாள் பயணத்திலேயே என் மனதின் நம்பிக்கை ஆட்டம் காண தொடங்கியது. முதல் நாளிலேயே நான் மிகுந்த கால் வலியுடன் மிகவும் சொர்வடைந்துவிட்டேன்.இன்னும் 5 நாட்கள் இதை போல பாதயாத்திரை செல்ல வேண்டி இருந்தது.ஒவ்வொரு நாளும் நான் 45 கிமீ அல்லது அதற்கும் மேலாக நடக்க வேண்டிய சுழல்.மேலும் நான் பாதயாத்திரையில் அனுபவமுள்ள குழுவினர்களுடன் இருந்தேன்.அவர்கள் மிகவும் வேகமாக நடப்பவர்கள்.ஒய்வே எடுக்காதவர்கள். தேநீர் , சிற்றுண்டி என எதற்கும் வழியில் நிற்காதவர்கள்.இதன் பின் உள்ள உண்மை என்னவென்றால், அடிக்கடி ஒய்வு எடுத்தால் கால்களின் தசை இலகி, பின் நடக்க ஆரம்பிக்கும் போது, அதே பழைய வேகத்திற்கு கொண்டு வருவதில் சிரமம் ஏற்படும்.மேலும் ஒய்வெடுத்து நடப்பதால் கால் வலி அதிகமாகும் வாய்ப்பு உள்ளதென கூறினார்கள். அந்த குழுவில் இருந்த நான் அவர்களின் வேகத்திற்கு நடக்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தேன்.
வந்தவர்களில் 30-40 சதவிகித பேர்கள் 50-55 வயது மதிக்கத்தக்கவர்கள்.அதில் 79 வயதுள்ள புருஷோத்தம கேஷவ ராஜே என்னும் முதியவர் அவரது 17 வது பாதயாத்திரைக்காக எங்களுடன் வந்திருந்தார்.
மீண்டும் இரவு உணவு அதே சாதம், சப்பாத்தி,காய் பருப்பு மற்றும் இனிப்பு.ஆனால் இது கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது. 

இரண்டாம் நாள் :
இரண்டாவது நாள் காலை 4.30 மணிக்கு ஆரம்பம் ஆனது.காலை தேநீர் ,பிஸ்கட்டுடன் ஆரம்பித்து,குளித்து முடித்து எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு மீண்டும் 5.30 மணிக்கு நடக்க ஆரம்பித்தோம். வாசிம் என்ற இடத்தில் காலை நேர உணவாக சாம்பார் வடை மற்றும் தேநீர் கொடுக்கப்பட்டது. 

காலை நேர உணவு 
 
 இந்த படத்தில் என்னுடன் புருஷோத்தம கேஷவ் 
ராஜே.  79 வயது முதியவரின் 17 வது யாத்திரை
மீண்டும் 8 மணிக்கு நடக்க ஆரம்பித்து 11.15 க்கு மதிய உணவுக்காக ஷாஹ்பூர் வந்தடைதோம்.அப்போது நாங்கள் 20-23 கிமீ தொலைவை கடந்திருந்தோம்.பின் சிறிது நேர ஒய்வுக்கு பின் 2 மணிக்கு மீண்டும் நடக்க ஆரம்பித்து 3.15 க்கு பீர் பாபா தர்காவில் ஒய்வேடுத்தோம்.மிகவும் சிறிய தர்காவாக இருந்தாலும் வெயிலுக்கு நல்ல குளிர்ச்சியான இதம் அளித்தது.அங்கு 30 நிமிடம் இடைவேளைக்கு பின் நேராக இரவு தங்க 6 மணியளவில் ஹர்டியை அடைந்தோம்.அங்கே மிகவும் சுவையான தக்காளி சூப் கொடுக்கப்பட்டது.மேலும் பஜனை ஆரம்பம் ஆனது.இங்கே நான் சொல்ல வேண்டியது,அந்த வெயிலில் அத்தனை தொலைவு பாதயாத்திரை செய்து வந்திருந்தாலும் பஜனை ஆரம்பம் ஆனதும் சோர்வெல்லாம் காணாமல் போனது.பல பக்தர்கள் பஜனையில் உற்சாகமாக ஆடவும் செய்தார்கள்.பஜனைக்கு பின் இரவு உணவு கொடுக்கப்பட்டது.அன்று நாங்கள் சுமார் 42 கிமீ பயணம் செய்திருந்தோம். 

கலம்கானில் உள்ள தர்காவில் ஒய்வெடுக்கும் 
போது எடுக்கப்பட்ட படம்.அதில் அமர்ந்திருப்பது நான்
 
மூன்றாம் நாள்
இருப்பதிலேயே மூன்றாம் நாள் தான் மிகவும் கடினமான நாள் என்று என் குழுவில் இருப்பவர்கள் கூறினார்கள்.இந்த நாளில் 46 கிமீ நடந்து கசாரா காட் எனும் மலைப்பாதையை கடக்க வேண்டும் என்றனர்.எனவே காலை 5.30 மணிக்கு எல்லாரும் எழுந்து கிளம்பினோம்.ஆனால் காலை நேர உணவுக்கே நாங்கள் மிக தொலைவான தூரம் செல்ல வேண்டி இருந்தது.8.30 மணியளவில் தான் காலை உணவிற்காக காட் அருகிலிருந்த பாபா கா தாபா எனும் இடத்திற்கு வந்தடைந்தோம்.எங்களுக்கு காய்கறிகள் கொண்ட சமோசாவும், பாவ்வும் கொடுக்கப்பட்டது.மதிய உணவிற்கு நாங்கள் கசாரா காட்டை கடக்க வேண்டி இருந்தது.இது தான் மிகவும் கடினமான சமயமாக இருந்தது. நான் என்னுடைய பையில், அணிய சில மெல்லிய துணிகள்,குளிக்க,பல் துலக்க தேவையானவைகள்,விரிப்பு,துண்டு,டார்ச், கையுறை, தண்ணீர் பாட்டில்கள் மற்றும் சில சிற்றுண்டிகள் வைத்திருந்தேன். அந்த கொளுத்தும் வெயிலில் அதிக தூரம் நடந்ததால் ௧௦ கிலோ எடையுள்ள பையை தூக்கவே மிகவும் சிரமாக இருந்தது. ஆனால் வேறு வழியில்லை.நான் யாத்திரைக்கும் முன், தினமும் 8 முதல் 15 கிமீ வரை மாலை 5 லிருந்து 7மணி வரை ஒரு மாத காலம் நடை பயிற்சி மேற்கொண்டேன். ஆனால் வெயிலில் சிறிய எடையுள்ள பையுடன் நடக்க பழக்கபடுத்திக் கொள்ளவில்லை.யாத்திரை செல்ல நினைப்பவர்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டியது என்வென்றால்,நாம் 80 சதவிகிதம் மிக அதிகமான வெயிலில் தான் நடக்க வேண்டிய சுழல் இருக்கும்.எனவே அதற்கு தகுந்தபடி தயாராக இருந்தால் பாதயாத்திரையின் போது அதிக சிக்கல் இருக்காது.
கசாரா காட் பயணம் எங்களின் பாதயாத்திரையிலேயே மிகவும் கடினமான ஒன்றாக இருந்தது.பின் ஒரு வழியாக அனைவரும் கசாரா காட்டை கடந்து மலையில் குளிப்பதற்கு கிணறு ஒன்றை அடைந்தோம். கிணற்றின் தண்ணீர் ஐஸ் கட்டி போன்று சில்லென இருந்தது.இருந்தாலும் குளித்ததும் புத்துணர்ச்சியாக இருந்தது.
கிணறு மலையின் உச்சியில் இருந்தது.பல இடங்களில் தண்ணீர் வசதியும் இருந்தது.ஜனவரி மாதத்தில் தண்ணீர் எங்கு கிடைக்கும் என உறுதியாக தெரியாததால் நாங்கள் கிணற்றை தேர்வு செய்தோம்.உண்மையாக அங்கே கிடைத்த ஒய்வு மிகவும் தெம்பாக இருந்தது.மீண்டும் எங்கள் யாத்திரையை தொடங்கி மதிய உணவு இடைவேளைக்காக கட்டன் தேவி ஆலையத்தை அடைந்தோம்.அதுவரை நாங்கள் 20-30 கிமீ தூரம் நடந்திருப்போம். ஆனால் எங்களிக்கு இருந்த வலி மற்றும் சோர்வின் காரணமாக இந்த 30 கிமீ தொலைவானது 50 கிமீ தூரம் வரை நடந்தாற் போன்று அசதியை கொடுத்தது. மலை பகுதியாக இருந்ததால் இந்த மூன்றாம் நாள் பயணம் கடினமாக இருந்தது.மூன்றாம் நாளின் சிரமான பகுதியான மலை பயணத்தை கடந்து இரவு தங்குவதற்காக கோட்டி எனும் இடத்திற்கு 16-18 கிமீ பயணத்திற்கு பின் வந்து சேர்ந்தோம்.(இகட்பூரி தாலுகா) .

இடம் கசாரா காட்

குளிப்பதற்காக தங்கிய இடம் 
கோட்டி ஒரு சிறிய பட்டிணம்.அங்கு நாங்கள் தங்கிய இடமான ராஜாராம் சல்வி சுபகுர்ஹா, அங்காடிகள் நிறைந்த பகுதி ஆகும்.நமக்கு தேவையான அனைத்து பொருட்களும் கிடைக்கும் இடம்.இரண்டாம் நாளன்று எடையின் காரணமாக எனது தோள்பை அறுந்துவிட்டது.ஒரு கயிறை கொண்டு அதை கட்டி எடுத்து வந்தது மிகவும் சிரமாக இருந்தது. அந்த பிரச்சனை இந்த மூன்றாம் நாளன்று தீர்ந்தது.மேலும் கோட்டியில் உள்ள அனைத்து கடைகளும் சரியாக 7.30 க்கு மூடப்படுகின்றன. எனவே பொருட்கள் வாங்க வேண்டும் என நினைப்பவர்கள் 7.30 முன் கோட்டியை அடைய வேண்டும். மட்டுமின்றி நாங்கள் தங்கியிருந்த இடத்தில் கொசுக்களின் தொல்லை 7.30 மணி வரை அதிகமாய் இருந்தது. ஆனால் அதிசியமாக 10 மணியளவில் படுக்க போகும் போது ஒரு கொசுக் கூட இல்லை.இருந்தாலும் பாதயாத்திரைக்கு திட்டமிடுபவர்கள் தேவையெனில் கொசுவர்த்தி சுருள்களை எடுத்துக் கொள்வது நல்லது.
சிலருக்கு அதிக துரம் நடந்த காரணத்தால் காலில் அங்காங்கே கொப்பளங்கள் ஏற்பட்டன.அதில் இணைக்கப்பட்ட படத்தில் காணலாம்..ஆனாலும் யாத்திரை செல்ல தேவையான ஆர்வத்தை அவர்கள் கைவிடவில்லை. கொப்பளங்களுக்கு சிகிச்சை அளித்து தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். 



நான்காம் நாள் :
எப்போதும் போல் மீண்டும் காலை 5.30 மணிக்கு எங்கள் யாத்திரையை தொடர்ந்து 8 மணியளவில் பந்தர்தரா எனுமிடத்தில் காலை உணவிற்காக நின்றோம்.மிசல் பாவ் எனும் உணவு அளிக்கப்பட்டது. மீண்டும் மதிய உணவிற்காக 22-24 கிமீ கடந்து காவத்தரா எனுமிடத்தில் தங்கினோம் . இந்த இடம் மிகவும் ஆழகான மஹால். இதை ஷிர்டி சன்னிதானமே எடுத்து நடத்துகிறது என நினைக்கிறேன்.மீண்டும் இரவு தங்குவதற்காக 18 கிமீ கடந்து கண்டோபாவில் உள்ள பிரயாக் தீர்த் எனும் சிறிய குன்றின் மேலிருந்த கோவிலிலுக்கு எல்லாருக்கும் முன்னதாகவே வந்தடைந்தோம்.சீக்கிரமே வந்தடைந்ததால் இந்த சிறிய கோவிலை சுற்றி பார்க்க முடிந்தது.குன்றின் மேல் நின்று அந்த ஊரை கண்டதும், குளிர்ந்த காற்றை அனுபவித்ததும் நல்ல ஒரு அனுபவம்.அங்கே அனைத்து பக்தர்களும் குளிர்ந்த சில்லென்ற காற்றில், திறந்த வெளியில் படுத்து உறங்கினார்கள்..ஆனால் அந்த குளிரில் கம்பளி உடை,விரிப்பு, கையுறை, காலுறை ,குல்லாய் அனைத்தும் அணிந்தும் என்னால், அதிக அசதி மற்றும் கடுங்குளிரினால் சரியாக தூங்க முடியவில்லை.அன்று இருந்த குளிரின் அளவு 8 டிகிரி அல்லது அதற்கும் குறைவாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
இங்கு நான் சொல்ல வேண்டிய விஷயம், சரியான கழிப்பிட வசதி இங்கே கிடையாது.அது எங்களுக்கு சற்று கடினமாக இருந்தது. மேலும் கீழே இணைக்கப்பட்ட படத்தில் உள்ள ஆற்றில்,குளிர்ந்த நீரில் குளிக்க வேண்டி இருந்தது.எனவே பாதயாத்திரைக்கு தயார் ஆகுபவர்கள் பனிக்காலமாக இருந்தாலும் குளிர்ந்த நீரில் குளிக்க பழகிக் கொண்டால் யாத்திரையன்று சிரமாக இருக்காது. 


ஐந்தாம் நாள்
இந்த நாளில் தான் நாங்கள் மிகவும் அதிகமான பாதையை கடக்க வேண்டி இருந்தது.30 கிமீ தூரத்தை மதிய இடைவேளைக்கு முன்னும், 18-20 கிமீ தூரத்தை இரவுக்கு முன்னும் கடக்க வேண்டிய சுழல்.மதிய உணவாக சூடான கூட்டு சாதம் , சின்னர் எனுமிடத்தில் உள்ள துளசி எனும் உணவுவிடுதியில் அளிக்கப்பட்டது.அன்று இரவு வாவி எனுமிடத்தில் தங்கினோம்.அங்கே பண்டரிநாத் தஜ்னே எனும் சாய் பாபா பக்தர் 300 பேர்கள் கொண்ட பாதயாத்திரை குழுவினருக்கு தன் செலவில் இரவு உணவு அளித்தார்.மேலும் பல்கி யாத்திரை செய்பர்களுக்காக சாய் பாபா பாடல்களை அந்த கிராமம் முழுவது ஒளிபரப்ப செய்தார்.பாடல்கள், பக்தர்களின் ஆட்டம், வான வேடிக்கை,ஒளிஅலங்காரம் என அந்த கிராமமே பல்கி யாத்திரையின் உருவமாக இருந்தது.இது இந்த கிராமத்தின் 2 வது சாய் பல்கி யாத்திரை ஆகும். சாரதா பாதயாத்திரை மித்ரா குழு தனது 25 வது வருடங்களை, கடந்ததை முன்னிட்டு கடந்த வருடம் இந்த பல்கி யாத்திரையை ஆரம்பித்துள்ளனர்.
இரவு வாவியில் உள்ள பள்ளி ஒன்றில் எங்களை தங்க வைத்தனர். அந்த பள்ளியில் மொத்தம் மூன்று வகுப்பறைகளை மட்டுமே 300 பேர்களை கொண்ட பக்தர்களுக்காக திறந்து வைத்து இருந்தனர். அந்த அறையின், ஒன்றில் கால் பங்கு இடம் மேஜைகள் மற்றும் பலகைகளால் நிரப்பப்பட்டு இருந்தது.எனவே அந்த அறையில் ௧௫ பேர்கள் மட்டுமே தங்க முடிந்தது. அதனால் சுமார் 200 பக்தர்கள் பள்ளியின் திறந்த வெளி மைதானத்திலேயே தங்க வேண்டி இருந்தது.வாவி மிகவும் குளிரான இடமாக இருந்ததால் அன்று இரவு 3-4 டிகிரி தான் இருந்திருக்கும். வெளியில் அமர்ந்து சாப்பிட்டு குளிர்ந்த நீரில் கைகளை கழுவவே மிக மிக கடினமாக இருந்தது எனில் வெளியில் படுத்தவர்களை பற்றி நினைத்து பாருங்கள்.எனவே பக்தர்கள் அனைவரும் நெருப்பை மூட்டி குளிர் காய்ந்தனர்.அதிர்ஷ்டவசமாக எனக்கு வகுப்பறையிலேயே தங்க இடம் கிடைத்தது.ஆனால் வெளியில் படுத்திருந்தவர்களின் நிலையை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. ஆனாலும் அத்தனை துன்பங்களும் அந்த நொடியில் மறைவது போல எங்களுக்கு இருந்த ஒரே சந்தோசமான விஷயம் என்னவென்றால் ஷீரடிக்கு இன்னும் 35 கிமீ தொலைவே இருந்தது.அனைத்து பாதைகளையும் கடந்து வந்ததால், நம் சாய் பாபாவின் தரிசனத்தை காணப் போகும் அந்த ஆறாவது நாளுக்காக எங்களால் காத்திருக்க முடியவில்லை.
ஆறாம் நாள்
காலை 5.30 மணியளவில்,இருள் விலகும் முன்னரே எங்க யாத்திரையை ஆரம்பித்தோம். இருட்டின் காரணமாக அந்த கிராமத்தில் வழியை கண்டுபிடித்து செல்வது சிரமாக இருந்தது. ஆனாலும் எங்கள் குழுவில் அனுபவமுள்ள வினோத் அவர்கள் இருந்ததால் பிரச்சனை ஒன்றும் இல்லை. அவரே 5-6 நாளின் யாத்திரை சரியான முறையில் வழிகாட்டி சென்றார். இருந்த ஒரே பிரச்சனை அவரின் வேகத்திற்கு ஈடு கொடுப்பது மட்டும் தான்.18-20 கிமீ கடந்து ஒரு கோவிலில், அன்று வியாழன் என்பதால் காலை உணவாக சுபுதின வடை கொடுக்கப்பட்டது.இங்கே நான் குறிப்பிட வேண்டியது இந்த கடினமான பாதயாத்திரையிலும் பலர் திங்கள் மற்றும் வியாழன் கிழமைகளில் விரதம் இருந்தனர்.
மீண்டும் 30 கிமீ தொலைவை கடந்ததும் ரஹாதா எனுமிடத்தில் மதிய உணவு வழங்கப்பட்டது.ஆனால் எங்களுள் ஒரு 15-20 பேர்கள் சற்று தூரம் சென்று அங்கேயே வசிக்கும் ஒரு விவசாயி நண்பர் வீட்டில் தங்கி மதிய உணவு அருந்தினோம்..அங்கே கிராமிய வாசத்துடன் பரிமாறப்பட்ட கூட்டு சாதம், வெங்காயம் மற்றும் இரண்டு வகை காய் பொரியல்கள், என்றும் மறக்கவே முடியாத அனுபவம்.
மதிய உணவிற்கு பின் ரஹாதாவிலிருந்து நாங்கள் செல்ல வேண்டிய தூரம் 5 கிமீ மட்டுமே. ஆனால், பக்தர்கள் அனைவருக்கும் பாபாவின் பல்கியை எடுக்கும் வாய்ப்பு கிடைக்க வேண்டுமென்பதால் ,ரஹாதாவிலேயே நாங்கள் மற்ற அனைத்து பக்தர்களும் ஒன்று திரள காத்திருக்க வேண்டி இருந்தது.


படங்கள்:  வாவின் கிராமம் வழியே யாத்திரை 

பின் அனைத்து பக்தர்களும் ஒன்று சேர்ந்ததும், எங்கள் பால்கி  யாத்திரையை 3 மணியளவில் தொடங்கி மாலை 5.30-6.45 மணிக்கு ஷிர்டி கோவிலை அடைந்து நம் பாபாவின் தரிசனத்தை கண்டோம்.பாதயாத்திரை விவரங்கள்,பக்தர்களின் எண்ணிக்கை, யாத்திரை செய்ய ஆகும் நாட்கள் மற்றும் யாத்திரையை தொடங்கிய இடம் ஆகியவற்றை ஷீரடி கோவில் நிர்வாகத்திற்கு முன்னமே அறிவித்திருந்ததால், அனைத்து பாதயாத்திரை பக்தர்களுக்கும் விஷேச முறையில் அனுமதி அளிக்கப்பட்டது.
தரிசனம் முடிந்ததும் பல பக்தர்கள் அன்றிரவே பேருந்துகளை பிடித்து மும்பை வந்து சேர்ந்தனர்.ரஹாதாவிலிருந்து ஷீரடிக்கு பல்கி யாத்திரை செய்து வந்த சில பக்தர்கள் ஒரு நாள் அங்கேயே தங்க முடிவு செய்து இருந்தனர். ஷிர்டி பாதயாத்திரையை நடத்த பல குழுக்கள் செயல்பட்டு வருகின்றன.தொம்ப்விலி எனும் ஊரிலிருந்து சுமார் 1200 பக்தர்கள் யாத்திரை செய்து வந்தனர். அவர்கள் அனைவரும் வேட்டி அணிந்து, வெறும் காலிலேயே பாதயாத்திரை செய்தனர்.பிரபாதேவி,பேரல்,மும்பரா,வாசை,சூரத் போன்ற இன்னும் பல ஊர்களில் இருந்தும் மேலும் பல குழுவினர்கள் பாதயாத்திரையை மேற்கொண்டனர்.வாசை எனும் ஊரில் இருந்து ஷீரடிக்கு 3-4 நாட்களிலும் சில குழுவினர் வந்தடைந்தனர்.
ஒவ்வொரு வருடமும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஷிர்டி பாதயாத்திரையை மேற்கொண்டு வருகிறார்கள். என் பாதயாத்திரை அனுபவத்திற்கு பின் தான் இதை பற்றி எனக்கு தெரிய வந்தது.
இந்த அற்புதமான பாதயாத்திரை எந்த தடையும் இல்லாமல் நல்லப்படியாக முடிவடைந்தது.என் யாத்திரைக்கு உதவிய அனைவரும் நன்றி. மேலும் இந்த யாத்திரையை எந்தவித சிரமும் இல்லாமல் நடத்திக் கொடுத்த கிரண் பட்டேல் மற்றும் வினோத் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அவர்கள் இல்லாமல் என் யாத்திரையை இனிதாக நிறைவேற்றியிருக்க முடியாது என தெரிவித்துக் கொள்கிறேன்.

இதற்கான விடியோ படங்களின் தொகுப்பை கீழ் கண்டவற்றில் பார்க்கவும்


(Articles translated into Tamil   by Ramya Kartick)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.