[மராத்தி மூலம்: ஸ்ரீ கோவிந்த்ராவ் ரகுநாத் தாபோல்கர்]
[தமிழ் மூலம்: ஸ்ரீ சொக்கலிங்கம் சுப்பிரமணியன்.]
(Converted into Two line Tamil verse by : Dr. Sankarkumar, USA)
இலம்பகம் – 46
'பாபாவின் கயா பயணம் - ஆடுகளின் கதை'
முன்னுரை:
புனிதமானதாம் திருவடியிரண்டும், தூயவர்நினைவும், விடுதலைதந்திடும்.
தூலரூபமாய்த் தெரியாதிருந்தும் நினைத்ததுமுடனே அனுபவம்கொடுத்திடும்.
தாயினும்மேலாய்ச் சாலப்பரிந்து கட்புலனுக்கெட்டா நூலாலிழுத்து
அவரறியாமலே அருகிலிருந்தே ஆதரவளித்து அன்புசெய்கிறீர். [2450]
அனைத்தும்புரிந்தும் ஏதுமறியாத் தோற்றம்கொண்டுக் காத்தருள்கின்றீர்.
எதுவும்றியாச் சிறுவர்நாங்கள் பதமலர்ச்சரணம் புகுதலேநல்வழி.
வேண்டுவோர்வேண்டிய வரங்கள்யாவையும் வேண்டியவண்ணமே தந்தருள்கின்றீர்.
நாமஸ்மரணம் எளிதாய்ச்செய்திட தீயகுணங்களும் தீய்ந்தேமாளும்.
நற்குணம்மிகுந்து ஞானம்பிறந்து பற்றுகள்மறைந்து குருவுடனொன்றிடும்
சரணாகதியே அமைதியும்சாந்தியும் அடைவதற்கான அடையாளமாகும்.
அடியாரொருவரை பாபாஏற்றதும் அல்லும்பகலும் அவருடனிருந்து
அறிவுக்கெட்டா வகையினில்செல்லும் கதையினையிங்கே நாமும்காண்போம்.
கயா பயணம் ::
ஸாயியின்தொடர்பு கிடைத்தசிலநாளில் காகாசாஹேப் தீக்ஷித்தனது
மூத்தமகனுக்கு நாக்பூர்நகரில் உபநயனம்செய்யவும், நானாசாஹேப்
சந்தோர்க்கரும் தன்மகனுக்கு குவாலியர்நகரில் திருமணம்செய்யவும்
நிச்சயம்செய்து இருவருமாக ஷீர்டிவந்து பாபாவையழைத்தனர்.
தன்பிரதிநிதியாய் ஷாமாவையேற்றிட பாபாகூறியும், ஸாயியும்நேரில்
வந்திடவேண்டும் என்றவரழைக்க, 'ஷாமாசென்றிடும் முன்னரேதானும்
காசி,பிரயாகைக்குச் சென்றபின்னர் அவ்விடமிருப்போம்' என்றேமொழிந்த
ஸர்வவியாபியாம் ஸாயியின்கூற்றினை நாமும்நினைவினில் கொள்ளுவோமாக.
நாக்பூர்,குவாலியர் சென்றப்பின்னர், காசி,பிரயாகை சென்றுதிரும்பிட
ஷாமாயெண்னி, ஆபாகோதே எனும்தன்நண்பரைக் கூட்டிச்சென்றார்.
பூணூல்விழாவில் காகாசாஹேப் ஷாமாவுக்கு இருநூறுரூபாய்
சன்மானம்தந்திட, குவாலியரிலும் நானாசாஹேப் இருநூறுதந்திட [2460]
காசி,அயோத்யா ஆகியதலங்களில் நானாசாஹேப்பின் சம்பந்தியான
ஜடாரென்பவர் கட்டியகோவிலில் மரியாதைபெற்று மூன்றுமாதங்கள்
தங்கியப்பின்னர், கயாவைநோக்கி இருவரும்கிளம்பிட, செல்லும்வழியில்
பிளேக்நோய் கயாவில்பரவிடும் செய்தியறிந்துக் கலக்கமுற்றனர்.
ஸ்டேஷனிலிறங்கித் தர்மசாலையில் இரவினில்தங்கிக் காலையிலெழுந்ததும்
பிளேக்பற்றியக் கவலையையங்கே கயாவாலியிடம் கேட்டதுமவரும்
அப்படியெதும் இல்லையென்றவர் சொன்னதைக்கேட்டு அவரில்லம்சென்றனர்.
தங்கியயிடத்தில் தொங்கியபடத்தைக் கண்டதும்ஷாமா மகிழ்ச்சியிலாழ்ந்தார்!
ஸாயிநாதனின் திருவுருப்படத்தை அங்கேகண்டு 'உனக்குமுன்னரே யாமங்கிருப்போம்'
எனும்பாபாவின் முந்தையமொழியை நினைவினிற்கொண்டு கண்ணீர்விட்டார்.
ஸாயியின்படமும் அங்கேயிருப்பதன் காரணம்கேட்டிட, பனிரண்டாண்டுகள்
முன்னர்தானும் ஷீர்டிசெல்கையில் ஷாமாயென்பவர் வீட்டினில்தங்கி அவர்தனக்களித்தப்
படத்தைப்பற்றிய விவரத்தினையே கயாவாலிகூறிட இவரேஷாமா
என்றவரறிந்து விருந்துபசாரம் உவப்பாய்ச்செய்தார். யானையின்மீது
ஷாமாவையமர்த்தி, அனைத்துவசதிகளும் செய்துகொடுத்துக் கவனித்துக்கொண்டார்.
பாபாவின்மொழிகள் யாவும் சத்தியம் என்னும்நீதியை இக்கதையுரைக்கும்.
இரண்டு ஆடுகள் ::
ஜீவராசிகள் அனைத்தையும்ஸாயி ஒன்றாய்க்கருதிய நிகழ்வினிக்கண்போம்!
லெண்டியினின்றுத் திரும்பிடும்வேளையில், ஆட்டுமந்தையில் இரண்டுஆடுகளை
பாபாநோக்கி அன்புடனவற்றைத் தடவிக்கொடுத்து முப்பத்திரண்டு
ரூபாய்க்கொடுத்து அவற்றைவாங்கினார். இச்செயல்கண்டு உடன்வந்தஅடியார் [2470]
அதிகவிலையினை பாபாகொடுத்து ஏமாந்துபோனார் என்றவரெண்ணினர்.
பாபாவிடத்தில் இதனைக்கூறிக் கடிந்தபோதிலும், ஆடுகள்மீது
அன்புசெலுத்தி, நாலுசேர்பருப்பு தம்பணம்கொடுத்து அவற்றுக்களித்தார்.
ஷாமாவும்,தாத்யாவும் விளக்கம்கேட்டிட, 'ஏமாந்துபோனேன் எனநீயெண்ணலாம்.
முந்தையப்பிறவியில் மனிதராயிருந்த எனதுநண்பரே இவ்விருஆடுகளும்!
ஒருதாய்மக்களாய்ப் பிறந்துமிருவரும் ஒருவரையொருவர் வெறுக்குமளவில்
பகையாளியாகி, ஒருவரையொருவர் தாக்கிக்கொண்டு துர்மரணமடையத்
தீவினைகாரணம் இந்தப்பிறவியில் ஆடாய்ப்பிறந்தனர். என்னைத்தாண்டி
இருவரும்செல்கையில் நானுமவர்களை அடையாளம்கண்டு, இரக்கம்கொண்டு
அவர்களிருவரும் சற்றிளைப்பாறிடக் கைப்பொருள்செலவில் ஆறுதல்தந்தேன்.
எனதிச்செயலை குறைகூறியதால், அவர்களைத்திரும்பவும் மேய்ப்பனிடமே
அனுப்பிவிடுகிறேன்' என்றவர்மொழிந்து ஆடுகளிரண்டையும் அனுப்பிவைத்தார். [2476]
ஸ்ரீஸாயியைப் பணிக! அனைவர்க்கும் சாந்தி நிலவட்டும்!
[நீ யுணர்த்த உணர்ந்தே சொல்வது அல்லால், என்னறிவால் சொல்ல வல்லேன் அன்றே!]
(To be continued)

No comments:
Post a Comment