Wednesday, May 4, 2011

Bank Account Is With Sai-Pass It On -Experience By My Aunty.




அன்பானவர்களே
அனைவருக்கும் பாபா தின வாழ்த்துக்கள்.
நான் என்னுடைய மாமியின் அனுபவங்களை வெளியிட்டு ஒரு வருடத்துக்கும் மேலாகி விட்டது. அவர் பாபாவின் பூரண அருளைப் பெற்றவர்.  இன்று ஏதேற்சையாக அவருடைய அனுபவங்கள் எனக்கு மீண்டும் என் கம்பியூட்டரில் கிடைத்தது. முன்னர் வெளியான அவர் அனுபவங்களைப்  படிக்காதவர்களின் வசதிக்காக அவற்றை இணைப்பாக  மீண்டும் கீழே கடைசியில் தந்து உள்ளேன்.
ஜெய் சாயி ராம்
மனிஷா
-----------------------------------------------------
அன்புள்ள மனிஷா
நான் என்னுடைய சமீபகால அனுபவங்களைக் கூறும் முன் எனக்கு ஏற்பட்ட ஒரு அதிசயத்தைக் கூற விரும்புகின்றேன்.  பாபாவை நம்புபவர்கள் எதற்கும் கவலைப்படத் தேவை இல்லை என்பதற்கு இந்த சம்பவம்  ஒரு பாடம்.  ஒரு முறை நாங்கள் டெல்லிக்கு மாற்றலாகி வந்த போது  குழந்தைகளை பள்ளியில் சேர்க்கும் விஷயத்தில் ஒரு பிரச்சனை தோன்றியது.  நாங்கள் வந்த நேரத்தில் அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் தேர்வு  முடிந்து விட்டது. எங்கும் இடம் காலி இல்லை. நாங்கள் என்ன செய்வது என யோசனை செய்தவண்ணம் இருந்தோம். பாபாவைத் தவிர எங்களுக்கு யாரும் இல்லை. அப்போது ஒரு நாள் அருகில் வாழ்ந்து வந்தவருடன் நட்பு கொண்டு அவருடன்  பேசிக்கொண்டு இருக்கையில் ஏதேற்சையாக  அவரிடம் திடீரென மாற்றல் ஆகி வந்துள்ள எங்களுடைய குழந்தைகளின் பிரச்சனைகளைக் கூறினேன். அவர் உடனே ஒரு பள்ளியின் பெயரைக் கூறி அந்த தலைமை நிர்வாகிக்கு எனது நிலைமையை எடுத்துக் கூறி குழந்தைகளுக்கு இடம் கேட்டு ஒரு விண்ணப்பம் அனுப்புமாறு கூறினார்.
நாங்களும் அதைக் ஏற்றுக் கொண்டு அந்த பள்ளி  நிர்வாகியின் பெயர் மற்றும் பிற விவரங்களைக் கேட்டபோது அவர் தான்தான் அந்த நபர் எனக் கூறியதும் அதிர்ந்து போனோம்.  அடுத்து அவர் கூறியபடி கடிதம் எழுத எங்கள் குழந்தைகளின் பிரச்சனை தீர்ந்தது. பள்ளியில் இடம் கிடைத்தது. அவரிடம் சென்று எங்களுடைய நன்றியை தெரிவித்தபோது அவர் அமைதியாக 'மற்றவர்களுக்கு உன் உதவியை செய் என்ற அர்த்தத்தில் '  நன்றியை அடுத்தவருக்கு தருமாறு கூறினார். ஆகவே பாபா நமக்கு கொடுக்கும் ஆசிகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற பாடத்தை அதில் உணர்ந்தேன் .  உங்கள் வசதிக்கு ஏற்ப, உங்களின் சக்திக்கு உட்பட்ட வகையில் உங்களால் ஆனா உதவியை மற்றவர்களுக்கு செய்யுங்கள். நீங்கள் செய்யும் அனைத்து நல்ல காரியங்களும் பாபாவின் வங்கியில் உங்கள் கணக்கில் போய் சேரும்.
என்னுடைய எண்ணத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அன்னதானம் என்பது மிக புண்ணியமான காரியம். அதுவும் ஏழை எளியவர்களுக்கு வியாழன் கிழமைகளில் போடப்படும் அன்னதானம் புனிதமானது.  நீங்கள் எத்தனை பேர்களுக்கு அன்னதானம் தருகிறேர்கள் என்பது முக்கியம் அல்ல.  தானம் பெறுபவர் ஒருவரே ஆனாலும் பசியோடு உள்ள அந்த ஏழைகளின் வயிற்றின் பசி  அடங்கும் போது  நீங்கள் அடையும்  ஆனந்தம் அளவில்லாதது. அதை அனுபவபூர்வமாக உணருவீர்கள்.  அதை நமது குழந்தைகளுக்கும் கற்றுத் தர வேண்டும். அப்போதுதான் அவர்களும் பகிர்ந்து உண்ணும்  முறையை புரிந்து கொள்வார்கள். அவர்கள் தமது கைகளை எதையும் பெறுவதற்காக நீட்டக் கூடாது, கொடுப்பதற்காகவே நீட்ட வேண்டும் என்ற எண்ணம் அவர்களிடம் வளர வேண்டும்.
 
என்னுடைய  இன்னொரு  அற்புதமான அனுபவத்தை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
என்ன கணவர் வேலையில் இருந்தபோது நாங்கள் பல இடங்களுக்கும் மாற்றலாகி சென்று  கொண்டே இருந்தோம். ஒரு முறை 7000 அடி உயரமான இடத்திற்கு  சென்று வாழ  வேண்டி இருந்தது.  அத்தனை உயரமான பகுதியிலும் மூன்று அடி உயர  சிலையாக ஒரு ஆலயத்தில் பாபா தங்கி இருப்பார் என யார் எண்ணி இருக்க முடியும்?
 நாங்கள் அங்கு இருந்தபோது பாபாவின் ஆலயம் எங்காவது உள்ளதா என தேடியபோது  பாபாவின் ஒரு  ஆலயத்தைக் கண்டு பிடித்தோம். சில வருடங்களுக்கு முன்னர்தான் அங்கிருந்த  அந்த ஆலயத்தில் பாபாவின் சிலையை தேவ்பால் என்ற பக்தர் அங்கு கொண்டு வந்து வைத்து இருந்தார். ஒவ்வொரு வியாழன் கிழமையும் அந்த ஆலயத்தில் விசேஷ பூஜையையும் செய்து வந்தார்.  அத்தனை உயரமான இடத்தில் இருந்ததினால் அது அதிகம் கவனிப்பார் அற்றுக் கிடந்தது. தேவ்பால் ஒவ்வொரு முறையும் உஜ்ஜயினி நகரில் இருந்த சாயிபாபாவின் ஆலயத்துக்கு சென்ற போது  தனது ஆதாங்கத்தை அங்கிருந்த பண்டிதரிடம் கூறி வருந்துவாராம். அப்படிப்பட்ட நிலையில் ஒரு நாள் அந்தப் பண்டிதர் தேவ்பாலிடம் 'இனி கவலைப் படாதே. அனைத்தும் விரைவில் சரி ஆகி விடும்'  எனக் கூறினாராம்.
என்னுடைய கணவரிடம் 2002 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 22 ஆம் தேதி அந்த இடத்தின் தலைமைப் பாதுகாப்புப் பொறுப்பு  வந்தது.  அந்த பாபாவின் ஆலயம் இருந்தப் பகுதியின்  பாதுகாப்புப் பொறுப்பும்  என் கணவரின்  நிர்வாகத்தின் கீழ் வந்தது.  அடுத்து என்ன பாபாவின் ஆலயம் புதுப்பிக்கப்பட்டது. அதே ஆண்டு செப்டம்பர் மாதம் புதுப்பிக்கப்பட்ட பாபாவின் ஆலயம் மக்களுக்கு திறந்து விடப்பட்டது. அங்கு வந்து கொண்டே இருந்த சுற்றுலாப் பயணிகளும்  யாத்ரிகர்களும்  வட கிழக்குப் பகுதியில் உள்ள ஆலயங்களிலேயே மிகச் சிறந்த ஆலயம் இது என அனைவரும் புகழும் வகையில் ஆலயம் அமைந்து இருந்தது.
பாபா தனக்குத் தேவையான ஒன்றை தானே தனது பக்தர்கள் மூலம் நடத்திக் கொள்கின்றார் என்பதே உண்மை.  தேவ்பால் உடல் நலமின்றிப் போனதினால் அந்த ஆலய பூசைப் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்தார்.  ஆகவே நான் தொடர்ந்து அந்த சாயி பாபாவின் ஆலயத்திற்கு ஒவ்வொரு வியாழன் கிழமையும் சென்று பாபா மூர்த்தியின் மீது பால் மற்றும் தேன் ஊற்றி  அபிஷேகம்  செய்து பூஜைகளை செய்தேன். என் மனதுக்குத் தெரிந்தது அந்த பூஜைதான். அதில் என்ன ஆச்சரியம்  என்றால் நான் அங்கு செல்ல முடியாத நேரங்களிலும்  அதே முறையிலான பூஜையையே அடுத்தவர்கள் செய்து வந்துள்ளனர். 
அதே பகுதியில் இன்னொரு ஆலயமும் உள்ளது. அதில் வேறு பல கடவுட்களின் சிலைகள் உள்ளன. ஒரு முறை சிலர் இரண்டு மூர்த்திகளை  அந்த ஆலயத்தில் பிரதிஷ்டை செய்ய உள்ளதாகவும் அந்த நிகழ்ச்சிக்கு வரவேண்டும் என என் கணவரையும் அழைத்தார்கள்.  நாங்கள் அங்கு  சென்றோம்.  பூஜைகளை முடித்ததும் அதுவரை மூடி  வைக்கப்பட்டு இருந்த  மூர்த்தி மீது  இருந்த துணியை எடுக்குமாறு என் கணவரிடம் கூறினார்கள்.  என்ன ஆச்சர்யம். மூடி இருந்த துணியை அகற்றினால் அங்கு  இருந்தது  பாபாவின் சிலைகள். அந்த மகிழ்ச்சியைக் கூற வார்த்தைகளே கிடையாது.
பாபாவின் அருள் உங்களுக்கு இருந்தால் அவர் உங்களை தொடர்ந்து கொண்டே இருப்பார். உங்கள் முதுகின் மீது தனது கையை வைத்துக் கொண்டு உங்களை வழி நடத்திக் கொண்டு இருப்பார். உங்களுடன் அவர் என்றுமே இருப்பதினால்  நீங்கள் பாபாவுடன் எந்த நேரத்திலும், எங்கு இருந்தாலும், எப்படி இருந்தாலும் பேச முடியும். அந்த உண்மையை புரிந்து கொள்ள வேண்டும்.
ஜெய் சாயி ராம்
மாமி
என்னுடைய மாமியின் முந்தைய அனுபவங்கள் :
 
(Translated into Tamil by Santhipriya) 

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.