Sunday, August 5, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 46.

சீரடி சாயிபாபாவின் அருள்


(Translated into Tamil by Sankarkumar and Santhipriya)

அன்பானவர்களே
அனைவருக்கும் பாபா தின வாழ்த்துக்கள். இன்று நான் சாயியுடனான பக்தர்களின் அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  சாயிபாபாவின் வாக்குகளான ஸ்ரத்தா மற்றிம் சபூரி என்பதைக் கடை பிடித்து வந்தால் பாபாவின் அருள் நிச்சயமாகக் கிடைக்கும் என்பதை இவை எடுத்துக் காட்டுகிறது.
ஜெய் சாயிராம்
மனிஷா


(Translated into Tamil by Sankarkumar )

மீண்டும் மணம் புரிய ஸாயி பாபா என்னை ஆசீர்வதித்தார்

அன்புள்ள சகோதரி மனிஷா,
இந்த மடலை நீண்ட நாட்களுக்குப் பின்னர் நான் எழுதுகிறேன். ஓராண்டு முன்புவரை, விவாகரத்து உட்பட, பல்வேறு பிரச்சினைகளில் நான் சிக்கியிருந்தேன். எனது எதிர்காலம் பற்றி பாபா என்ன முடிவு செய்திருக்கிறார் எனப் புரியாமல் குழம்பினேன்.
ஆனால் இன்று மிகுந்த மகிழ்சியுடன் நான் இந்த மடலை எழுதுகிறேன். என் பெயரைக் குறிப்பிடாமல் இதனை நீங்கள் பிரசுரிக்கலாம்.
எனது முதல் திருமணம் தோல்வியில் முடிந்த பின், நான் எனது வேலையில் மட்டுமே கவனம் செலுத்திக்கொண்டு எனது பெற்றோருடன் வசித்து வந்தேன். திடீரென எங்களது குடும்ப நண்பர் ஒருவர் எனக்கு ஒரு நபரை அறிமுகப்படுத்தி, அவரை மணந்துகொள்ள தீர்மானிக்குமாறு ஆலோசனை கூறினார். அவள் கூப்பிட்டது ஒரு வியாழனன்று. எந்தவித நம்பிக்கையும் இல்லாமல், அவள் சொன்னதைக் கேட்டு அந்த நபருடன் ஒரு தோழியாக நட்பு ரீதியில் பழகத் தொடங்கினேன். ஆனால் ஒருநாள் நான் அவரை நேசிப்பதையும், அவரையே மணக்க விரும்புவதையும் உணர்ந்தேன்.
அவரும் அப்படியே உணர்ந்தார். எங்களது எண்ணங்களைப் பரிமாறிக் கொண்ட பின், இருவரது பெற்றோர்களின் சம்மதத்துடன் சென்ற ஆண்டு அவரை மணந்து கொண்டேன். 3 மாதங்களுக்குப் பின்,ஒரு குழந்தை பெற்றுக் கொள்ளலாம் என நிச்சயித்தோம். 9 வார ஸாயி விரதத்தையும் தொடங்கினேன். அதன் நிறைவு நாளன்று எனது கணவருடன் பாபா ஆலயத்துக்குச் சென்று வந்தேன். அடுத்த 4 நாட்களிலேயே நான் கர்ப்பவதி ஆனேன்.
என்ன ஒரு அதிசயம் என் வாழ்வில்!..... ஒரு பலத்த தோல்விக்குப் பின் ஒரு இனிய வாழ்க்கை, அன்புடன் நேசிக்கும் ஆசைக் கணவர், பாசம் மிக்க உறவினர்கள், விரைவிலேயே ஒரு குழந்தையும்! பாபாவின் கருணையினாலும், ஆசியாலுமே இவை நிகழ்ந்தன.
தங்களது மண வாழ்வில் தோல்வி கண்ட அனைத்து சகோதரிகளுக்கும் ஒன்று சொல்லிக்கொள்ள ஆசைப்படுகிறேன்....பாபாவிடம் முழுமையாகச் சரண் அடையுங்கள் . நல்லதொரு வாழ்க்கை உங்களைத் தேடி வரும்போது ஏற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கை என்பது ஒரு அர்த்தமுள்ள வாழ்வை வாழ்வதே.
ஸாயி மஹராஜ் கி ஜெய்!
------------------

(Translated into Tamil by Sankarkumar )

பெரிய ஆபத்திலிருந்து ஸாயி பாபா என்னைக் காப்பாற்றினார்

அன்புள்ள மனிஷா தீதி,
ஸாயி லீலைகளைப் பகிர்ந்து கொள்ளும் இந்தத் தளத்தை நடத்தி வருவதற்காக உங்களுக்கு என் வந்தனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்படித்தான் பாபா என்னை ஆசீர்வதித்தார் :-
அவரது நன்மொழிகள் அனைத்தும் உண்மையே. நான் மிகவும் பலவீனமாக உணர்ந்த ஒரு வேளையில் பாபா எனக்கு வழி காட்டியதில் நான் மிகவும் மகிழ்கிறேன். எனக்கு வந்த பிரச்சினை மிகவும் வலியது. அனைத்தையும் பூரண நம்பிக்கையுடன் பாபவிடமே சமர்ப்பித்தேன். அவரும் அதைத் தாங்கிக் கொண்டார். 'எனது அடியவரின் இல்லத்தில் இல்லாமையே இருக்காது' என்னும் அவரது கூற்றின்படி, பாபா எனது பிரச்சினையைத் தீர்த்தார்.
அவர் மீதான நம்பிக்கையே மிகவும் முக்கியம். ஒரு குடை போல அவர் நம்மைக் காக்கின்றார். தனது குழந்தைகளின் மீது பாபா கொண்டிருக்கும் எல்லையற்ற அன்பே இதற்குக் காரணம். பொறுமையும், நம்பிக்கையுமே நாம் கொள்ள வேண்டியது.
பிரச்சினைகள் வரும்போது அவை நமக்குப் பெரியதாகத் தோன்றும். ஆனால், பாபாவுக்கு அவையெல்லாம் பொருட்டே அல்ல. அனைத்தையும் தீர்க்கும் சர்வ வல்லமை படைத்தவர் பாபா.
இப்போதெல்லாம் பாபாவை மிக அண்மையிலேயே நான் உணர்கிறேன். நான் எப்போதுமே பாபாவை நேசிப்பேன். ஆனல், ஒரு சில கடினமான பிரச்சினைகள் வந்தபோது, நான் அவரை வேண்டுவதை நிறுத்தி விட்டேன். கடந்த எட்டு ஆண்டு காலமாக நான் ஒரு படத்தைக் கூட வைத்து பூஜை செய்ததில்லை. என் தாய் மட்டும் இப்படிச் செய்வது தவறு என அறிவுறுத்துவார். நான்தான் எனது பூர்வ ஜென்ம வினையால், அதை அலட்சியப்படுத்தி வந்தேன். ஆனல், பாபா எப்போதுமே என் அருகிலேயே இருந்து வந்திருக்கிறார். நான் அமெரிக்கா வந்தபோது, என் நண்பர் ஒருவர் விமான நிலையத்தில் எனக்கு ஒரு அழகிய பாபா சிலையைப் பரிசளித்தார் என்பதை இப்போதும் நினைவு கூர்கிறேன். ஆனால், பிரச்சினைகள் வந்தபோது, நம்பிக்கை இழந்து, 8 ஆண்டுகளாக அவரை அகற்றி விட்டேன்.
வேலை இழந்து நான் இருந்த இடத்திலிருந்து அயலூர் செல்ல நேரிட்டது. அதிர்ஷ்டவசமாக அங்கே ஒரு பாபா கோவிலுக்குச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. அங்கு சென்று வந்த அடுத்த நாளே என் கணவரின் வேலையும் பறிபோனது. அதனால் மிகவும் மனம் வருந்திய எனக்கு அடுத்த 2 மாதங்களிலேயே வேறொரு வேலை கிடைத்தது. ஆனால் செல்ல வேண்டிய இடம் எனக்குப் பிடித்தமானதாக இல்லை. வேலையில் சேர்ந்த மறுநாளே நாங்கள் சென்ற பாபா ஆலயம் இருந்த ஊரிலேயே ஒரு காலியிடம் இருப்பதாகவும், நான் அங்கு செல்ல சம்மதமா எனவும் பணியில் கேட்டார்கள். அது மட்டுமல்ல....வீடும், அலுவலகமும் பாபா ஆலயத்துக்கு 3 மைல்களுக்குள்ளாகவே அமைந்தன! என் ஆச்சரியத்துக்கு அளவே இல்லை. எனது பெற்றோர்களையும் வரவழைத்து எனக்கு ஒரு புதிய வேலையும் தந்திருக்கிறார்.
வீடு ஒன்று வாங்க நினைத்து, பாபாவிடம் சென்று வழிகாட்டுமாறு வேண்டினேன். இதற்குள்ளாக என் வேலை போனதால் அந்த ஆசைக் கனவு தகர்ந்தது. ஆனால், அனைத்துக்குமே பாபா ஒரு தீர்வு வைத்திருப்பார். அவரை முழுமையாக நம்பி, அவரிடம் அதை விட்டுவிட வேண்டும்.
எங்களுக்குப் பழக்கமான ஒரு அன்பான தம்பதியினர் மூலம், நல்லதொரு இடத்தில் எங்களுக்கு வீடு அமைந்தது. எனக்கும் ஒரு புது வேலை கிடைத்தது. முதலில் வலித்தாலும், இறுதியில் இன்பத்தையே எனக்கு பாபா கொடுத்து வருகிறார். கடந்த காலத்தில் நான் எப்படி இருந்தேன் என நினைத்துப் பார்க்கிறேன். அவரது அன்பே எனக்கு வலிமை தந்தது.
ஒரு சமயம் நான் சில முக்கியமான ஆவணங்களைத் தேடிக் கொண்டிருந்தேன். அதே சமயம் எனது பெற்றோரும் ஏமாற்றப்பட்டு, அவமானத்துக்கும் ஆளாயினர். அந்த ஆவணங்களை மீண்டும் வேறு வழியில் பெறலாம் என்றாலும் என் கணவரின் ஏச்சுக்கு ஆளாக நேரிடுமே எனக் கலங்கினேன். அந்தப் பிரச்சினையைக் காட்டிக் கொள்ளாமல் நான் உறுதியுடன் பாபாவை வேண்டினேன். 'எனது மாமியார் வீட்டுக்கு இது தெரிந்தால் என்ன நடக்குமோ? பாபா, ஏற்கெனவே அவர்கள் என் பெற்றோரை மிகவும் அவமானப்படுத்தி விட்டனர். ஒரு மகளாக நான் இதையா செய்ய வேண்டும்?  நீங்கள்தான் காப்பாற்ற வேண்டும்' எனப் பிரார்த்தித்தேன்.
வீட்டில் எனது தந்தை அதைத் தேடிக் கொண்டிருந்தார். அப்போது ஒரு புதிய பெண் என்னுடன் பணியில் சேர்ந்தார். பாபா ஒரு பெரிய படம் மூலமாக என்னிடம் வர வேண்டுமென நான் வேண்டினேன். மறுநாள் அந்தப் பெண் என்னிடம் வந்து 'உனக்கு பாபா மீது நம்பிக்கை இருக்கிறதா?' எனக் கேட்டாள். எனக்கு பாபாதான் எல்லாம் என பதில் சொன்னதும், 'நேற்று இரவு என் கனவில் பாபா வந்து ஒரு பெரிய படத்தை உனக்குக் கொடுக்கச் சொன்னார்' என அவள் சொன்னாள். எனக்கு அவளை அதிகம் பரிச்சயம் இல்லாததால் நான் ஆச்சரியத்தில் ஆழ்ந்தேன். அவளது கணவர் ஒரு பாபா பக்தர் எனவும், அவளிடத்தில் பெரிய படமாக ஏதும் இல்லாததால், அவர் ஸத்சங்கத்திலிருந்து ஒரு படம் வாங்கி வந்ததாகவும் கூறி என்னிடம் தந்தாள். இதுபோல பல அதிசயங்களை பாபா நிகழ்த்தி, தனது இருப்பை எனக்கு உணர்த்தினார். அவளிடம் என் பிரச்சினையைச் சொன்னேன். ஸாயி ஸத் சரிதப் பாராயணம் செய்யும்படி அவள் கூறினாள். நான் ஏற்கெனவே அதையும் செய்து விட்டதாகச் சொன்னதும், 'இது பாபாவின் ஆணை. மீண்டும் அதைச் செய்' என அவள் கூறினாள்.
அதன்படியே செய்து என் சார்பில் அன்னதானம் செய்யும்படி என் அத்தைக்கு கடிதம் எழுதினேன். ஷீர்டி சென்ற ஒருவரிடம் பாபாவுக்கு நேரடியாக ஒரு கடிதமும் கொடுத்தனுப்பினேன். பாராயணம் முடித்த அன்று பாபா ஆலயம் சென்று அவரது கால்களைப் பிடித்துக்கொண்டு கதறி அழுதேன். ஆரத்தி சமயம் என் தந்தையிடமிருந்து ஃபோன் வந்தது.... மிகவும் தளர்ந்த குரலில், வீடு முழுக்கத் தேடியும், எங்குமே அந்த ஆவணம் கிடைக்கவில்லை என வருத்தமுடன் சொன்னார். இது என்னை எந்த அளவில் பாதிக்கப் போகிறது என அவர் நன்கே அறிவார். ஆரத்தி நடக்கும்போது நான் கண்ணீரைக் காட்டிக் கொள்ளாம்ல் மௌனமாக அழுதேன். 'என்னை வேண்டுமானால் தண்டியுங்கள். ஏன் அந்த வயதான தந்தையை வருத்துகிறீர்கள், பாபா? என்னால் இனித் தாங்க இயலாது' என வேண்டினேன்.
மறுநாள் காலை மீண்டும் என் தந்தையிடமிருந்து அழைப்பு வந்தது. இந்த முறை அவரது குரலில் மகிழ்ச்சி தெரிந்தது. நடந்தவற்றைச் சொன்னார்......என்னிடம் பேசிய பிறகு, அவர் சமைத்துக் கொண்டிருந்தார். தேடியது கிடைக்கவில்லையே என்னும் வருத்தத்தில் இருந்தபோது வாசலில் அழைப்பு மணி அடிக்க, போய் கதவைத் திறந்திருக்கிறார். ஆரஞ்சு வண்ண உடை அணிந்த ஒருவர் தான் ஷீர்டி செல்ல விருப்பதால் ஏதேனும் தக்ஷிணை தட முடியுமா எனக் கேட்டர். எனது தந்தை 10 ரூபாய்களைக் கொடுத்ததும், மிகவும் மகிழ்ச்சியுடன் அவரை ஆசீர்வதித்துச் சென்றுவிட்டாராம். இன்னும் ஒரு ரூபாய் கூடுதலாகக் கொடுத்தால் 11 என்னும் கணக்காக இருக்குமே என என் தந்தை நினைத்தார். அப்போது வேறொருவர் வந்து யாசகம் கேட்க அவரிடம் அந்த ஒற்றை ரூபாயைக் கொடுத்து விட்டார். அன்று மதியம் சாப்பிட்டு முடித்ததும், வீடு அலங்கோலமாக இருக்கிறதே என ஒழுங்கு செய்ய ஆரம்பித்திருக்கிறார். அப்போது அதுவரை கிடைக்காத அந்த ஆவணங்கள் அவருக்கு எப்படியோ கிடைத்தது. உடனே என்னை அழைத்து விஷயத்தைத் தெரிவித்தார். நானும் இந்த மகிழ்ச்சியான செய்தியை என் நண்பர்களிடம் பகிர்ந்தேன்.
நடந்த அனைத்தையும் எண்ணிப் பார்த்தால், இவை அனைத்துமே பாபாவின் லீலையே எனப் புரிய வரும். இதை எனது மாமாவிடம் சொல்லி மகிழ்ந்த போது, உனக்கு வெறும் மகிழ்ச்சி மட்டுமே. ஆனல் உன் தந்தைக்கோ பாபாவின் தரிசனமே கிட்டியிருக்கிறது எனப் புரிய வைத்தார். மறு வாரமே அந்த ஆவணங்கள் எனக்குக் கிடைக்க அதை பாபா ஆலயம்  சென்று அவர் காலடியில் சமர்ப்பித்தேன்.
பாபாவின் அன்புக்கு என் வந்தனங்கள். ஸாயிராம்.
இப்படிக்கு
உங்கள் சகோதரி.


(Translated into Tamil by Santhipriya)

கிரிக்கெட் விளையாட்டில் சாயி எனக்கு உதவினார்

நான் அமெரிக்காவின் மிசிகன் நகரில் வசிப்பவன். பெயர் பாலாஜி.
சாயிபாபாவின் லீலைகளுக்கு அளவே இல்லை. நாம் அவரை மனதார வேண்டும்போது நாம் கேட்டதை அவர் தருகிறார். போன கோடைக்காலத்தில் நான் எங்களுடைய பிராஜெக்ட் (திட்டக் குழு) குழுவின் கிரிகெட் ஆட்டத்தில் விளையாட சேர்ந்தேன்.  நாங்கள் அந்த குழுவை துவக்கியதுமே, நாங்கள்  புதிய அணியை துவக்கியவர்கள்  என்பதினால் எந்த போட்டியிலுமே வெற்றிப் பெற மாட்டோம் என்று எங்களை பலரும் கேலி செய்தார்கள். எங்களுக்கும் அதுவே நடந்தது. நாங்கள் பங்கேற்ற போட்டிகளில் அனைத்திலுமே தோல்வியை தழுவி வந்தோம். ஆகவே எங்களுடைய பலம் எது, பலவீனம் எது என்று எங்களுக்கு தெரியாமல் இருந்தது.
நான் விளையாட்டு பயிற்சி ஆட்டங்களில் நன்றாக விளையாடுவேன். ஆனால் போட்டிகளில் சோபிக்கவில்லை . நான் பங்கேற்ற முதல் ஆட்டத்தில் 15 ரன்கள் மட்டுமே தடுமாறி எடுக்க முடிந்தது. என் ஆட்டத்தின் மீது என்னுடைய  குழு அபார நம்பிக்கை வைத்து இருந்தார்கள். ஆனால் நான் அடுத்தடுத்து நடந்த போட்டிகளில் எந்த ரன்னையுமே எடுக்க வில்லை. நாங்கள் பங்கேற்ற அனைத்து ஆட்டங்களிலும் தோல்வியையே தழுவினோம்.
ஆகவே இறுதி ஆட்டத்தில் நான் பங்கேற்க மறுத்தேன். என் அணியின் தலைவரும் என் முடிவை ஏற்றுக் கொண்டார். ஆனால் கடைசி நேர குளறுபடியினால் என்னையும் அந்த ஆட்டத்தில் விளையாடஅழைத்தார்.  நான் போகும் முன் பாபாவிடம் நான் அந்த போட்டியில் நன்றாக விளையாடி, எங்கள் குழு வெற்றி பெற காரணமாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டேன்.
போட்டி ஆரம்பித்தது. டாஸ் வெற்றி பெற்று பாட்டிங் செய்ய முடிவு செய்தோம். நான் எப்போதும் மூன்றாவது ஆட்ட நாயகனாகவே களம் இறங்குவேன். ஆனால் அன்றோ என் அணியின் தலைவர் என்னை மூன்றாவது ஆட்டக்காரனாக விளையாட அனுப்பவில்லை. எங்கள் அணி ஏழு விக்கெட் இழப்பிற்கு 36 ரன்னே எடுத்திருந்தது. நான் ஒன்பதாவது ஆட்டக்காரனாக களம் இறங்கினேன். எங்கள் அணி அதிகபட்சமாக 50 ரன்களில் அவுட் ஆகிவிடும் என நினைத்தோம்.
ஆனால் திடீர் என நான் நன்றாக விளையாடத் துவங்கி ஆட்டத்தில் இரண்டு ஆறு ரன்கள், நான்கு நான்கு ரன்கள் என பந்தை அடிக்கத் துவங்கினேன். நான் அதுவரை நான்கு ரன்களை அடித்ததே இல்லை. ஆகவே இது சாயியின் கிருபையாகவே இருந்திருக்க வேண்டும். அடுத்தடுத்து ரன்களை எடுத்த நான் அடித்த பந்தை கட்ச் பிடிக்காமல் இரண்டு முறை தவற விட்டார்கள். அதன் பிறகு நான் சாயிபாபாவின் ஆலயத்துக்கு சென்றிந்தபோது அவர் என்னைப் பார்த்து சிரிப்பது போல இருந்தது. நான் ஆட்ட இறுதிவரை சோர்வு அடையவே இல்லை. அன்று நான் 56 ரன்கள் எடுத்து ஒன்பதாவது விக்கெட்டில் 70 ரன்களை சேர்த்திருந்தேன். நான் அதிக ரன்களை எடுத்து இருந்ததினால் எனக்கு ஆட்ட நாயகன் விருது கிடைத்தது. எங்கள் அணி அந்த ஆட்டத்தில் வெற்றியும் பெற்றோம். இது சாயியின் கிருபையாகவே இருந்திருக்க வேண்டும்.



(Translated into Tamil by Santhipriya)

என் கணவருக்கு வேலைக் கிடைக்க பாபா அருள் புரிந்தார்

ஜெய் சாயிராம் மனிஷாஜி
நீங்கள் எப்படி இருக்கின்றீர்கள். எல்லாம் நல்லபடியாக உள்ளது என்று நம்புகிறேன்.
வேறு ஒரு இடத்தில் பணியில்  இருந்த என்னுடைய கணவருக்கு ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் என்ற நகரில் வேலைக் கிடைத்து சேர்ந்த விஷயத்தை போன தடவை எழுதி இருந்த  கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தேன்.
ராம விஜயத்தை எங்களுடன் பங்கிட்டுக் கொண்டதற்கு நன்றி கூறுகிறேன். தினமும் அந்த பிரதியை நீங்கள் அனைவருக்கும் அனுப்பி வந்ததற்கு நன்றி. சாயிபாபாவின் லீலைகள் - என்ற பத்திரிகையில் வெளியான பாபாவின் லீலைகளையும் அது போலவே எங்களுக்கு தினமும் அனுப்பினால் அதையும் ராம விஜயத்தை தினமும் படித்ததைப் போல படிக்க வசதியாக இருக்கும்.
கீழே உள்ள பாபாவுடனான எனது அனுபவத்தை வெளியிடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
நான் போன வருடம் முதல் பாபாவின் பக்தையானவள். என்னுடைய கணவர் வேலையை  இழந்து விட்டதினால் துக்கத்தில் இருந்தபோது http://www.shirdisaibabakripa.org என்பதில் வெளியாகி இருந்த ஒன்பது வார விரதத்தை படித்ததும், அதை நானும் செய்யத் துவங்கினேன்.
அந்த விரதத்தை செய்து முடித்த அடுத்த ஒரே மாதத்தில் என்னுடைய கணவருக்கு வேலை  கிடைத்து விட்டது. ஆனால் அவருக்கு வேலை கிடைத்த மானிலமோ அதிகக்  குளிராக இருந்த பகுதியில் இருந்தது. ஆனாலும் வேறு வழி இன்றி அதை ஏற்றுக் கொள்ள வேண்டி இருந்ததின் காரணம் நாங்கள் தங்கி இருந்த இடத்துக்கான வாடகைக் கட்டணங்களை கொடுக்கவும் பிற செலவுகளுக்கும் பணம் தேவையாக இருந்தது. IT யில் வேலைக் கிடைப்பதும் அந்த காலகட்டத்தில் கடினமாக இருந்தது.
அவருக்கு கிடைத்த வேலை மூன்று மாதத்துக்கு ஒருமுறை மீண்டும் மறு ஒப்பந்தம் செய்து கொள்ள வேண்டிய நிபந்தனையுடன் இருந்தது. வார இறுதியில் அவர் எங்களைப் பார்க்க வருவது உண்டு. ஆனால் அவர் இருந்த இடமோ மிக அதிக குளிர் பிரதேசமாக இருந்ததினால் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தது. பாபாவிடம் என் கணவருக்கு வேறு வேலை நாங்கள் தங்கி உள்ள மானிலத்திலேயே கிடைக்க வேண்டும் என வேண்டிக் கொண்டேன். ஆகவே மீண்டும் சாயி சரித்திரத்தைப் படிக்க ஆரம்பித்தேன். இரண்டு வாரத்தில் இரண்டு முறை அதை படித்து முடித்தேன். தினமும் சாயி சரித்திரத்தையும் கேட்க ஆரம்பித்தேன்.
என் கணவரின் வேலை ஒப்பந்தம் முடிவடைய இரண்டு வாரம் பாக்கி இருந்தது. அது மீண்டும் தொடருமா என்பது தெரியாத நிலை. அவர் உடல் நிலை வேறு பாதிக்கப்பட்டு இருந்தது. அனால் ஒரு அதிசயம் நடந்தது. ஒரு வெள்ளிக் கிழமை திடீர் என அவருக்கு வேறு இடத்தில் இருந்து நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு வந்தது. அதில் அவர் வெற்றி பெற்றார். அடுத்த திங்கள் கிழமை முதல் நாங்கள் தங்கி இருந்த ஊரிலேயே வேலையில் சேருமாறு கூறி விட்டார்கள். நான் பாபாவிற்கு என் இதயபூர்வமான நன்றி கூறினேன். ஆகவேதான் உடனே இதை பிரசுரிக்குமாறு வேண்டிக் கொண்டு உங்களுக்கு அனுப்பி உள்ளேன்.
ஜெய் சாயிராம்


(Translated into Tamil by Santhipriya)

எனக்கு திருமணம் நடைபெற பாபா உதவினார்

அனைவருக்கும் சாயிராம்
இன்று குருபூர்ணிமா. நான் பாபாவிற்கு உறுதி கூறி இருந்ததை அவர் நினைவு படுத்தியதால் நவ குருவார் விரதத்தை நான் செய்து முடிந்தவுடன் எனக்கு அவருடைய அருள் கிடைத்த விவரத்தை இன்று வெளியிடுகிறேன்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக என்னுடைய திருமண விஷயத்தினால்  துக்கத்தில் இருந்தேன். நான் விரும்பியவரை திருமணம் செய்து கொள்வதில் என் பெற்றோர்களுக்கு விருப்பம் இல்லை. நான் கடந்த இரண்டு வருடங்களாக அவர்களுக்கு என்னுடைய காதலனைப் பற்றி எத்தனை எடுத்துக் கூறியும் அதை ஏற்க அவர்கள் மறுத்தார்கள்.
எங்களை விட்டு நிரந்தரமாக பிரிந்து செல்ல வேண்டும் என்றால் அவனை திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியோடு இரு என்று அவர்கள் கூறிவிட்டார்கள். என்னுடன் பேசுவதையும்  நிறுத்திக் கொண்டார்கள். நான் மிகவும் சோகத்தில் ஆழ்ந்தேன். எனக்கு மனநல மருத்துவ சிகிச்சையும் கொடுத்தார்கள். நான் அமைதியாக பாபாவின் முன் நின்றபடி அழுது கொண்டிருந்தேன்.
என்னுடைய காதலர் என்னுடைய பெற்றோர்களை சந்தித்து பேச விருப்பம் தெரிவித்தாலும்  அவரை சந்திக்க என் பெற்றோர்கள்  மறுத்தார்கள்.
ஒரு நாள் நான் உங்கள் இணையதளத்தில் வெளியாகி இருந்த விரதத்தைப் பற்றி படிக்க நேரிட்டது. நான் என்னுடைய முடிவில் தீர்மானமாக இருக்கவும், மன திடம் பெறவும் பாபாவிடம் வேண்டிக் கொண்டு அந்த விரதத்தை செய்து முடித்தேன்.
அதற்குக் காரணம் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நான் விரும்பிக் காதலித்தவரையே நான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதுதான். முடிவில் நாங்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டு சீரடிக்குச் சென்றோம் .
பாபாவிடம் நம்பிக்கை வைத்து அவரிடமே அனைத்தையும் விட்டு விட்டால் நடப்பது அனைத்தும் நலமாகவே முடிவடையும்.
சாயிராம்


(Translated into Tamil by Santhipriya)

குருபூர்ணிமா ஆரத்தியில் நான் பெற்ற அனுபவம்

அனைவருக்கும் ஜெய் சாயிராம்
சாயியுடனான அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள நீங்கள் அமைத்துள்ள வலை தளத்துக்கு நன்றி. சீரடி சாயிபாபாவின் தரிசனமும் அவருடைய ஆசிகளும் முழுமையாக எனக்குக் கிடைத்தது.
குருஜியின் தரிசனத்துக்கு வந்திருந்த 10,000 த்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பல வகை பழங்கள் , இனிப்புக்கள் போன்றவை பிரசாதங்களாகக் கொடுக்கப்பட்டன.
இனிய இசையின் பின்னணியில் அற்புதமாக அலங்கரிக்கப்பட்டு இருந்த பாபாவின் தரிசனத்தை அனைவரும் பெற்றார்கள். உண்மையில் அங்கு பாபாவின் இடத்தில் இருந்தது அருமையாக இருந்தது.
குருபூர்ணிமா நடந்த இடத்து நுழை வாயிலில் எனக்கு ஒரு நண்பன் கொடுத்திருந்த சாயி பாபாவின் படம் வைக்கப்பட்டு இருந்தது எனக்கு அவர் கொடுத்த கிருபையை அதிகரித்தத போல இருந்தது.
அன்று மதியம் அருகில் இருந்த நண்பரின் வீட்டிற்கு மதிய ஆரத்தியின் நிகழ்ச்சியை படப் பெட்டியில் பார்க்க சென்றோம். ஆனால் அது அதில் தெரியவில்லை  என்பதினால் அனைவரும் மனம் ஒடிந்தோம்.
மீண்டும் குருஜியின் வைபவம் நடந்து கொண்டு இருந்த இடத்துக்கு சென்றபோது அங்கு அமர்ந்து இருந்த ஒரு சாயி பக்தர் சாயி ஆலயத்தில் நடைபெற்றுக் கொண்டு இருந்த மதிய ஆரத்தியின் நேரடி நிகழ்ச்சியை தனது கைத்தொலைபேசியில் அனைவரும் கேட்கும் வகையில் உரக்க வைத்து இருந்தார்.
அற்புதம். குருஜியின் மகிமையையும் எனக்கு கிடைத்த கிருபையும் என்னவென்று சொல்வது?
அந்த வைபவ தினமான செய்வாய் கிழமையன்று மல்லேஸ்வரம் சாயியின் ஆலயத்தில் 40 முதல் 50 ஆயிரம் வந்திருந்தார்கள் என்பதைக் கேட்டபோது பெருமையாக இருந்தது.
பிரகாஷ்

(Translated into Tamil by Santhipriya)

பாபாவின் ஆசிகள்

அனைவருக்கும் சாயிராம்
சாயியுடனான அனுபவத்தை இரண்டாம் முறையாக நான் அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். நான் பாபாவை பார்க்க ஆரம்பித்ததில் இருந்து தினம் தினம் சில அனுபவங்களை பார்க்கிறேன். என் வாழ்க்கையில் நிறைய மாறுதல்கள் மற்றும் நன்மைகள் எற்படத் துவங்கி உள்ளது. நான் கெட்ட  வார்த்தைகளைப் பேசுவது இல்லை. பிறருக்கு உதவி செய்யத் துவங்கி உள்ளேன். அனைவருடனும் அன்பு செலுத்துகிறேன். அதனால் என் வாழ்க்கையிலும் நல்லவை நடந்து வருகின்றன.
சாயிபாபா என்னுடன் ஒவ்வொரு கணமும் இருக்கிறார். நான் அவரிடம் எதையாவது வேண்டிக்கொள்ளும்போது, என் மனம் அமைதி அடைவதை உணர்கிறேன். பாபாவும் விரைவில் உனக்கு அவற்றை நடத்திக் கொடுக்கிறேன் என்று உத்திரவாதம் கொடுப்பதை உணர்கிறேன். இப்படி உணர்வது அவரவர் காட்டும் பக்தியைப் பொறுத்தே அமைகிறது. நாம் அவரிடம் முழுமையாக சரண் அடைய வேண்டும். அப்போது அவர் நம் வாழ்க்கைக்கான நல்ல பாதையை அமைத்துக் கொடுப்பார் என்பது திண்ணம்.
ஓம் சாயிராம்

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.