Wednesday, April 11, 2012

Rama Vijaya -Chapter-17




 ராம விஜயம் -- 17


கூட்டமாக இவர்கள் வருவதைக் கண்ட லக்ஷ்மணன், கைகேயிதான் ராமனைக் கொல்வதற்காக ஒரு படையை அனுப்பியிருக்கிறாளோ எனக் கோபமுற்று, அவர்களை நோக்கி பாணங்களை எய்யத் தொடங்கினான். ஆனால், ராமன் உடனே அவனைத் தடுத்து, வருபவர்கள் நமது எதிரிகள் அல்லர் என நல்லுரை செய்தான். பர்ணசாலையை அடைந்த அவர்களை அன்புடன் வரவேற்று, தந்தையாரின் நலம் குறித்துத் தாய் கௌஸலையிடம் விசாரித்தான்.
ராமன் இப்படிக் கேட்டதும், துக்கம் தாளாமல் கௌஸலை ஒரு வார்த்தையும் பேச முடியாமல் தவிக்க, வஸிஷ்டர் அந்தத் துயரச் செய்தியை ராமனிடம் தெரிவித்தார். ராமன் மிகவும் மனம் வருந்தி சற்று நேரம் பேசாமல் இருந்தான். வஸிஷ்டர் அவனைத் தேற்றி, தன் தந்தைக்கான அந்திமச் சடங்குகளைச் செய்யச் சொல்ல, ராமனும் அவ்வாறே அருகிலிருந்த கயைக்குச் சென்று முறையாகச் சடங்குகளைச் செய்தான்.
கௌஸல்யா, ஸுமித்ரா, வஸிஷ்டர் மற்றும் உடன்வந்த மக்கள் அனைவரும் ராமனை நாடு திரும்புமாறு வேண்டினர். அதற்கு ராமன், 'நான் எப்போதும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுபவன்; என் மனைவிக்கு நம்பிக்கையானவன்; உறுதியான கொள்கை உடையவன். எனவே, நான் எனது தந்தை தந்த சத்தியத்தைக் காப்பாற்றவென, என் தாய் கைகேயிக்குக் கொடுத்த வாக்கிலிருந்து தவற மாட்டேன். வனவாஸ காலம் முடியும்வரை அயோத்திக்குத் திரும்ப மாட்டேன்' என உறுதியாகக் கூறிவிட்டான்.
'நீ அயோத்திக்கு வரவில்லையென்றால், நான் வேறெங்காவது சென்று, நீ நகருக்குத் திரும்பும்வரைக்கும் என் காலத்தைக் கழிப்பேன்' என பரதன் சொன்னான். அவனது தலையை அன்புடன் வருடிய ராமன், 'பரதா, வீணாகக் கலங்காதே. பதினான்கு வருடங்கள், பதினான்கு நாட்கள் கழிந்ததும் நான் நிச்சயம் அயோத்திக்குத் திரும்புவேன். எனவே, நீ அயோத்திக்குத் திரும்பிச் சென்று, நான் வரும் வரைக்கும் என் சார்பில் அரசாள வேண்டும் என விரும்புகிறேன்' எனப் பதிலுரைத்தான்.
உனக்குக் கீழ்ப்படிவதில் எனக்கு மகிழ்ச்சியே, ராமா. ஆனால் நீ இல்லாத அயோத்தியில் என்னால் மகிழ்வுடன் வசிக்க இயலாது. எனவே, தயவு செய்து இந்தப் பதினான்கு வருடங்கள், பதினான்கு நாட்களையும் நான் நந்தி கிராமத்தில் கழிக்க உன் அனுமதியை வேண்டுகிறேன்' எனப் பரதன் மன்றாடிக் கேட்டுக் கொண்டான். அதைக் கேட்டு உருகிய ராமன், 'நானில்லாமல், அயோத்தியில் நீ மகிழ்ச்சியாக இருக்க மாட்டாய் என்றால், நீ நந்தி கிராமம் சென்று வாழ நான் சம்மதிக்கிறேன்' என அனுமதித்தான்.
'ஆனால் நீ மட்டும் சொன்னபடி பதினான்கு வருடங்கள், பதினான்கு நாட்கள் முடிந்ததும் வரவில்லையென்றால், நான் உடனே என் உயிரை மாய்த்துக் கொள்வேன்' என உறுதியாகச் சொன்னான். அவனது சஹோதரப் பாசத்தைக் கண்டு மனம் நெகிழ்ந்த ராமன், தனது பாதுகைகளை அவனிடம் தந்து, நந்தி கிராமத்துக்கு அனுப்பி வைத்தான். பரதன் அங்கே ஒரு யோகியைப் போல இந்தக் காலத்தைக் கழித்தான். ராமன் தனது பாதுகைகளை சத்ருக்னனுக்கும் கொடுத்து, அவனை அயோத்திக்கு அனுப்பி, தன் சார்பில் அரசாளப் பணித்தான். அதன்படியே, கௌஸல்யா, ஸுமித்ரை, மற்றும் அனைத்து மக்களுடன் சத்ருக்னன் நாடு திரும்பினான்.
[தொடரும்]
(Translated by Sankarkumar and uploaded by Santhipriya )

To Read the earlier Chapters Click on the nos given below
முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும்

1    2    3    4    5     6   7     8   9  10   11   12
13   14   15   16   17   18   19   20   21   22
23   24    25   26   27   28   29   30  31   32
 
                          33   34    35   36   37   38   39  40   41   42



Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.