Friday, February 10, 2012

Shirdi Sai Baba's Grace-Experience Of Sai Devotees-Part 28









4. எனது சகோதரியின் பெண் யூ.கே.ஜி.யில் படிக்கிறாள். அவள் ஒரு பள்ளிக்குள்ளான போட்டியில் [Intra-school competition] தேர்வு செய்யப்படவில்லை. அப்போது நான் ஸாயி ஸத் சரிதத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். தான் தேர்வாகவில்லை எனும் தகவலை அவள் என்னிடம் வந்து சொன்னாள். அவள் வருத்தமாக இருப்பதைப் பார்த்து நான் தளர்ந்து போனேன்.
அப்போது நான் நினைத்தேன்..' ஸாயி தமது குழந்தைகளைக் கவனித்துக் கொள்ளும்போது நாம் ஏன் கவலைப்பட வேண்டும்'. ஸாயியிடம் வேண்டினேன்... 'உமது ஆசீர்வாதங்களை இந்தக் குழந்தையின்பால் செலுத்தி, அவளை உமது வழியில் நடத்துங்கள்' என. ஒரு இரணடு நாட்களுக்குப் பிறகு, அந்தக் குழந்தை வந்து என்னிடம் தான் பாட்டுப் போட்டிக்குத் தேர்வு செய்யப்பட்ட செய்தியைச் சொன்னது. அதில் கலந்துகொள்ள வேண்டியிருந்த மற்றொரு குழந்தை கலந்துகொள்ள முடியாமல் போனதால் தனக்கு அந்த வாய்ப்பு அளிக்கப் பட்டதாகச் சொன்னது.
ஒரே ஒரு நாள்தான் சமயம் இருப்பதால் அவள் எப்படி இதில் சரியாகச் செய்வாளோ எனும் ஐயம் எங்களுக்கு இருந்தது. பள்ளியில் சொல்லிக் கொடுக்கப்பட்ட பாரதியார் பாடல் எனது தாய்க்கும் நன்றாகத் தெரிந்திருந்ததால், அவரே இவளுக்கு அதைச் சொல்லிக் கொடுத்தார். எங்கள் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அவள் மிகச் சிறப்பாகப் பாடி அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்றாள். ஜெய் ஜெய் ஸாயி ராம்.
5. அதே குழந்தை.... இப்போது ஒரு மாறுவேடப் போட்டியில்... அதுவும் மிகக் குறைந்த கால அவகாசத்தில்! எனது சகோதரி அப்போது தனது காலை ஒடித்துக் கொண்டிருந்ததால், அவளால் குழந்தைக்குத் தேவையான உடைகளைத் தேர்வு செய்து குறிப்பிட்ட கால அவகாசத்தில் அவளைத் தயார் செய்ய முடியாத நிலையில் இருந்தாள்.
நானும் எனது வேலையில் தீவிரமாக மூழ்கியிருந்ததால் என்னாலும் கடைக்குச் சென்று, அவளுக்குத் தேவையான உடைகளைக் கொண்டுவர இயலவில்லை. ஆர்வமாக இருந்த அந்தக் குழந்தைக்குச் சரியான நேரத்தில் உதவ முடியவில்லையே எனும் வருத்தம் எங்களுக்கெல்லாம். ஏதோ, வரைபடங்கள் சில மட்டும் தயார் செய்துவிட்டு, அதுவும் போட்டிக்குத் தேவையானாதாக இல்லாத நிலையில், போட்டிக்கு முன் தினம் கவலையோடு இருந்தோம். ஆனால், எங்களை எல்லாம் ஆச்சரியப்படுத்தும் விதத்தில் அவள் முதல் பரிசை வென்றாள். போன வருடம் நாங்கள் எல்லாம் எவ்வளவோ முயன்றும், அவளால் வெல்ல முடியவில்லை. ஆனால், இந்த ஆண்டோ, ஸாயியிடம் செய்த ஒரு சிறிய பிரார்த்தனையால், எங்களது சரியில்லாத முயற்சிகளையும் மீறி அவளுக்கு இத்தனை பெரிய மாற்றம்!
இதுபோல, ஸாயியின் ஆசியும் கருணையும் பற்றிச் சொல்லக்கூடிய நிகழ்வுகளுக்கு முடிவே இல்லை. எனது தலைவன் என்னுடன் இருப்பதை அடிக்கடி உணர்கிறேன். மேலே குறிப்பிட்ட நிகழ்வுகள் சிறுபிள்ளைத்தனமாகச் சிலருக்குத் தோன்றலாம். ஆனாலும் இவற்றையெல்லாம் இங்கே உங்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என எனக்குப் பட்டது. உங்களது ஆசைகள் எவ்வளவு சிறியதாக இருந்தாலும், அவை உண்மையானதாக இருப்பின், அவற்றை ஸாயி அவரது வழியில் நிறைவேற்றுவார் என்னும் செய்தியைச் சொல்லவே இவற்றை உங்களுக்குச் சொன்னேன்.
நாம் அனைவருமே ஸாயியின் ஆசிகளை மேலும் மேலும் பெற்று, அவரிடம் மேலும் ஆழமாக ஈடுபடவேண்டும் என விரும்புகிறேன்.
ஜெய் ஸாயிராம்.
மிகுந்த மரியாதையுடன்,
ரேவதி.


பாபா எங்களை ஆசீர்வதித்தார்

மனிஷாஜி,
அனைத்து ஸாயி அடியார்கள் பயனுறவும் இந்த ஸாயிபாபாவுடனான எனது இந்த அனுபவத்தைத் தயவுசெய்து வெளியிடுங்கள்.
அன்பார்ந்த ஸாயி அடியவர்களே,
ஓம் ஸாயி ராம்.
எனது பெயர் சஞ்சய் ஷர்மா. பங்களூருவில் வசிக்கிறேன். பாபாவின் அற்புத லீலை ஒன்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விழைகிறேன்.
சமீபத்திய புத்தாண்டு தினத்தன்று ஷீர்டியில் இருப்பதற்காக நான் டிசம்பர் 31-ந் தேதியன்று அங்கு சென்றடைந்தேன். கிளம்புவதற்கு முன்பாக, தங்குவதற்கான இடம் தேடி ஷீர்டியில் இருக்கும் அனைத்து விடுதிகளிலும் முயற்சி செய்தபோது, 3,500 - 5000 ரூபாய்கள் நாள்வாடகைக்குக் குறைவாக எதுவுமே கிடைக்கவில்லை. சரி, இந்தப் பிரச்சினையை நமது ஸாயியிடமே விட்டுவிடுவோமென முடிவு செய்தேன். நம்பினால் நம்புங்கள்,... நான் ஷீர்டி சென்றடைந்தபோது, நான்கைந்து விடுதிகளில் விசாரித்தும் எனக்கு தங்குமிடம் கிடைக்கவில்லை. ஆனால், நமக்குத் தேவையான நேரங்களில் எல்லாம் நமது ஸாயி நம்முடனேயே இருக்கிறார் என்னும் உறுதியான நம்பிக்கையின் காரணமாக, கட்டி முடிக்கப்பட்டு ஏழே நாட்கள்தான் ஆகியிருந்த ஒரு புத்தம்புதிய விடுதியில் நாளொன்றுக்கு 2,500 ரூபாய்கள் அறை வாடகையிலேயே எனக்குக் கிடைத்தது. லட்சக்கணக்கான மக்கள் குழுமும் புத்தாண்டு தினத்தன்று, எனக்கு இப்படிக் கிடைத்தது மிகப் பெரிய லீலைதானே!
எனக்கு நிகழ்ந்த அடுத்த அற்புதத்தை நான் என் வாழ்நாள் உள்ளளவும் மறக்க மாட்டேன்.
ஜன. 3-ம் தேதியன்று ஷீர்டியிலிருந்து கிளம்பும்போது, 3' x 4' அளவுள்ள ஒரு பெரிய ஸாயிபாபா படத்தை வாங்கினேன். கர்நாடகா எக்ஸ்பிரெஸ்ஸில் ஸ்8 கோச்சில், 54 & 60 எண்ணுள்ள இருக்கைகள் எங்களுக்காக [நானும், எனது மனைவியும்] முன்பதிவு செய்திருந்தோம். ஒன்று கீழிருக்கை; மற்றொன்று மேலிருக்கை. பெரிய அளவாக இருக்கும் பாபாவின் படத்தை மேலிருக்கையில் வைத்துவிடலாம் என்றும், நாங்கள் இருவரும் கீழிருக்கையிலேயே இரவு முழுவதையும் கழித்து எப்படியோ பங்களூரு செல்லும்வரை சமாளித்துக் கொள்ளலாம் எனவும் என் மனைவி கூற அப்படியே செய்யலாம் என முடிவெடுத்தோம்.
என்னருமை நண்பர்களே, நம்பினால் நம்புங்கள், ... இப்போதுதான் பாபா ஒரு அற்புதத்தை நிகழ்த்தினார். இருக்கை எண் 61-க்கான நபர் வராத காரணத்தால், கூட்டம் அதிகமாயிருந்த, மேல்பதிவு செய்தும் இடம் கிடைக்காத காரணத்தால் பயணிகளில் பலரும் நின்றுகொண்டே பயணித்த, அந்த ரயில் பயணத்தில், மேலதிகமாக ஒரு பைஸா கூடத் தராமல் எனக்கு வசதியாக ஒரு கூடுதல் இருக்கை கிடைத்தது. டிக்கெட் பரிசோதகர் கூட வந்து எங்களைச் சோதிக்காமலேயே நிகழ்ந்த இந்த அற்புதத்தை பாபாவைத் தவிர வேறு எவர் செய்திருக்கக்கூடும்? எனது இருக்கையை நான் பாபாவுக்குக் கொடுத்தேன்; அவர் எனக்கென மற்றொரு இருக்கையைக் கொடுத்தார். தமது அடியவர்கள் தொந்தரவுக்கு ஆளாகாமல், பார்த்துக்கொள்ளும் பாபாவின் அன்பு இதன் மூலம் தெரிகிறது.
இதுபோன்ற பல அற்புதங்கள் எனது வாழ்வில் நிகழ்ந்திருக்கின்றன. அவற்றை கூடிய விரைவிலேயே உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். சஞ்சய் ஷர்மா
ஸாயி ராம்.


ஷீர்டி பயணம்

ஸாயிராம் மனிஷாஜி,
எனது ஷீர்டி பயணம் மிகச் சிறப்பாக இருந்தது. சங்கராந்தி காலம் என்பதால் கோவிலில் கூட்டம் அதிகமாக இருந்ததால் எனக்கு 2 அல்லது 3 நிமிட நேரமே ஸாயி தரிசனம் கிட்டியது. அதன் பிறகு நான் தொண்டி சாவன் பாபாவின் தரிசனத்துக்காக அம்பிகாபூர் [கோபெர்காவ்] சென்றேன். என் தலைமீது கைகளை வைத்து அவர் என்னை ஆசீர்வதித்து என்னிடம் தக்ஷிணை கேட்டார். ஒரு நூறு ரூபாய் நோட்டும், ஒரு பத்து ரூபாய் நோட்டுமாக நான் மொத்தம் 110 ரூபாய்கள் தக்ஷிணையாகக் கொடுத்தேன். அதில் நூறு ரூபாய்த் தாளை மட்டும் தன்னிடம் வைத்துக் கொண்டு, பத்து ரூபாய் நோட்டை எனக்குத் திருப்பித் தந்தார். என்னுடைய கடந்த காலத்தைப் பற்றியும், எதிர்காலத்தைப் பற்றியும் ஏதோ கூறினார். எனக்கு அவர் பேசிய மொழி புரியாததால் என்னால் அதைப் புரிந்துகொள்ள முடியவில்லை.
சாவன் பாபாவைச் சந்தித்து, அவரது ஆசிகளைப் பெற்று எனது விஸா சம்பந்தமாக அவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ள வேண்டுமென நான் மிகுந்த ஆவலாய் இருந்தேன். ஆனால் மொழிப் பிரச்சினை காரணமாக என்னால் அது இயலவில்லை. அவர் சொன்னது எனக்கு விளங்கவில்லை. ஆனால் ஒரு சில நிமிடங்களில் ஒரு முதியவர் அங்கே வந்தார். அவர் சாவன் பாபாவை வணங்கி ஆசிகளைப் பெற்றார். இந்த முதியவருக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தது. எனவே அவர் என்னிடம் வந்தபோது நடந்தவற்றை அவரிடம் விளக்கினேன். பிறகு இந்த முதியவர் என்னிடமும் சாவன் பாபாவிடமும் மாறி மாறி அவரவர் மொழியில் பேசி உதவி புரிந்தார். சாவன் பாபா எனது எதிர்காலம் சிறப்பாக அமையும் எனவும், எல்லாம் நல்லபடியாக நடக்கும் எனவும் சொன்னார்.
ஏனென்று என்னால் சொல்லமுடியவில்லை;.... ஒருவேளை இந்தப் பயணத்தின் மீதும், சாவன் பாபா மீதும் நான் அளவுக்கு மேல் எதிர்பார்த்தேனோ, என்னவோ.... எனக்கு இவையெல்லாம் மனத் திருப்தியை அளிக்கவில்லை. எனது இதயத்தில் ஒரு சிறிய வலியுடன்தான் நான் இல்லம் திரும்பினேன். அதிசயம்! நான் ஊர் திரும்பிய மறுநாள் பாபாவின் படம் அடங்கிய ஸாயி ஸத்சரிதம் புத்தகம் எனக்குத் தபாலில் வந்தது. தனது இடது ஆள்காட்டி விரலில் குங்குமத்துடன் [வழக்கமாக அவரது வலது காலில்தான் இது இருக்கும்] இந்தப் படம் இருந்தது. வெகு நாட்களுக்கு முன்பு நான் ஸாயி ஸத்சரிதம் இலவசமாகப் பெற விண்ணப்பிருந்தேன்.
மற்றுமொரு அதிசயமாக,.... தரிசனத்தால் எனக்கு வேண்டிய அமைதி கிட்டாததால் சோர்வுற்றிருந்த நான் yoursaibaba.com தளத்திற்குச் சென்று எனக்கு ஏன் மனத்திருப்தி கிட்டவில்லை என ஒரு கேள்வி கேட்டேன். அப்போது 116 எனும் எண் அங்கு தோன்றி அதில், ' ஸாயிபாபாவையே நினை; அன்னதானம் செய்; உனது உள்ளக் கிடக்கைகள் யாவும் ஈடேறும்' என இருந்தது.
எனவே, ஸாயி ஸத்சரிதம் என் கைக்கு வந்ததும் அதைச் சட்டெனத் திறந்தேன்... நான் திறந்த பக்க எண்ணும் 116!
பாபா எனது பயணத்தைப் பரிபூரணமாக ஆசீர்வதித்து விட்டார் என மகிழ்ந்தேன்.
இன்னுமொரு அதிசயம்.... ஷீர்டி செல்ல எண்ணி, முன்பதிவு செய்யும் முன்னர், எனது பாட்டியும் எங்களுடன் வர ஆசீர்வதிக்க வேண்டும் என பாபாவை வேண்டினேன். பாபா எனது பிரார்த்தனைக்குச் செவி சாய்த்தார். எங்கள் பாட்டியும் எங்களுடன் வந்தார். ஷீர்டி வருவது இதுவே அவருக்கு முதல் முறை.
பிரார்த்தனைகளை ஷீர்டிக்குக் கொண்டு சென்று பாபாவின் சமாதியில் அவற்றைச் சமர்ப்பித்து விட்டேன். பாபா நம் எல்லாருடைய வேண்டுதல்களையும் நிச்சயமாக ஈடேற்றி நமக்கு அருள்வார்.
ஸாயிராம் பாபா. ஸாயிராம். ஜோதி.
(Translated into Tamil by Sankarkumar)

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.