Wednesday, April 11, 2012

Rama Vijaya -Chapter- 18

ராம விஜயம் -- 18


அவர்களெல்லாம் அயோத்திக்குத் திரும்பிய பின்னர், சித்ரகூடத்தில் இருந்த அந்தணர்கள் ராமனிடம் வந்து, 'ராமா, உனது மனைவி மிகவும் அழகாக இருக்கிறாள். நீ எங்களுடன் இருந்தால், அசுரர்கள் இங்கு வந்து நம்மையெல்லாம் தின்று விடுவார்கள். திரிசிரை, கூரன், துஷன் என்னும் அசுரர்கள் இங்கே வந்து சீதையைக் கவர்ந்து செல்லப் போவதாக எங்களுக்குத் தகவல் கிடைத்திருக்கிறது. எனவே நீங்கள் மூவரும் இங்கிருந்து விரைவில் சென்று விடுமாறு கேட்டுக் கொள்கிறோம் ' என வேண்டினர்.
'நீங்கள் யாரும் பயப்படத் தேவையில்லை. இந்தப் பூமியில் இருக்கும் எந்த அசுரர் வேண்டுமானாலும் இங்கு வரட்டும். அவர்கள் அனைவரையும் அழித்து, நான் உங்களைக் காப்பாற்றுகிறேன்' எனத் தைரியம் சொன்னான். ஆனால் ராமனின் வார்த்தையில் நம்பிக்கை வைக்காத அந்த அந்தணர்கள் தங்களது மனைவி,குழந்தைகளை அழைத்துக் கொண்டு அந்த மலையை விட்டு அகன்றனர். விரைவிலேயே, ராமன் தண்டகாரண்யம் நோக்கிப் புறப்பட்டான். செல்லும் வழியில், விராடன் என்னும் அசுரனைக் கொன்றான்.
தும்பரன் என்னும் கந்தர்வனே விராடன் எனும் அசுரன். ஒருமுறை, குபேரன் தும்பரனை அழைத்துத் தன் சபையில் பாடும்படி ஏவினான். குடி மயக்கத்தில் இருந்த தும்பரன் குபேரன் முன் சென்றான். அதைக் கண்டு வெகுண்ட குபேரன் தும்பரனை ஒரு அசுரனாகும்படிச் சபித்து, பத்தாயிரம் ஆண்டுகள் காட்டில் அலைந்து திரிந்து, ராமனின் கையால் சாப விமோசனம் பெறுவான் எனச் சாபம் கொடுத்தான். அதன்படியே, இப்போது ராமனால் கொல்லப்பட்டு, சாபத்திலிருந்து விடுபட்டான்.
ஸீதையுடனும், லக்ஷ்மணனுடனுமாக ராமன் பதின்மூன்று ஆண்டுகள் பல புனிதத் தலங்களுக்கு விஜயம் செய்து காலத்தைக் கழித்தான். அப்படிச் செல்லும்போது, அத்ரி மஹரிஷியின் ஆஸ்ரமத்திற்கும் சென்று மும்மூர்த்திகளின் அம்சமான தத்தாத்ரேயரைத் தரிசித்து வழிபட்டான். அங்கிருந்து அகஸ்திய முனிவரின் இருப்பிடம் சென்றான். இவர் ஒரு சக்தி வாய்ந்த ரிஷி. இவரது சக்தியைப் பற்றிய கதை பின்வருமாறு:
ஆதாபி, வாதாபி, ஆல்வா எனும் மூன்று அசுரர்கள் இருந்தனர். சிவனிடமிருந்து பெற்ற ஒரு வரத்தால், இவர்களுக்கு எவரையும் கவரச் செய்யும் வலிமை இருந்தது. இந்தச் சக்தியினால் அவர்கள் பல பிராமணர்களைக் கொன்று தின்றனர். வாதாபி உணவாகவும், ஆல்வா தண்ணீராகவும் மாறி விடுவர். ஆதாபி ஒரு நல்ல அடியவன் போல வேஷம் எடுத்துக்கொண்டு, அந்தணர்களை தான் படைக்கும் விருந்தையும், நீரையும் பருகுமாறு வேண்டுவான். இதை அறியா அந்தணர்கள் உணவையும், நீரையும் அருந்தியதும், ஆதாபி பலத்த குரலில் வாதாபி, ஆல்வாவின் பெயர்களைக் கூறி அழைப்பான். தனது சஹோதரனின் அழைப்பைக் கேட்டதும், அந்தணர்களின் வயிற்றிலிருந்து கிழித்துக் கொண்டு வெளியே வருவர். இப்படியே, பல அந்தணர்களை அவர்கள் கொன்று, அவர்களது உடல்களைப் புசித்து வந்தனர்.
ஒருநாள் அகஸ்தியர் அந்த வழியே வந்தபோது, ஆதாபி அவரையும் விருந்துக்கு அழைத்தான். அகஸ்தியரும் அவனது அழைப்பை மகிழ்வுடன் ஏற்றார். விருந்தை உட்கொண்டு, நீரையும் அருந்தியபின்னர், வழக்கம் போல, 'ஆதாபி, வாதாபி வெளியே வா; ஆல்வா வெளியே வா' எனக் கூவினான். ஆனால் அவன் திடுக்கிடும்படியாக, அவர்கள் இருவரும் அகஸ்தியரின் வயிற்றைக் கிழித்துக் கொண்டு வரவில்லை. வாதாபியைத் தன் வயிற்றிலேயே ஜீரணம் செய்துவிட்டார் அகஸ்தியர். எப்படியோ அவரது வயிற்றிலிருந்து தப்பிய ஆல்வாவும், ஆதாபியும் பல்வேறு வடிவங்களை எடுத்துக் கொண்டு, தப்பியோட முயன்றனர். ஆதாபியின் தலையை அறுத்து அகஸ்தியர் அவனைக் கொன்றார். ஆல்வா தப்பியோடி கடலில் தன்னைக் கரைத்துக் கொண்டான். அகஸ்தியர் அப்போது அந்தக் கடலையே தன் உள்ளங்கையுள் எடுத்து அதைக் குடித்து அந்த அசுரனையும் அழித்தார்.
[தொடரும்]
(Translated by Sankarkumar and uploaded by Santhipriya )


To Read the earlier Chapters Click on the nos given below
 
முந்தைய பாகங்களைப் படிக்க கீழே உள்ள
எண்கள் மீது கிளிக் செய்யவும் 
 
1 2 3 4 5 6 7 8 9 10 11 12
13 14 15 16 17 18 19 20 21 22
23 24 25 26 27 28 29 30 31 32
33 34 35 36 37 38 39 40 41 42

Loading

0 comments:

Live Darshan Time 4 A M.To 11.15 P.M.(IST). Live Darshan Can Be Viewd Only In Internet Explorer.

Message Here.