Monday, October 29, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 47.

'ஷீர்டி ஸாயி பாபாவின் அருள்- ஸாயி 


 
(Article Slightly condensed and Translated 
into Tamil by Sankarkumar, USA )


அனைவருக்கும் ஸாயிராம்.
ஷீர்டி ஸாயி பாபாவுடனான தங்களது அனுபவங்களை சில அடியவர்கள் சொல்லுவதை இங்கே பகிர்ந்து கொள்கிறேன். ஜெய் ஸாயி ராம்.--
மனிஷா
-----------------------
'பாபா என்னைத் தொல்லைகளிலிருந்து வெளிக்கொணர்ந்தார்':
ஸாயிராம். ஸத்குரு ஸாயிநாதாய நம:
என் பெயர் தரா Vஆ ஸாஸ்திரி. வயது 52. நான் ஒரு தீவிர பாபா பக்தன். பாபா என் பின்னே நின்று கொண்டு என்னைச் சரியான பாதையில் வழி நடத்திச் செல்வதைப் பலமுறை உணர்ந்திருக்கிறேன். ஒரு வங்கி மேலாளராக நான் பணி புரிகிறேன்.
எந்க ஒரு மனிதனாலும் என்னை வெளியே கொண்டுவர முடியாத அளவிலான துன்பங்களை நான் 2009-ல் சந்தித்து, தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தேன். அந்த சமயத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த ஸ்ரீகருணா என்னும் ஸாயி அன்பரைச் சந்தித்தேன். அவர் எனக்கு ஸாயி ஸத் சரிதம் பிரதியொன்றைக் கொடுத்து, தினமும் ஒரு அத்தியாயம் அல்லது ஒரு பக்கமாவது தொடர்ந்து படித்துவருமாறு கேட்டுக்கொண்டார்.
அந்த நாளிலிருந்து [ஜூலை 2009] நான் தினமும் ஒரு அத்தியாயம் வீதம் படித்து வருகிறேன். அவ்வப்போது 7 நாட்களுக்குள் படித்து ஸப்தாஹமும் செய்கிறேன். என்னை வாட்டிய தொல்லைகளிலிருந்து நான் எப்படி மீண்டு வந்தேன் என எனக்கே தெரியவில்லை. அனைத்திலிருந்தும் விடுபட்டு ஒரு சுதந்திர மனிதனாக நான் இப்போது இருக்கிறேன். பாபாவின் கருணையே இதுபோலச் செய்தது என உறுதியாக நம்புகிறேன்.
ஸாயி ஸத் சரிதத்தைத் தொடர்ந்து படிப்பது மிக்கவும் சக்தி வாய்ந்த ஒரு சாதனை. அது பாபாவை நம்புபவரை நேரே அவரிடம் இட்டுச் செல்லும்.
ஓம் ஸ்ரீ ஸாயிராம்.
பாபு கிருபா ஸித்யார்தம்
-----------------------
'சரியான தருணத்தில் உதவி':
ஸாயிராம், மனிஷா தீதி. பாபாவைப் பற்றி இன்று நினைக்கும்போது, 3 ஆண்டுகளுக்கு முன் என் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு அதிசயத்தைப் பகிர விரும்புகிறேன். அப்போது நான் சென்னையில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன். ஒருநாள் மாலை அருகிலிருந்த மருந்தீச்வரர் கோவிலுக்கு என் தோழிகளுடன் சென்றேன். இறைவனை வணங்கியபின் அங்கிருந்த புத்தகக் கடைக்குச் சென்றோம். கடந்த 6 மாதங்களாக என் தாய் தேடிக்கொண்டிருந்த 'சனி பகவான் கவசம்' இருக்கிறதா என விசாரித்தேன். இல்லையென கடைக்காரர் சொன்னதும் வேறெங்கே கிடைக்கும் எனக் கேட்டேன். அப்போது என்னையும், என் தோழிகளையும், கடைக்காரரையும் தவிர வேறெவரும் அங்கில்லை. என் தோழி ஒருத்தி ஒரு சிறிய ஸாயி பொம்மையை வாங்கி எனக்கு அன்பளிப்பாகக் கொடுத்தாள்.
கடையை விட்டு வெளியே வந்ததும், ஒரு வயதானவர் என்னருகே வந்து ஒரு வாழ்த்து அட்டை போன்ற ஒன்றை என்னிடம் கொடுத்து, ' நீ இந்தப் புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். உனக்கு இதைக் கொடுக்க வேண்டுமென விரும்பினேன்' எனச் சொல்லிவிட்டு, உடனே அங்கிருந்து சென்றுவிட்டார். எல்லாம் கணப் பொழுதில் நிகழ்ந்து முடிந்ததால் எனக்கு முதலில் ஒன்றும் புரியவில்லை. அந்த அட்டையின் முகப்பில் ஒரு ஹனுமான் படம் இருந்தது. அதைத் திறந்து பார்த்தபோது, நான் தேடிய 'சனி பகவான் கவசம்' அதில் அச்சிடப்பட்டிருந்தது. அந்த வயதானவரை சுற்றுமுற்றும் தேடினோம். எங்குமே காணவில்லை. எங்கும் நிறை ஸாயியே அவர் வடிவில் வந்து நான் மாதக் கணக்கில் தேடிக்கொண்டிருந்த புத்தகத்தைக் கொடுத்திருக்கிறார். இன்றும் அந்தப் புத்தகத்தைத்தான் என் தாய் தினமும் பாராயணம் செய்து வருகிறார். எனது சின்னச் சின்ன ஆசைகளைக் கூட உடனடியே பூர்த்தி செய்யும் ஸாயிக்கு கோடி வந்தனங்கள். அவரடியில் பணிகிறேன், ஸாயிமா!
என். ப்ரியா


------------------------------------------
'பாபா எனக்கு உதவினார்!':
அன்புள்ள மனிஷா'ஜி,
என் பெயர் ஆர். பண்டிமீனா. பாபாவின் குழந்தையான நான் தமிழ்நாட்டில் மதுரையில் வசித்து வருகிறேன். எனது அனுபவத்தை எழுத விரும்புகிறேன்.
சில ஆண்டுகளுக்கு முன், நான் ஸாயி குடும்பத்தில் நுழைந்தேன். ஸாயியின் அற்புத ஆசிகளை நான் பல முறை அனுபவித்திருக்கிறேன். 'பால் நினைந்தூட்டும் தாயைப் போல்' ஸாயி தனது பசித்த குழந்தைக்கு நேரமறிந்து அமுதூட்டுகிறார். ந்ந்ந்.அச்க்சைபப.cஒம் தளத்தில் எனது கேள்விகளுக்கு விடையளிக்கிறார்.
இரு ஆண்டுகளுக்கு முன், நான் ஆந்திராவில் இருக்கும் அடிலாபாத் என்னும் ஊருக்கு அலுவல் வேலையாகச் சென்றேன். அப்போது அருகிலிருந்த ஒரு பழங்குடியினர் வசிக்கும் கிராமத்துக்குச் செல்லும் வழியில், ஏதேனும் ஒரு வாகனத்துக்காகக் காத்திருந்தேன். பாஷை புரியாத ஊரில் என்ன செய்வது எனத் திகைத்திருந்தேன். ஸாயியை மனதில் வேண்டியபோது, அந்த வழியே ஒரு ஷேர் ஆட்டோ வந்தது. அதன் முகப்பில் ஸாயியின் அழகிய படம் ஒட்டப்பட்டிருந்தது. அதில் ஏறி அமர்ந்து நிம்மதியாகப் பயணித்து அந்தக் கிராமத்துக்குச் சென்று என் பணியை நிறைவாய் முடித்தேன்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு டைஃபாய்ட் ஜுரத்தால் பாதிக்கப்பட்டென். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மருத்துவரின் ஆலோசனையின் பேரில் 40 நாட்கள் விடுப்பு எடுக்க விண்ணப்பித்தேன். ஸாயியின் அருளால் நான் கேட்ட விடுப்பு கிடைத்தது. அந்த சமயத்தில் ஸாயி ஸத் சரிதத்தை 3 முறை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனது நோயும் குணமானது. அப்போது ஒரு வீடு வாங்கும் எண்ணம் மனதில் தோன்றியது. இது எப்படி முடியும் என என் வீட்டில் சந்தேகப் பட்டார்கள். ஆனால் என் அத்தையின் மூலம் ஸாயி இந்த எண்னத்தை உறுதிப் படுத்தினார். தேவையான பணம் அப்போது எங்களிடம் இல்லை. என் கணவர் வெளிநாட்டிலும், நான் இந்தியாவிலும் வேலை பார்த்துக் கொண்டிருந்தோம்.
வீடு வாங்கக் கடனுக்கு விண்னப்பித்தேன். அப்போது என் அத்தை மூலம் ஒரு நல்ல வீடு பற்றிய விவரம் கிடைத்தது. எல்லாம் ஸாயி அருள். இந்த விஷயத்தை என் கணவருக்குத் தெரியப் படுத்தினேன். சாதாரணமாக இதற்கெல்லாம் ஒத்துப்போகாத என் கணவர் மறு பேச்சின்றி சம்மதம் சொன்னார். ஆனாலும் கையில் பணமில்லை. ஆனால் ஸாயியின் அருளால், என் அத்தை 11000 ரூபாய்கள் முன் பணமாகக் கொடுக்க முன் வந்தார். எனவே நம்பிக்கையுடன் சென்று, வீட்டு சொந்தக்காரரிடம் அதைக் கொடுத்தேன். ஸாயி என்னுட்ன் இருப்பதைக் காட்டும் விதமாக அந்த வீட்டுப் பூஜையறையில் ஸாயி படம் தாங்கிய ஆரத்தி புத்தகம் இருந்ததைக் கண்டு மகிழ்ந்தேன். எத்தனையோ பேர் அந்த வீட்டுக்காக முயன்றபோதும், ஸாயி அருளால் எங்களுக்கே முதலவதாக முன்பணம் கொடுக்கும் வாய்ப்பு கிட்டியது. வங்கிக் கடன் பெறும் முயற்சியில் தற்போது அதற்கான ஆவணங்களை எவ்விதச் சிரமமுமின்றி சேர்த்துவிட்டேன். ஸாயி ஆசியுடன் விரைவில் வீட்டை வாங்கி விடுவோம் என நம்பிக்கையுடன் இருக்கிறோம்.
ஸாயியின் ஆசிகளுடன்,
திருமதி. ஆர். பண்டிமீனா.



'ஸாயி என் வாழ்வில்..!':
என்னுடைய இந்த அனுபவத்தை மகிழ்ச்சியுடன் பகிர்கிறேன். ஸாயியே என் வாழ்க்கை.
எப்படி ஸாயியை நம்பத் தொடங்கினேன் என எனக்குத் தெரியவில்லை. ஒவ்வொரு வியாழனும் ஸாயி ஆலயத்துக்குச் செல்வேன். ஒருமுறை கூடத் தவற விட்டதில்லை. வேலை தேடி என் ஊரை விட்டு மும்பை சென்று என் மாமாவின் வீட்டில் தங்கினேன். அது எனக்குப் புதிய இடம் என்பதால் ஸாயி ஆலயத்துக்குச் செல்வது தடைப்படுமோ என நினைத்தேன். ஆனால் ஸாயி என்னைக் கைவிட மாட்டார் என்னும் நம்பிக்கையும் கூடவே இருந்தது. மாமாவின் மகளிடம் 'இங்கேதாவது ஸாயி ஆலயம் அருகில் இருக்கிறதா?' எனக் கேட்டேன். அவள் அப்படி எதுவும் இல்லையெனச் சொன்னது எனக்கு ஏமாற்றம் அளித்தது. அதே தினம், எங்கள் வீட்டுக்குப் பக்கத்திலிருந்த ஒருவர் என்னைத் தன்னுடன் துணைக்கு வருமாறு அழைத்தார். எங்கு போகிறார் எனச் சொல்லவில்லை.
அவர் என்னை நேராக அருகிலிருந்த ஒரு ஆலயத்துக்குக் கூட்டிச் சென்றார். அது ஒரு ஸாயி ஆலயம்! எனது மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. அன்று முதல் நான் ஒரு வியாழக்கிழமையைக்கூடத் தவறவிடாமல், ஸாயியை தரிசனம் செய்தேன். இந்த மறக்க முடியாத அனுபவத்தைப் போலவே பல அனுபவங்கள் எனக்குக் கிட்டின. ஸாயி எப்போதும் என்னுடனேயே இருக்கிறார். அவர் மீது நம்பிக்கை கொண்டால், எங்கிருந்தாலும் அவரைக் காணலாம். ஓம் ஸ்ரீ ஸாயி நாதாய நம:!
---------------------
'ஆபத்தில் காப்பவர்':
ஒருநாள் இரவில் நான் கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்டேன். நான் வசித்து வந்த நாடு எனக்குப் புதிது என்பதால், என்ன செய்வதெனத் தெரியாமல் தவித்தேன். அது ஒரு குளிர் பிரதேசம் என்பதால், வெளியே செல்லப் பயந்தேன். அவசர உதவி ஊர்தியை அழைப்பதும் மிகுந்த செலவாகுமென்பதால், 'அடுத்த 4 மணி நேரத்துக்கு இந்த வலியை நான் தாக்குப் பிடிக்க உதவுங்கள், பாபா' என ஸாயியை மிகவும் வேண்டிக் கொண்டேன். அடுத்த நிமிடமே நான் உறக்கத்தில் ஆழ்ந்து போனேன். சரியாக 4 மணி நேரமானது, 'சட்'டென்று விழித்துக் கொண்டேன். அப்போது விடிகாலை நேரம். எனது நண்பரை வரச்சொல்லி மருத்துவமனைக்குச் சென்றேன். எனக்கு குடல் வால் வீக்கம் எனக் கண்டுபிடித்து அறுவை சிகிச்சையும் வெற்றிகரமாக நடந்தேறியது.
மனப்பூர்வமாக நான் ஸாயியைப் பணிந்து எனது வந்தனங்களைத் தெரிவித்தேன். அவரது வழிநடத்துதலையும், அருளாசியையும் எப்போதும் வேண்டுகிறேன். அனைவரையும் அவர் ஆசீர்வதிக்கட்டும்
- நாகேஷ்.

----------------------------
'ஸாயியிடம் நம்பிக்கை வையுங்கள்':
அன்புள்ள மனிஷா'ஜி மற்றும் ஸாயி அன்பர்களே,
உங்களது தளத்தில் வரும் அனுபவங்களைப் படிப்பதன் மூலம் ஸாயி மீதான என் நம்பிக்கை மேலும் உறுதிப்படுகிறது. நான் ஏற்கெனவே சில அனுபவங்களைப் பகிர்ந்திருக்கிறேன். எனக்கு அன்றாடம் நிகழ்ந்துவரும் இந்த அனுபவங்களில் ஒன்றை இன்று சொல்ல விழைகிறேன்.
நான் எனது குடும்பத்தாருடன் காரில் சென்றுகொண்டிருந்தபோது, ஜன்னல் பக்கமாக உட்கார்ந்திருந்தேன். சூரிய வெப்பம் நேராக என்னைத் தாக்கியது. நான் உட்கார்ந்திருந்த ஜன்னலோர இருக்கையைவிட்டு நகர விரும்பாமல், ஸாயியிடம் இதற்கு ஏதாவது செய்யுங்கள் என வேண்டினேன். என்ன ஆச்சரியம்! அந்த நொடியிலிருந்து நாங்கள் சென்றடையவேண்டிய இடம் வரையிலும் இரு புறமும் நிழல் தரும் மரங்களாக இருந்து சூரிய வெப்பம் துளிக்கூட என் மீது படாமல் சென்றடைந்தேன்.
அது மட்டுமின்றி, நான் எந்தக் காரியத்துக்காக வெளியே சென்றாலும், 9 என்னும் எண் எப்படியாவது என் கண்களில் படுகிறது. இதன் மூலமும் ஸாயி என்னுடனேயே எப்போதும் இருப்பதை எனக்குக் காட்டுகிறார். தற்போது என் வாழ்வில் சில பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறேன். அடிக்கடி நான் அவரைத் தொந்தரவு செய்து கேள்விகளைக் கேட்டபோதிலும், எனது பாதுகாப்பற்ற நிலையை அவர் நன்கே உணர்ந்து பொறுமையாக எனக்கு புத்தி சொல்கிறார். அவர் காட்டும் வழிகளில் நம்பிக்கை வைத்து, என் விருப்பங்களை நான் பூர்த்தி செய்வேன். அவரது சக்தியைக் குறைவாக எடை போடாமல், முழு மனதுடன் அவர் மீது நம்பிக்கை வையுங்கள்; நமக்கு எது நல்லதோ, அதை பாபா நிச்சயம் செய்வார் என ஸாயி அன்பர்கள் அனைவரையும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன். மீண்டும் சில அனுபவங்களை உங்களுடன் பகிர்வேன் எனச் சொல்லி விடை பெறுகிறேன்.
ஜெய் ஸாயி ராம்.
---------------
'பாபா என்னை ஆசீர்வதித்தார்!':
தயவுசெய்து என்னைப் பற்றிய தகவல்களை சொல்ல வேண்டாம். இந்தத் தளத்தை வடிமைத்துத் தருவதற்கு என் வந்தனங்கள்.
நான் மலேஷியாவில் வசிக்கிறேன். எனது பள்ளியின் தமிழ்ச் சங்கத்தில் திரையிடப்பட்ட ஸாயிபாபா திரைப்படத்தைப் பார்த்தபின், அவர் மீதான நம்பிக்கை எனக்கு உண்டாகி, 2008-லிருந்து நான் அவரது அடியவராக இருக்கிறேன். பொதுவாக நான் சற்று கூச்ச சுபாவம் உள்ளவன். எந்தவொரு சின்ன விஷயமானாலும் நான் எளிதில் பதட்டம் அடைந்து விடுவேன். தற்போது நான் கல்லூரியில் விடுதியில் தங்கிப் படிக்கிறேன். எனது கல்லூரியில் முதல் 2 ஆண்டுகளுக்கு மட்டுமே விடுதியில் தங்க முடியும். அதன் பிறகு, அடுத்த 3 ஆண்டுகளுக்கு, ஒரு சில குறைந்தபட்ச தகுதிகள் இருந்தால் மட்டுமே விடுதியில் தங்க அனுமதிப்பார்கள். இரண்டாம் ஆண்டு இறுதித் தேர்வு மதிப்பெண்கள் அதிகமாக இருக்க வேண்டும். விடுதி சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளில் முக்கியப் பங்கு வகித்திருக்க வேண்டும். அவற்றுக்குக் கொடுக்கப்படும் மதிப்பெண்களிலும் அதிகம் பெற்றிருக்க வேண்டும் என விதிகள்.
இவற்றையெல்லாம் சிறப்பாகச் செய்து முடித்தும், எனது விண்ணப்பம் நிராகரிக்கப் பட்டதாகத் தெரிந்து மிகவும் வருத்தமுற்றேன். என்னைவிடக் குறைந்த மதிப்பெண்கள் எடுத்தவர்க்கெல்லாம் இடம் கிடைத்திருந்தது. விடுதிக்கு வெளியே தங்குவதென்றால் அதிகச் செலவாகும். பாபாவின் படத்தின் முன் நின்று கதறியழுது வேண்டினேன். அடுத்த நாள் காலை எனது விண்ணப்பம் ஏற்கப்பட்டதாக தகவல் வந்தது. என் மகிழ்ச்சியைச் சொல்ல வார்த்தைகளே இல்லை. எனது கோரிக்கையைக் கேட்டு பாபா செய்த அற்புதமே இது! உங்களது தளத்தின் மூலம் பாபா மீது என் நம்பிக்கை இன்னமும் அதிகமாகிறது. இந்த நிகழ்வைப் பற்றி எழுதுவதாக நான் எனது 'அப்பா'வுக்கு [அப்படித்தான் பாபாவை நான் அழைப்பேன்!] இதன் மூலம் பூர்த்தி செய்ய முடிந்தது. ஓம் ஸாயி ராம்.

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.