Tuesday, July 23, 2013

My Experiences With Sai Baba -Sai Devotee Selvaraj.


ஸாயிராம்.
அனைவருக்கும் இனிய பாபா நாள் வாழ்த்துகள்.கோவையிலிருக்கும் ஒரு அடியார் தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார். வாழ்வின் பல்வேறு நிலைகளைக் காட்டும் விதமாக அவை அமைந்திருக்கின்றன. பாபாவின் மீதான உறுதியான நம்பிக்கையின் மூலம் அவர் இவற்றையெல்லாம் எதிர்கொண்டிருக்கிறார். நமக்கு எது நல்லதோ, அவற்றையே பாபா எப்போதும் செய்தருளுகிறார். ஜெய் ஸாயிராம். 
-- மனிஷா.
-----------------------

என் மகள் நன்கு படித்தேற பாபா உதவி செய்தார்!

நான் கோவையில் [தமிழகம்] வசிக்கிறேன். மார்ச் 2012 வரை, எனக்கு பாபாவைப் பற்றியே தெரியாது. இரண்டாண்டுகளுக்கு முன் ஆந்திராவில் பணி புரிந்தபோது, இரு கோவில்களுக்குச் சென்றிருந்தேன். ஒன்று, ஷம்ஸாபாத்த்தில் விமான நிலையத்திற்கு அருகில் சிவலிங்க வடிவில் அமைந்திருக்கும் கோவில், மற்றது, ஹைதராபாத்தில் இருக்கும் பிர்லா மந்திரில் இருக்கும் பாபா. நம்பிக்கை இல்லாமலேயே, பாபாவின் சிறிய படம் ஒன்றையும் வாங்கினேன்.
2006-ல் வேலை நிமித்தமாக குடும்பத்துடன் ஷம்ஸாபாத்திற்குக் குடியேறினேன். "ஸ்ரீ ஸாயிபாபா விரத மஹிமை" என்னும் புத்தகத்தை என் மனைவியின் அத்தை கொடுத்தார். வாரங்கல் என்னும் ஊரில் கொஞ்ச காலம் இருந்துவிட்டு, 2007-ல் புதிய வேலை கிடைத்து, கோயம்புத்தூருக்கு மாறினேன். 2010-ல் சிவராம் நகரில் என் பெண்ணின் படிப்பு கருதி, குடியேறியபோது, அந்தப் புத்தகமும் என்னுடன் வந்தது!
+2 தேர்வுக்காக என் மகள் தயார் செய்துகொண்டிருந்தாள். அப்போது என் மனைவி எதையோ தேடும்போது, இந்த நூலைக் கண்டெடுத்து அதைப் படித்தார். அதில் சொல்லப்பட்டிருக்கும் கேதலின் பெற்றோர் கதை, தன்னோடு ஒத்திருத்தலைக் கண்டு,நாமும் இந்த விரதத்தைத் தொடங்கவேண்டும் என என்னிடம் கூறினார். எங்களுக்குத் தெரிந்த அளவில் அதனைச் செய்தோம்.
ஆனால் அதன் பலனாக என் மகளிடம் நல்லதொரு மாற்ற‌ம் தெரியத் துவங்கியது. இவளை ஏன் இந்தப் பள்ளியில் சேர்த்துக்கொண்டோம் எனச் சலித்துக்கொண்டிருந்த ஆசிரியையே பாராட்டும் அளவில், தேர்வில் 1045 மதிப்பெண்கள் எடுத்தாள். ஜெய் ஸாயிராம்.
 -----------------
ஸாயிபாபா என் மகளுக்கு கல்லூரியில் இடம் கிடைக்கச் செய்தார்.

மகளுக்கு நல்ல கல்லூரியில் இடம் கிடைக்க வேண்டி மீண்டும் 9 வார விரதம் தொடங்கினோம். ஒத்திமலை முருகனுக்காக அப்போது நான் மொட்டை போட்டிருந்தேன். என் மகளுக்கு இடம் கிடைத்தால், ஷ்ருங்கார் நகர் பாபாவுக்காக நான் மீண்டும் மொட்டை போட்டுக்கொள்வதாக வேண்டிக்கொண்டேன். பாபாவின் அருளால், கோவையில் பிரசித்தி பெற்ற PSGR கிருஷ்ணம்மாள் கல்லூரியில் அவளுக்கு B.Com. வகுப்பில் இடம் கிடைத்தது. பாபாவுக்கு நன்றி சொல்லும் விதமாக, என் பிரார்த்தனையை நிறைவேற்றினேன்.
---------------------------

ஸாயிபாபா என் சகோதரிக்கு ஆசிரியர் வேலை கிடைக்க உதவினார்!

ஆசிரியை வேலை பார்க்கும் எனது இரண்டாவது சகோதரிக்கு கூடலூர் தாலுக்காவில் இருக்கும் கோலப்பள்ளி என்னும் ஊருக்கு மாற்றலாயிற்று. அங்கெல்லாம் வர இயலாது என அவளது குடும்பத்தில் இருந்தவர்கள் மறுக்கவே, தனியாக எப்படி இருப்பது என அவள் வருந்தினாள். அவளுக்காக நானும் வேண்டிக் கொண்டேன்.
இந்த சமயத்தில், அதே ஊருக்கு மாற்றலான இன்னொரு ஆசிரியையின் கணவர் , என் சகோதரியும் அங்கு வரப்போவதைப் பற்றி அறிந்து, அவளது விலாசத்தை அங்கிருந்து வாங்கிக்கொண்டு, இங்கு வந்து அவளது குடும்பத்தாரின் மனதை மாற்ற உதவி செய்தார். இதை அறிந்த நான் மிகவும் மகிழ்ச்சியுடன் ஷ்ருங்கார் நகர் பாபாவைத் தரிசித்து நன்றி சொல்லி வந்தேன். அவரது ஆசிகளுக்கு அளவே இல்லை!
---------------------

ஸ்ரீ ஸாயி நிவாஸ் எனும் வீட்டை பாபா அளித்தார்!

சொந்த வீடு ஒன்று வாங்க வேண்டும் என என் மனைவி விரும்பினார். எங்களது வருமானத்தில் அது இயலவில்லை. பாபாவின் அருளால் ஒரு வீடு வாங்கும் யோகம் அமைந்தால், கோவிலுக்கு நடந்தே வருவதாகவும், வீட்டுக்கு 'ஸ்ரீ ஸாயி நிவாஸ்' எனப் பெயர் சூட்டுவதாகவும் வேண்டிக் கொண்டேன்.
சில நாட்களில் ஒரு கட்டிய வீட்டைப் பார்த்தோம். அது பிடித்திருந்தாலும், எங்கள் தகுதிக்கும் மீறிய விலையாக இருந்தது. எனவே, ஊரிலிருக்கும் நிலத்தை விற்று, மீதிக்கு கடன் வாங்கலாம் என முடிவு செய்து, என் மாமனாரை அணுகி, அவரே அந்த நிலத்தை வாங்கிக் கொள்வாரா எனக் கேட்டேன். சமீபத்தில்தான் அவர் தன்னுடைய நிலத்தையும் விற்றிருந்தார். ஒரு சில நாட்கள் கழித்து, மீண்டும் கேட்டபோது, தன்னால் வாங்க இயலாது என்று தெரிவித்தார். ஆனால் சற்றும் எதிர்பாரா வண்ணம், தனது நிலத்தை விற்ற பணத்திலிருந்து தனது இரு மகள்களுக்கும் ஆளுக்கு 18 லட்சம் ரூபாய்கள் எனச் சொல்லி, எங்கள் பங்கைத் தந்தார். அவரது மகனை அடுத்ததாக என் நிலம் விஷயமாக அணுகினேன். முதலில் கொஞ்சம் தயங்கினாலும்,, இறுதியில் பாபா அருளால் அதற்கு ஒப்புக்கொண்டார். இதையெல்லாம் சேர்த்து, வங்கியிலிருந்து 3 லட்சம் ரூபாய்கள் மட்டுமே மேல்கடனாக வாங்கி, அந்த வீட்டை வாங்கினோம்.
இரண்டு நாட்களிலேயே அங்கு குடி புகுந்து, கிருஹபிரவேசம் செய்தபோது, 'ஸ்ரீ ஸாயி இல்லம்' எனப் பெயர் வைக்குமாறு புரோகிதரிடம் சொன்னபோது, அவர் அதைச் சொல்லும்போது. நான் முன்னம் வேண்டிய 'ஸ்ரீ ஸாயி நிவாஸ்' எனும் பெய‌ரையே சொல்லி, என்னை மகிழ்வித்தார்!
சில நாட்களுக்குப் பிறகு, வேண்டிக்கொண்டது போலவே 10 கி.மீ. தொலைவிலிருக்கும் பாபா ஆலயத்துக்குப் பாத யாத்திரையாகச் சென்றோம். என் மனைவி எப்படி நடக்கப் போகிறார் என எண்ணினேன். ஆனால், பாபாவைப் போற்றும்ஒரு தமிழ்ப் பாடலில் சொல்லியிருப்பதுபோல, 'நீ நடந்துவர எண்ணம் கொண்டால், நான் உனக்கு ரத்தினக் கம்பளம் விரித்து அழைத்து வருவேன்' எனச் சொல்லியிருப்பது என் வகையில் நிரூபணமானது. ஒரு கஷ்டமும் இல்லாமல், என் மனைவி நடந்து வந்ததோடல்லாமல், 'நடந்தே திரும்பிப் போலாமா?' எனவும் கேட்டு அதிசயப்பட வைத்தார்!
------------------------
ஷீர்டி பயணத்தை இனிதாக்கினார் பாபா!

ஆராய்சிப் படிப்புக்கான உதவித்தொகை கிடைப்பதற்காக, ஒரு நேர்முகத்தேர்வை எடுக்கவேண்டி என் சகோதரியின் மகள் 2012, டிசம்பரில் புனே வரை செல்ல நேர்ந்தது. அப்போது ஷீர்டியும் செல்ல விரும்பி, என்னையும் துணைக்கு வரும்படி கேட்டுக் கொண்டாள். 5 நாட்கள் விடுமுறையெல்லாம் கிடைக்காது என நான் மறுத்தபோது, 3 நாட்களுக்கு மட்டும் உடனிருந்தால், திரும்பி வரும்போது, இன்னொருவரின் துணையுடன் வருவதாக அவள் சொல்லவே, ஒப்புக்கொண்டேன். பயணச் சீட்டுகளை அவளே எனக்கும், என் மனைவிக்கும் சேர்த்து வாங்கினாள். அப்போது என் மகள் தானும் வருவேன் என அடம் பிடிக்கவே, அவசர அவசரமாக இணையத்தின் மூலம், பாபாவின் அருளால் டிக்கெட் கிடைத்தது. அப்படிக் கிடைத்தால், அதற்கான பணத்தை நான் யாசகமாகத் தெரிந்தவர்களிடம் கேட்டு, அதை உண்டியலில் சேர்ப்பதாக பாபாவிடம் வேண்டிக் கொண்டேன். அதே போல, ரூ.1110 என் நண்பர்களிடமிருந்தும் பெற்றேன்.
எங்களது புகைவண்டி கிளம்பும்போதே தாமதமாகி, ஷோலாப்பூர் செல்லும்போதே 6 மணி நேரம் தாமதமாகப் போய்ச் சேர்ந்தது. அங்கே எனது மருமாளின் தோழி, [இவர் ஒரு மருத்துவர். மராத்தியில் திறமையான எழுத்தாளரும் கூட. ஒரே நேரத்தில் இரு கைகளாலும் எழுதக் கூடியவர்.!] எங்களுக்காக உண‌வு கொண்டுவந்து உபசரித்தார். அவரும் ஷீர்டிக்கு எங்களுடன் வருவதாகத் திட்டம். குருத்வாடி என்னும் நிலையம் செல்ல மேலும் தாமதமாகவே, ஷீர்டி செல்லும் வண்டியைத் தவற விட்டுவிடுவோம் என அஞ்சி, பாபாவை வேண்டினேன். எங்களது ரயில் தாமதமாகப் போனாலும், அந்த வண்டியும் தாமதமாகவே வந்ததால், சௌகரியமாக ஷீர்டி சென்றடைந்து, ஒரு விடுதியில் தங்கினோம். டிச. 17-ந் தேதியன்று இனிய பாபா தரிசனம் கண்டோம்.
வரிசையில் நின்றபோது, மன அமைதி இல்லாமல் என்னையும் மீறி அழுதுகொண்டிருந்தேன். ஆலயத்தை விட்டுச் செல்லும்முன், என் மனநிலை மாறி நான் சந்தோஷமாக வேண்டுமென பாபாவை வேண்டினேன். அதே போலவே, பாபா எதிரில் நின்றபோது மிகவும் மகிழ்வடைந்தேன். புனித வேப்பமரத்தின் இலை ஒன்றும் என் மனைவியின் கையில் கிடைத்தது. கொண்டு சென்றிருந்த டிக்கெட் பணத்தை பாபாவுக்கு தக்ஷிணையாக சமர்ப்பித்தேன். பணம் கொடுத்த நண்பர்களுக்கு பாபா சிலை, புகைப்படம் என வாங்கிக் கொண்டேன்.
புனே செல்வதற்கான ரயில் ஏதும் அப்போது இல்லை. பேருந்துகளும் இடமில்லை எனச் சொல்லிவிட்டனர். எப்படியோ, நின்றுகொண்டாவது வருகிறோம் எனச் சொல்லி, அனைவரும் ஏறிக் கொண்டோம். என் மகளுக்கும், மருமாளுக்கும் என் மீது சரியான கோபம்! எப்படி அவ்வளவு தூரமும் நின்றுகொண்டே வருவதென. ஆனால், பாபா அருளால், கொஞ்ச நேரத்திலேயே ஒரு சிலர் வழியில் இறங்கிக்கொள்ள, எங்கள் அனைவருக்குமே இருக்க இடம் கிடைத்தது. . திட்டமிட்டபடியே, அனைவரும் சுகமாக ஊர் திரும்பினோம். இது ஒரு மறக்கமுடியாத இனிய பயணம்! ‌
--------------------

உதி தந்து, அமைதி தந்தார்!

ஷீர்டியிலிருந்து கொண்டுவ‌ந்த‌ உதியை பாபா சிலைய‌ருகே பூஜைய‌றையில் வைத்திருந்தேன். ஒருநாள் அது அங்கிருந்து காணாம‌ல் போயிருந்த‌து! எல்லாமே என்னை விட்டுப் போன‌தாக‌ உண‌ர்ந்து மிக‌வும் வ‌ருந்தினேன். 3 நாட்க‌ள் தேடியும் அது கிடைக்க‌வில்லை. அனைவ‌ருமே வ‌ருந்தி, பாபாவை வேண்டினோம்.
நாக‌ஸாயி கோவிலுக்குச் சென்று, அங்கிருந்து உதி பெற்று வந்து மீண்டும் பூஜையறையில் வைத்ததும் ஓரளவு மனம் சாந்தியடைந்தது. சுமார் ஒரு வாரம் கழித்து, நான் அலுவலில் இருந்தபோது, என் மனைவி என்னை அழைத்து, வீட்டுக்குச் சற்று வெளியே [நாங்கள் முன்னர் தேடிய இடத்திலேயேதான்!] உதிப் பொட்ட‌ல‌ம் கிடைத்த‌தாக‌ச் சொல்ல‌வும், என் ம‌கிழ்ச்சிக்கு எல்லையில்லாம‌ல் போன‌து.
-----------------------

 ஸாயிபாபா எங்க‌ள் வீட்டுக்கு வ‌ந்தார்!

வேலைக்குச் செல்லும் வ‌ழியிலிருக்கும் ஒரு ஆல‌ய‌த்தில், பாபாவின் உருவ‌ச்சிலை ஒன்றின் பின் ப‌க்க‌த்தைக் க‌ண்டேன். கூரை ஏதுமில்லாம‌ல், ம‌ழையிலும், வெயிலிலும் காய்ந்துகொண்டிருந்த‌ அதைப் பார்த்து ம‌ன‌ம் வ‌ருந்தி, அதை என் வீட்டுக்கு எடுத்துச் செல்ல‌ நினைத்தேன். நானும், என் ம‌க‌ளும் கோவிலுக்குச் சென்றோம். அர்ச்ச்க‌ர் அப்போது அங்கில்லை. கோவிலுக்கு உள்ளே சென்று, பாபா சிலையைப் பார்த்த‌போது, அத‌ன் முன் ப‌க்க‌த்தில் ஒரு பெரிய‌ ஓட்டை இருந்த‌தைப் பார்த்த‌தும் ம‌ன‌ம் ப‌த‌றினேன்.
கைவேலையில் சிற‌ந்த‌வ‌ரான‌ என் ம‌னைவியுட‌ன் இது ப‌ற்றிச் சொன்ன‌தும், 'எப்ப‌டியாவ‌து அதை ந‌ம்ம‌ வீட்டுக்குக் கொண்டு வ‌ந்திருங்க‌. அதைச் ச‌ரி ப‌ண்ணிட‌லாம்' என‌ அவ‌ர் சொல்ல‌வே, ம‌றுநாள் மீண்டும் அங்கே சென்றேன். ந‌ல்ல‌ வேளையாக‌ அர்ச்ச‌க‌ர் அங்கிருந்தார். எப்ப‌டியோ வாதாடி, கெஞ்சிக் கூத்தாடி அந்த‌ச் சிலையை எங்க‌ள் வீட்டுக்குக் கொண்டுவ‌ந்தேன். ஓட்டையை அடைக்க‌ 'ப்ளாஸ்ட‌ர் ஆஃப் பாரிஸ்' தேவைப்ப‌ட்ட‌து. அதிர்ஷ்ட‌வ‌ச‌மாக‌ என் அலுவ‌ல‌க‌த்திலேயே அதுவும் இருக்க‌வே, முறைப்ப‌டி அனும‌தி பெற்று, கொஞ்ச‌ம் வீட்டுக்குக் கொண்டுவ‌ந்தேன். இர‌ண்டே நாட்க‌ளில் என் ம‌னைவி அதை மிக‌வும் அழ‌காக‌ச் ச‌ரி செய்துவிட்டார்! புதிய‌ அப‌ய‌க்க‌ர‌த்தோடும், ப‌ட்டாடைக‌ளோடும் இப்போது பாபா எங்க‌ள‌து பூஜைய‌றையில் க‌ம்பீர‌மாக‌ வீற்றிருக்கிறார்!
இதுபோல‌ இன்னும் எத்த‌னையோ நிக‌ழ்வுக‌ள்! பாபாவின் இருப்பை நான் உண‌ர்கிறேன். அவ‌ர‌து ப‌ட‌த்தையோ, உருவ‌ச் சிலையையோ எங்கு க‌ண்டாலும் உட‌னே ம‌கிழ்கிறேன். நான் உங்க‌ளை மிக‌வும் நேசிக்கிறேன், பாபா!
'ஓம் ஸாயி, ஸ்ரீ ஸாயி, ஜெய்ஜெய் ஸாயி' எனும் ம‌ந்திர‌ம் எப்போதும் என்னுள்ளே ஒலிக்கிற‌து!

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.