Wednesday, May 28, 2014

Sai Charita - 20

"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."  
[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]

(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 20

அருவமாய்வாழ்ந்த ஸாயிபாபா பக்தருக்காக ஒருவடிவெடுத்தார்
பிரபஞ்சமெனுமோர் நாடகத்தினில் 'மாயை'யெனுமொரு நடிகையுடனே

நடிகரின்பாத்திரம் தாமேயேற்று நன்கேநடித்திட அவர்வந்தார்
உள்ளில்அந்த ஸாயிவடிவினை மனத்தில்நிறுத்தி நாமும்காண்போம்

மதியஆரத்தி முடிந்திடும்நேரம் நிகழும்நிகழ்வினை யாமினிக்காண்போம்
ஆரத்திச்சடங்கு முடிந்தபின்னாலே மசூதிவிட்டு வெளிவருவார்

விளிம்பில்நின்றவர் அன்புடன்உதியை அன்பருக்கெல்லாம் தாமளிப்பார்
பக்தர்களனைவரும் பரவசத்துடனே பாபாபதமே பற்றிடுவார்

கையினிலள்ளிய உதியைஅளித்து நெற்றியிலும் சற்றுஇட்டிடுவார்
இதயம்முழுவதும் அவர்கொண்டஅன்பு எவரால்சொல்லிட இங்கேஇயலும்! [1030]

உதியைஅன்புடன் வழங்கியபின்னர் பக்தரைப்பார்த்துச் சொல்லிடுவார்
'ஓ பாவ், உணவுண்ணச்செல்லும்; அண்ணா!நீரும் இருப்பிடம்செல்லும்;

ஓ பாபு! உணவினைமகிழ்வுடன் உண்ணுக'எனும்மொழிகூறி அனுப்பிடுவார்
இன்றும்அதனை நீவிர்எல்லாம் மனதினில்கண்டே மகிழ்ந்திடஇயலும்

இனிநாம்அவரது பாதம்தொட்டு திருமுகம்வரைக்கும் கண்டிடுவோம்
அன்புடன்பணிவுடன் ஸாயியைவணங்கிக் கதைக்குமீண்டும் திரும்பிடுவோம்.

'ஈசா உபநிஷதம்'::

'ஈசா-உபநிஷத்' எனுமொருநூலின் விளக்கம்எழுதிட 'தாஸ்கணு'முனைந்தார்
இந்நூல்சொல்லிடும் கருத்தின்சுருக்கம் இங்கேஉமக்கு யான்சொல்வேன்

வேதமந்திரம்யாவுமுளதால் 'மந்திர-உபநிஷத்' எனுமொருபெருமை இதற்குண்டு
யஜுர்வேதத்தின் நாற்பதாம்ஸம்ஹிதை இதனுடன் இணைவதால்

'வாஜஸனேய ஸம்ஹிதோபநிஷத்' எனுமொருபெயரிலும் அழைப்பதுண்டு
வைதீகசடங்குகள் செய்திடும்முறைகளை இதுவும் சொல்வதால்

அனைத்திலு முயர்ந்ததாய் இதனைப்போற்றிப் புகழ்வதுமுண்டு
இதனுள்சுருக்கமாய்ச் சொல்லிடும்கருத்தே மற்றையவேத நூல்களின்விரிவாம்

'ஸத்வலேகர்' எனுமொரு பண்டிதர் உபநிஷதங்களில் மிகவும்பெரிய
'பிருஹதாரண்யக உபநிஷதம்' இதனின் விரிவே எனச் சொல்வார்

புரொஃபஸர் ஆர்.டி. ரானடே என்பார் கூறிடும் கருத்தை இனிக் காண்போம்:

சிறியதுஆயினும் ஈசா-உபநிஷத் சொல்லிடும்கருத்தோ பெரிதாகும்
நுண்ணறிவுக்கெட்டா செய்திகள்இதனுள் நிரம்பிடும்விந்தையைக் கண்டிடலாம்

பதினெட்டுசெய்யுளே இதனில்இருப்பினும் ஆன்ம-அறிவும் மயக்க-உணர்வும்
கவலைகள்வரினும் கலக்கமுறாது கடமைகள்ஆற்றிடும் கர்மயோகமும் [1040]
ஞானம்,கருமம் இவற்றுக்கிடையே இருக்கும்தகுதியின் விளக்கம்கிடைக்கும்
இவ்விரண்டின் கூட்டிணைப்பே உபநிஷதம்சொல்லும் மதிப்பிலாக்கருத்தாம்
மேல்நிலைவந்திட இரண்டும்கலந்து பேதம்அங்கே மறைந்தொழியும்
நீதியும்,மெய்ம்மையும், வேதாந்தஅறிவின் கலவையேஇதுவாம் என்றும்சொல்வார்

இத்துணைப்பெருமை படைத்திட்டநூலினை பொருள்சிதையாமல் மற்றொருமொழியினில்
சொல்லுவதென்பது மிகவுமேகடினம் என்பதுஇதனால் தெரியவரலாம்

இலக்கணமுறைப்படி மராத்திமொழியில் செய்யுள்செய்யுளாய் மாற்றம்செய்தார்
ஆயினும்இதனை முழுதுமாய்அறியா தாஸ்கணுமனமோ நிறைவாய்இல்லை

அறிஞர்பலருடன் பகிர்ந்தபின்னரும் விடையெனஒன்றும் கிட்டவுமில்லை
இதனால்வருந்தி மனநிறைவின்றி தாஸ்கணுசற்றே களைத்துப்போனார்
'ஸத்குரு ஒருவரே விளக்கமளிக்க உரிமையும் தகுதியும் உடையவர்' ::

இதுவரைக்கண்டதில் இதுவேவேதம் அனைத்தின்சாரம் எனப்புரியும்
பிறப்பிறப்பென்னும் தளையையறுத்து விடுதலையளிக்கும் ஆயுதமாகும்

ஆத்மனைஅறிந்த மஹான்ஒருவரே விளக்கமளிக்கத் தகுந்தவராவார்
என்பதையுணர்ந்த தாஸ்கணுவும் ஸாயிபாபாவின் அருளினைநாடினார்

ஷீர்டிசென்றிட சமயம்வாய்த்தது; ஸாயிபாபாவின் பதங்களில்பணிந்தார்
ஈஷா-உபநிஷதம் குறித்தத்தனது இன்னலைச்சொல்லி வேண்டியேநின்றார்

கனிவுடன்அவரைப் பார்த்தபாபாவும் 'கவலைவேண்டாம்; கஷ்டமும்தீரும்
திரும்பிடும்வழியினில் 'விலேபார்லே'யில் 'காகாஸாஹேப் தீக்ஷித்'தின்பணிப்பெண்

நினதுகேள்விக்கு விடைதருவாள்' எனுமொருமொழியினை அருளிச்செய்தார்

அருகிலிருந்தோர் இதையொருவேடிக்கை என்றேயெண்ணி ஐயம் கொண்டார் [1050]

பாபாகூறிடும் மொழிகளனைத்தும் மெய்யாய்நிகழ்ந்திடும் எனுமோர்உறுதி
கொண்டிட்ட தாஸ்கணுவோ 'பிரம்மத்தின் ஆணை' இதுவெனநம்பிநடந்தார்

'காகாவின் வேலைக்காரி' ::

பாபாசொன்னதைச் சிரமேற்கொண்டு விலேபார்லே சென்றுதங்கினார்
மறுநாட்காலை சிறுதுயில்கொள்கையில் ஏழைப்பெண்ணின் பாட்டொன்றுகேட்டது

'கருஞ்சிவப்புக் கலருடைதான் எத்தனையழகு; வேலைப்பாடும் மிகவேநேர்த்தி
முந்தானையும் சேலையோரமும் எத்தனையழகு!' எனுமொருபாடலைச் சிறுமிபாடினாள்

இனியகுரலில் ஒலித்தப்பாடலைக் கேட்டவர்எழுந்து யாரெனப்பார்க்க
காகாஸாஹேப்பின் பணியாள்'நாம்யா'வின் இளையசகோதரி எனக்கண்டார்

பாத்திர மொன்றைக் கழுவியபடியே பாடலைஅவளும் இசைத்திடக் கண்டார்
ஏழ்மைநிலையிலும் மகிழ்வுடன்பாடிய சிறுமியைக்கண்டவர் மனம்வருந்தினார்

மறுநாள்'ராவ்பகதூர் பிரதான்'என்பவர் தமக்கொருஜோடி வேட்டியளிக்கையில்
சிறுமிக்குமொரு புத்தாடைவழங்கிட தாஸ்கணுவும் வேண்டிக்கொண்டார்.

வேண்டலையேற்று பிரதான்ஜியும் சிறுமிக்கும்ஒரு சேலையளித்தார்
பசியால்வாடிடும் ஏழைக்குஒரு விருந்தினைப்போலே அவள்மகிழ்ந்தாள்
மறுநாள்அந்தச் சேலையணிந்து களிப்புடன்சுழன்று ஆட்டமாடினாள்
'ஃபுகடி'எனுமொரு ஆட்டமாடியே சிறுமியருடனே அவள்களித்தாள்

அடுத்தநாளோ பழையபடியே கந்தலையணிந்தே அவள்வந்தாள்
ஆயினும்அவளது முகத்தில்களிப்போ சற்றும்அங்கேக் குறையவுமில்லை

இரக்கம்முதலில் கொண்டிட்டதாஸ்கணு இப்போதிதனைக் கண்டிட்டார்
இரக்கம்புகழ்ச்சியாய் மனதில்தோன்றிட அதனைப்பற்றிச் சிந்தித்தார் [1060]

'ஏழையென்பதால் எப்போதும்அவள் கந்தலாடையே உடுத்திடுவாள்
ஆனால்இன்றோ அவளிடம்புதியச் சேலையொன்றும் இருக்கிறது

இருப்பினும்அதனைப் பத்திரப்படுத்திக் கந்தலையேஅவள் அணிகின்றாள்
தன்னிலையுணர்ந்து மனதில்வருத்தம் ஏதும்அவளோ கொள்ளவில்லை

இன்பமும்துன்பமும் தோன்றுவதெல்லாம் மனதின்தன்மையைச் சார்ந்தேயுளது
இறைவன்நமது அனைத்துத்திக்கிலும் எல்லாவற்றிலும் இருக்கின்றான்

இறைவன்தந்தவை யாவையுமிங்கே அவரவர்நன்மைக் கென்பதையறிந்து
அருளியஅனைத்தையும் மகிழ்வுடன்ஏற்கும் மனமேஉயர்ந்தது' எனத்தெளிந்தார்

சிறுமியின்நிலையும் கொடுத்தவர்நிலையும் அனைத்துமேஇங்கே இறைவனின்ஆணை
ஈஷோபநிஷதம் சொல்லிடும்கருத்தும் இதுவேஎன்று அவருணர்ந்தார்

நேரிடும்அனைத்தும் அவனதுஆணை! நன்மையேபயக்கும்! திருப்திகொள்வாய்!
எனுமொருபாடம் சிறுமியின்மூலம் தாஸ்கணுஉணர்ந்து மனந்தெளிந்தார்!

'தன்னேரில்லாத போதனை முறைமை' ::

பாபாநிகழ்த்திடும் வழியின்முறைமை யாவுமேஇங்கே தனிவழியாகும்
ஷீர்டிவிட்டுச் செல்லாதபோதும் மச்சிந்த்ரகாட்டுக்கும் கோலாப்பூருக்கும்

சாதனைசெய்திடச் சிலரைஅனுப்பியும், விழிப்புநிலையிலோ கனவுநிலையிலோ
சிலருக்குத்தோன்றி அவர்தம்ஆசை வேண்டலைபாபா செவ்வனேபூர்த்திசெய்தார்

ஐயம்கொண்ட தாஸ்கணுவையோ விலேபார்லே நகருக்கனுப்பித் தெளியவைத்தார்
தாமேநேரினில் சொல்லவும்முடியும் எனினும்பாபா இம்முறைமைசெய்தார்

சொல்லித்தந்திடும் பாடத்தைவிடவும் கண்டுத்தெளிந்திடும் பாடம்உயர்வு
எனுமோர்செயலைச் செய்தேபாபா இவ்விதம்தமது மகிமைகாட்டினார்! [1070]

'ஈசாவின் நீதி' ::

'நுண்பொருள்கோட்டியல்' சொல்லிடும்வண்ணம் கடவுள்எங்கும் பரவிநிற்கிறார்
இதுவே'ஈசா உபநிஷத்'முதலில் தொடங்கிடும்உன்னத வரிகள்ஆகும்

அவரேஎங்கும் பரவியிருந்தும் அனைத்தையும்அளிக்கும் அருளும்அவரே
அளிப்பவையாவும் என்றும்எமது நன்மையின்பொருட்டே என்பதுநீதி

கிடைத்ததில்மகிழ்ந்து அதிகம்ஆசைப் படுவதைத் தவிர்த்து
நடப்பவையாவையும் இறையின்ஆணையே என்பதைத் தெளிந்து

அனைத்தும்இறைவனின் சங்கல்பமே; அடக்கத்துடனே அதைஏற்போம்
எனுமொருவழியினை நன்குணர்ந்து வாழ்வினைநடத்திடப் பழகிடவேண்டும்

கருமம்செய்வது தலையாயகடமை; செயலின்மைஎன்பது அரிக்கும் புழுவே
முழுநிலைஎய்திடக் கருமம்யாவையும் இறைவனின்ஆணை என்றேநடத்தி

அனைத்திலும்தனது ஆன்மாவைக்கண்டு அனைத்தும்தனது ஆன்மாவென்றுணர்ந்து
கருமம்புரிந்திடும் மனிதன்என்றும் மயக்கநிலையினில் ஆழ்ந்திடமாட்டான்

துயரம்அவனை அண்டுவதில்லை; எங்ஙனம்துயரம் அடைந்திட இயலும்?
ஆன்மதரிசனம் இல்லாநெஞ்சினில் வெறுப்பும்மயக்கமும் துயரமும்மண்டும்

ஏகம்அநேகம் என்பதைஅறிந்தவன் எவ்விதக்குறையும் இல்லாதிருப்பான்
இதுவே'ஈசா உபநிஷத்'நமக்குச் சொல்லிடும்உண்மை என்றிதைமுடிப்பேன். [1078]

ஸ்ரீ ஸாயியைப் பணிக ! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும் !

[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
( To be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.