Friday, May 30, 2014

Sai Charita - 41


"ஸ்ரீ ஸாயி ஸத்சரிதம்."  

 [மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]


(Converted into Two line  Tamil verse  by : Dr. Sankarkumar, USA)

இலம்பகம் – 41


சித்திரத்தின் கதை - கந்தல் துணி திருடுதலும், ஞானேஷ்வரி பாராயணமும்.
****************

சித்திரம்வந்த அற்புதக்கதையை இவ்விலம்பகத்தில் இனிநாம்காண்போம்:
ஒன்பதாண்டுகள் கழிந்தப்பின்னரே அலிமுஹமது இக்கதையுரைத்தார்::--

பம்பாய்வீதியில் சுற்றியபோது வியாபாரியிடத்தில் இப்படம்வாங்கி
கண்ணாடி,சட்டம் இரண்டும்போட்டு, பாந்த்ராவீட்டில் மாட்டியிருந்தார். [2230]

பாபாமீது பிரியம்கொண்டு தினமுமதனைத் தரிசித்திருந்தார்.
ஹேமாத்பந்த்திடம் அந்தச்சித்திரம் கொடுத்திடுவதற்கு மூன்றுமாதங்கள்

இருந்திடும்போது, கால்வீக்கத்திற்காய் அறுவைசிகிச்சை செய்யவென
பம்பாயிலிருக்கும் மைத்துனரான நூர்முஹமது பீர்பாயின் வீட்டிற்குச்செல்ல,

பாந்த்ராவீடு பூட்டியிருந்தது. யாருமில்லாத அவ்வில்லத்தில் மாட்டியிருந்த
ஞானியர்படங்களும், காலப்போக்கில் தங்கள்விதியைச் சந்திக்கநேர்ந்தன.

ஸாயியின்சித்திரம் மட்டுமதிலே தப்பியஅதிசயம் எவருமறியார்.
சர்வவியாபியாம் ஸாயியின்சக்தியை காட்டிடுமிதனை எவர்தானறிவார்!

அலிமுஹமது பல்லாண்டுமுன்னர், முஹமதுஹுஸேன் தாரியாடோபண்
என்பவரிடத்தில் ஞானிபாபா அப்துல்ரஹமானின் சிறியபடத்தைப்

பெற்றதுமதனை மைத்துனரிடத்தில் எடுத்துக்கொடுத்திட, அவரதுமேஜையில்
எட்டுவருடங்கள் வைத்திருந்தார். ஒருநாளதனை எடுத்துச்சென்று

புகைப்படக்கலைஞர் ஒருவர்மூலம் பெரியஅளவில் பிரதியெடுத்து
அலிமுஹமது உட்படமற்றும் சுற்றம்நட்பு அனைவருக்கும்

அவற்றைக்கொடுத்தார். அந்தப்படத்தையும் பாந்த்ராவீட்டில் மாட்டியிருந்தார்.
ஞானிபாபாவின் தர்பாரிலோர்நாள் அவரதுபடத்தை நூர்முஹமது

அளிக்கச்செல்கையில், உருவாராதனை கூடாதென்பதால் கோபமடைந்த
குருபாபாவும் உதைத்திடவந்தார். வருத்தமடைந்த நூர்முஹமதும்

பணத்தையுமிழந்து, குருவின்கோபமும் பெற்றக்காரணத்தால் வேதனையடைந்தார்.
பெரிதுபடுத்திய அந்தப்படத்தை அப்போலோபந்தரில் படகின்மூலம் [2240]

நீரில்சென்று மூழ்கிடச்செய்தார். உறவினர்நண்பர்க்குக் கொடுத்தப்படங்களையும்
திரும்பவும்வாங்கி அனைத்தையுமதுபோல் மீனவன்மூலம் கடலிலெறிந்தார்.

இந்தநேரத்தில் அலிமுஹமதும் மைத்துனர்வீட்டில் இருந்தச்சமயம்
தான்செய்ததுபோல் அவரையுமவ்விதம் செய்திடுமாறு மைத்துனர்கூறினார்.

அதன்படியவரும் மேலாளரையனுப்பி பாந்த்ராவீட்டில் இருந்தப்படங்களை
கடலிலெறிந்திட அனுப்பிவைத்தார். இருமாதம்சென்று பாந்த்ராவுக்குத்

திரும்பியப்போது, பாபாபடம்மட்டும் மாட்டியிருந்ததைக் கண்டுவியந்தார்.
மற்றப்படமெலாம் அகற்றியப்போது இந்தப்படம்மட்டும் தப்பியதெப்படி?

என்றுநினைத்து, மைத்துனர்கண்டால் இதையும்வீசி எறிந்திடுவாரென
மனதுள்நினைத்து படத்தையெடுத்து அலமாரிக்குள் பத்திரப்படுத்தினார்.

யாரிடமிதனைக் கொடுப்பதென்று நினைத்தப்போது, மௌலானாஇஸ்மு
முஜாவரிடத்தில் கலந்தாலோசிக்க பாபாசொன்னதாய் எண்ணமெழுந்தது.

இருவரும்தீவிர ஆலோசனைசெய்து, அண்னாசாஹேபுக்கு[ஹேமாத்பந்த்] அன்பளிப்பாகத்
தந்திடலாமென தீர்மானம்செய்து, தக்கசமயத்தில் அதனைத்தந்தனர்.

கந்தல் துணி திருட்டும், ஞானேஷ்வரி பாராயணமும்::

பி.வி.தேவ்எனும் பாபாஅடியவர் தாணேஜில்லா மாம்லதார்
பகவத்கீதையின் மராத்தியப்பொருளுரை ஞானேஷ்வரியைப் பயின்றிடவிரும்பினார்

மற்றநூல்களைப் படித்திட்டப்போதும் ஞானேஷ்வரியைக் கையிலெடுத்ததும்
ஏதோஒருவிதத் தடையுண்டாகிப் படித்திடஅவரால் முடிந்திடவில்லை.

மூன்றுமாத விடுமுறையெடுத்து ஷீரடிசென்றபின் பவுண்டிலிருக்கும்
தனதில்லம்சென்று பயிலத்தொடங்கியும் ஞானேஷ்வரிமட்டும் இயன்றிடவில்லை. [2250]

நூதனமான சம்பந்தமற்றத் தீயஎண்ணங்கள் திரளாய்த்தோன்றி
நூலைப்படிக்கையில் வந்துத்தடுத்திட, பாபாஅருளைப் பெற்றிடும்வரையில்

ஞானேஷ்வரியைத் தொடுவதுமில்லை என்றேமனதில் தீர்மானித்தார்.
ஆயிரத்தொள்ளா யிரத்துப்பதினான்கில் பிப்ரவரிமாதம் ஷீர்டிசென்றார்.

ஞானேஷ்வரியைப் பயிலுதல்குறித்து ஜோக்'எனும்நண்பர் அவரிடம்கேட்டார்.
பாபாஆசியைப் பெறுவதுபற்றியத் தன‌துதீர்மானத்தை தேவ்இயம்பினார்.

அப்படியாயின், பாபாவுக்கு நூலையளித்து ஆசிகள்பெற்று அதன்பின்படிக்கலாம்
எனுமோர்தகவலை ஜோக்'சொல்லிட, 'எல்லாமறிந்த பாபாவிடத்தில்

அவ்விதம்செய்திட விரும்பவில்லை எனதேவ்பகன்று மசூதிசென்று
பாபாவுக்கு தக்ஷிணையாக ஒருரூபாயைக் கொடுத்துவணங்கினார்.

இரவுவேளையில் பாலக்ராம்எனும் நண்பரிடத்தில் எங்ஙனம்அவரும்
ஸாயிநாதனின் அன்பு,பக்தியைப் பெற்றாரென்ற விவரம்கேட்டார்.

மறுநாட்காலை ஆரத்திமுடிந்ததும் விவரம்சொல்வதாய் நண்பரும்கூறினார்.
மறுநாளாரத்தி முடிந்தப்பின்னர் தேவிடம்பாபா இருபதுரூபாய்

தக்ஷிணைகேட்டிட, தேவுமதனை விருப்புடன்கொடுத்து, கூட்டமிருந்ததால்
மசூதியிலோர் தனியிடம்சென்று அமர்ந்ததுமவரைத் தன்னிடம்வந்து

அமைதியாயமர்ந்திட பாபாபணித்தார். மதியஆரத்தி முடிந்தப்பின்னர்
பாலக்ராமை மீண்டும்பார்த்து எவ்விதம்பாபா தியானம்செய்திடக்

கற்றுக்கொடுத்தார்? என்னகூறினார்? எனும்விவரத்தை மீண்டும்கேட்டார்.
நண்பரோர்பதிலைச் சொல்லிடும்முன்னர் சந்துருவென்னும் தொழுநோயாளியை [2260]

பாபாஅனுப்பி தேவைக்கூட்டி வரும்படியாகச் சொல்லியனுப்பினார்.
தேவ்சென்றதும் 'எதனைப்பற்றிப் பாலக்ராமிடம் பேசிக்கொண்டிருந்தீர்?'

என்றுஸாயியும் அவரைக்கேட்டிட, பாபாபுகழைப் பற்றிகேட்டதாய்
தேவ்பதில்சொன்னார். இருபத்தைந்து ரூபாய்தக்ஷிணை பாபாகேட்க

மீண்டும்மகிழ்வுடன் தேவும்கொடுத்ததும்,உள்ளேஅவரை அழைத்துச்சென்று
'எனதுகந்தல் ஆடைகளைநீ எனக்குத்தெரியாது திருடிக்கொண்டாய்!'

எனக்குற்றம்சாட்ட, எதுவுமெனக்குத் தெரியாதென்று தேவோகெஞ்சினார்
கந்தலாடையைத் தேடச்சொல்லி பாபாகூறிட, எங்குதேடியும்

காணாநிலையில், பாபாமிகவும் கோபமடைந்து, 'வேறொருவரும்
இங்கில்லாநிலையில், நீயேதிருடன்! தலைநரைநிறைந்தும்

திருடுவதற்கெனவே இங்குநீவந்தாய்' என்றுதே[d]வைத் தாறுமாறாகத்
திட்டத்தொடங்கினார். அமைதியாயிருந்து, அடியும்விழுமென தேவ்எதிர்பார்த்தார்.

இப்படியாக ஒருமணிநேரம் சென்றதும்,பாபா வாதாவுக்குச்
செல்லப்பணித்ததும், நண்பரிடத்தே நடந்ததையெல்லாம் தேவ்கூறினார்.

மாலைவேளையில் மூன்றுபேரையும் கூப்பிட்டனுப்பி, கூறியசொற்கள்
துன்பப்படுத்தினும், திருடியிருப்பதால் சொல்லாதிருக்க முடியவில்லையென

பாபாநவின்று, பன்னிரண்டுரூபாய் தக்ஷிணைகேட்டிட, பணம்சேகரித்து
பாபாமுன்னே தரையில்பணிந்து தேவ்வணங்கிட, அவரைப்பார்த்து,

'வாதாவிலமர்ந்து 'போதி'யைத்தினமும் கொஞ்சம்படித்துப் படித்ததன்பொருளை
மற்றவர்கட்கும் விளக்கிச்சொல்லுக. தங்கச்சரிகைச் சால்வைபோர்த்திட [2270]

உனக்காயிங்கே நான்காத்திருக்க, கந்தலையேனோ நீயும்திருடுவாய்?
திருட்டுப்பழக்கம் ஏன்கொள்கின்றாய்?' என்னும்மொழிகளை பாபாசொன்னதும்

தேவின்மனதில் களிப்புப்பிறந்தது. ஞானேஷ்வரியைப் படிக்கும்ஆணையை
பாபாதந்ததால் இனிமேலெளிதாய்ப் படித்திடவியலும் எனும்நம்பிக்கை

தந்தமகிழ்ச்சியில் மீண்டும்வணங்கி, குழந்தையைப்போலத் தன்னையும்ஸாயி
நூலைப்பயின்றிடக் காத்திடவேண்டும் எனவும்வேண்டினார். கந்தல்துணியென

பாபாசொன்னதன் பொருளையும்உடனே உணர்ந்துக்கொண்டார். பாலக்ராமிடம்
பாபாபற்றிக் கேள்விகள்கேட்டதே கந்தலையொக்கும்; நேரிலறிந்திட

ஸாயியிருக்கையில் மற்றவரிடம்போய்க் கேட்பதுதவறு எனவும்புரிந்தார்.
பாபாவழங்கியத் திட்டுக்களையெல்லாம் அருளாசிமலராய் எடுத்துச்சென்றார்.

அத்துடனன்றி இருமாதம்சென்று ஏப்ரல்-இரண்டில் காலைவேளையில்
கனவினில்வந்து போதியைப்பற்றி தேவிடம்கேட்க, பாபாஅருளை

மீண்டும்கேட்டு தேவும்கதறிட, ‘அத்யாத்மீகத்தை என்றன்முன்னே
துரிதமாய்ப்படி'யென ஸாயிபாபா ஆசியருளிட, நூலைக்கொணர்ந்திடச்

சென்றவேளையில் கனவுகலைந்து கண்விழித்தெழுந்த தேவ்அடைந்த
பேரானந்தப் பெருமகிழ்ச்சியைக் கற்பனைசெய்து பார்த்திடவேண்டும்! [2278]

ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.